Tuesday 19 February 2013

புல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு



 புல்லுக்கு இறைத்த நீர் - குரு

நன்றி : ஆனந்தவிகடன்


விர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.
'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.


வீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான். வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..?' என்று குசலம் விசாரித்தேன்.

என்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான். வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.
'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ?

மெளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக,
'என்ன இந்தப் பக்கம்..?' என்றேன்.

'சும்மா.. லைபிரரிக்கு..!'

அந்த ஒற்றைச் சொல்லுக்கு மேலே அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.
காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும். அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.

ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..?
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள். மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.

அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.

'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.

'ஐயாம் சொறி..!' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.

கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.

என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.
'நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.
'எங்கே இருக்கிறீங்க..? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.
முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.

'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.

'கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..?' என்றான்.

அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.

No comments:

Post a Comment

THANK YOU