Saturday 6 April 2013

விண்வெளிப் பயணம்

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் முற்பகுதியிலேயே அதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. சந்திரனில் முதன் முதலாகக் கால் வைத்தவர்கள் அமெரிக்கர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். விண்வெளியிலே முதன் முதலில் பறந்தவர்கள் சோவியத்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இவர்கள் இரண்டு பேருமே இந்தக் களத்திற்குப் பின்னால் வந்தவர்கள்.
இந்தச் சிந்தனை முதலில் எந்த நாட்டில் தோன்றியது, எந்த விஞ்ஞானிகளிடமிருந்து அது வெளிப்பட்டது, எந்த நாடு முதல் முதலாக ராக்கெட்டைக் குறைந்தது 1000மீ. தூரத்திற்குப் பறக்கவிட்டுப் பரிசோதித்துப் பார்த்தது என்று கேட்டால் அந்த நாட்டினுடைய பெயர் இன்னமும் உலக வரலாற்றின் ஏடுகளில் சரியாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. ஜெர்மனிதான் முதன் முதலில் இந்த ஆய்வுக் களத்தில் முன்னால் நின்றது. ஜெர்மனிக்குத்தான் இதில் ஒரு மிகப்பெரிய சிறப்பு இருக்கிறது.
1903-ஆவது ஆண்டில் ரைட் சகோதரர்கள் விமானம் பற்றிய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த முயற்சிகள் நடைபெற்று வெற்றி பெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் விமானங் களுக்கும் ராக்கெட்டுக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில் விமானங் கள் காற்று மண்டலத்துக்குள்ளே பறக்கின்றன. ராக்கெட்டுகள் காற்று மண்டலத்தைக் கீறி வெளியில் பிரபஞ்சத்துக்குப் போகின்றன. இதுதான் அதனுடைய அடிப்படையான வேறுபாடு.
ஜெர்மன் நாட்டைச் சார்ந்த எருமன் என்கிற ஒரு விஞ்ஞானிதான் முதன் முதலாக ராக்கெட் பற்றிய சிந்தனையை வெளியிட்டார். 19-ஆம் நூற்றாண்டினுடைய இறுதியிலேயே அந்தச் சிந்தனைகள் வெளிப்பட்டன. ஆனாலும் அதற்கான முயற்சிகள் 1920-களிலே தான் நடைபெற்றன. முதன் முதலாக ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஒரு ராக்கெட் 1000 மீட்டர் அதாவது 3000 அடிக்குச் செங்குத்தாக மேலே எழுந்தது. அதுவரையிலே விமானம் என்பதெல்லாம் ஊர்ந்து, ஓடி, எழுந்து, பறப்பது, அதுதான் விமானத்தினுடைய அடித்தளம்.
ஆனால் ராக்கெட் என்பது நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக வானை நோக்கிப் பறப்பது. அப்படி முதன் முதலில் பறந்த ராக்கெட் ஜெர்மனியிலேயிருந்துதான் பறந்தது. அது 1931. பிறகு மெல்ல மெல்ல அந்தத் தொழில் நுட்பம் அங்கே வளர்ந்தது. ஹிட்லர் அந்த நாட்டுக்கு அதிபரானதற்குப் பிறகு ராக்கெட் தொழில் நுட்பத்தை வளர்ப்பதற்கு அவர் பேருதவிகளைச் செய்தார். அவருடைய நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனாலும் அந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் பேருதவிகளைச் செய்தார்.
அதனுடைய விளைவு என்னவாயிற்று என்றால் இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனிதான் முதன் முதலாக இங்கிலாந்தை நோக்கி ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான செய்தி.
ராக்கெட் தாக்குதலை முதன் முதலில் நடத்திய நாடு ஜெர்மனிதான். ஹிட்லர் அதிபராக இருக்கிறபோது இங்கிலாந்து நாட்டின் மீது அந்த தாக்குதல் நடைபெற்றது.
ஆனால் இரண்டாவது உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்குப் பிறகு, அமெரிக்கர்களும் சோவியத்து நாட்டைச் சார்ந்தவர்களும் அந்தத் தொழில் நுட்பத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். அதுவும் சொல்ல வேண்டுமென்றால் சோவியத்துதான் இரண்டாவது உலகப்போரின் இறுதியில் ஜெர்மனியை வெற்றி கொண்டது. அங்கே போன சோவியத்து விஞ்ஞான அறிஞர்கள் வீட்டோ என்கிற ராக்கெட்டையும் அதனுடைய தொழில் நுட்பங்களையும் கைப்பற்றித் தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.
பிறகுதான் சோவியத்திலே விண்வெளி ஆய்வகம் வளர்ந்தது. அதைப் போல ஜெர்மன் நாட்டிலே இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் சிலர் உலகப் போரினுடைய தோல்விக்குப் பிறகு அமெரிக்காவிலே குடி புகுந்தார்கள். அவர்கள் தான் அமெரிக்காவிலே இந்த விண்வெளி ஆய்வை வளர்த்தார்கள்.
எனவே சோவியத்தில் வளர்ந்தது ஜெர்மினியிலே தொடங்கிய ஆய்வு; அமெரிக்காவிலே உருவானது ஜெர்மனியில் இருந்து போன விஞ்ஞானிகள் கொண்டுபோன ஆய்வு. ஜெர்மனி தான் அதனுடைய அடித்தளமாக இருக்கிறது. ஆனாலும்கூட அவற்றைப் பயன்படுத்தி சோவியத்தும் அமெரிக்கர்களும் மிகப்பெரிய வெற்றியை இந்த அறிவியல் உலகத்திலே, விண்ணியல் உலகத்திலே அடைந்திருக்கிறார்கள். அதை மறுக்க முடியாது.
வரலாற்றிலே நாம் குறித்துக்கொள்ள வேண்டிய ஒரு சில நாட்கள் உண்டு. 1957-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி, அது தான் முதன் முதலாக விண்வெளியில் ஒரு ராக்கெட் சீறிப் பாய்ந்த நாள். ரஷ்யாதான் அதை அனுப்பிற்று ஸ்புட்னிக்-1 என்று அதற்குப் பெயர்.
அந்த ஏவுகணைதான் முதன்முதலாக பூமியைச் சுற்றி வந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த ஏவுகணைக்குள்ளே ஒரு நாயை வைத்து அனுப்பினார்கள். ‘லைக்கா’ என்று அந்த நாய்க்குப் பெயர் பாருங்கள், வரலாற்றில் முதன் முதலாக ஏவுகணையில் பறந்தது காற்று மண்டலத்துக்கு வெளியேபோன பூமியைச் சேர்ந்த ஜீவன் ஒரு நாய்தான். ஆனால் மூன்று வாரத்திற்குப் பிறகு அந்த ஏவுகணையும், அந்த நாயும் அப்படியே எரிந்துபோய் விட்டன. எனினும் அந்த முயற்சி ஒரு பெரிய வெற்றி பெற்றது.
பிறகு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, 1916-இல் மறுபடியும் சோவியத்து ஸ்புட்னிக்-2 என்கிற இன்னொரு ஏவுகணையை அனுப்பியது. முதன் முதலாக ஒரு மனிதன் பயணம் செய்தான், மிகத் துணிச்சலாக அந்த ஏவுகணையிலே. ஏனென்றால் முன்னாலே போன நாய் எரிந்து போயிற்று. இவன் திரும்ப வருவானா என்று தெரியாது. ஆனால் முதன் முதலாக ஒரு மனிதன் யூரிகாகரின் என்பது அவனுடைய பெயர். அவன்தான் முதன் முதலாக விண்வெளியிலே பயணம் செய்தான்.
அதற்குப் பிறகு 62-ஆவது ஆண்டு விண்வெளியிலே எழுந்து நடந்து, நடந்து என்பதைவிட மிதந்துகாட்டிய முதல் பெண்மணி வாலன்டினா என்பதை நாம் அறிவோம். வாலன்டினாவினுடைய பெயர் இன்னமும் வரலாற்றில், அறிவியலின் பக்கங்களில் எழுதப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணம் அந்த பெண்மணி தான் முதன் முதலாக வான்வெளியிலே மிதந்து பத்திரமாக பூமிக்குத் திரும்பியவர்.
சோவியத்துதான் விண்வெளி ஆய்விலே இப்படிப்பட்ட முயற்சிகளிலே முதல் வெற்றி பெற்றது. ஆனாலும் நிலவில் போய் கால்வைத்த பெருமை அமெரிக்கர்களுக்கு வந்து சேர்ந்தது. அடுத்தடுத்த முயற்சிகளிலே அவர்கள் இருந்தார்கள். அன்றைக்கு அந்தத் தொழில் போட்டி என்பது தொழில் நுட்பப் போட்டியாக, விண்வெளி ஆய்வுப் போட்டியாக அடிமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையிலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதி வெற்றியை அமெரிக்கர்கள் பெற்றார்கள்.
1969-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 20-ஆம் தேதி மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். முதன் முதலாக நிலவில் மனிதன் கால் வைத்தநாள் அது. மூன்றுபேர் போனார்கள். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், மைக்கேல் கால்வின் என்கிற மூன்று பேர் அந்த ஏவுகணையிலே பயணம் செய்தார்கள்.
அதிலே கூடப் பாருங்கள் மூன்றுபேரும் வான்வெளிக்குப் போனார்கள். ஆனால் மைக்கேல் கால்வின் அந்த ஏவுகணையிலேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. இரண்டு பேர்தான் நிலவில் கால் பதித்தனர். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் தான் முதன் முதலாகச் சந்திரனின் மீது கால் வைத்தார்.
உலகமே அந்த நாளைக் கொண்டாடியது. உலகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக, விஞ்ஞானத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக அது அமைந்தது.
சந்திரனில் மனிதன் கால் வைத்தான். நிலவே வா… வா… என்று நாம் அழைத்துக் கொண்டிருந்தோம். நிலா…நிலா…ஓடிவா என்றோம். அது ஓடிவராது என்று தெரிந்தது. சந்திர பகவான் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம். இல்லை சந்திரன் என்பது ஒரு துணைக்கிரகம். பூமியைப்போல அது இன்னொரு கிரகம் என்பதையெல்லாம் அந்த அறிவியல் ஆய்வு இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியது.
எனவே அன்றைக்குத்தான் மனிதர்கள் முதன் முதலாக நிலவிலே கால் வைத்தார்கள் என்பதைக் காட்டிலும் முக்கியமானது, ஜுலை மாதம் 24-ஆம் தேதி அவர்கள் பூமிக்குப் பத்திரமாகத் திரும்பி வந்து விட்டார்கள் என்பது தான். இது விண்வெளி ஆய்விலே மகிப்பெரிய வெற்றிப்படி என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இதிலே மிகப்பெரிய பங்கு இருந்தாலும்கூட, இந்த விண்வெளி ஆய்வைத் தொடக்கி வைத்தது ஜெர்மனிதான் என்பதை இந்த நேரத்திலே நாம் நன்றியோடு நினைவுகூர வேண்டும்.
(ஒன்றே சொல்! நன்றே சொல்! நூலிலிருந்து)            ----குரு 

கவிஞர் ஜோமல்லூரி


கவிஞர் ஜோமல்லூரி என்பவரை உங்களுக்கு தெரியுமா? தெரியாமல் இருந்தால் புத்தக கண்காட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நீங்கள் சென்றதே இல்லை என்று பொருள். பிரபல கவிஞரான இவர் தன்னுடைய புத்தகங்களை விற்பதற்காக இரண்டு முழு கடைகளை எடுத்து அதில் தன் புத்தகங்களை , அவருடைய மிகப்பெரிய போட்டோக்களுக்கு நடுவே வைத்திருப்பார். அக்கடையில் அவருடைய புத்தகங்கள் மட்டும்தான் கிடைக்கும். தலையில் தொப்பியோடு தாடி வைத்த இந்த நபரின் புத்தகங்களை பிரபல கவிஞர்களான நர்சிம்,நிலாரசிகன்,மணிஜி முதலானோர் படித்து பார்த்து விமர்சித்தால் வாங்க உத்தேசித்திருக்கிறேன். உங்களுக்கு விருதகிரி,வீராசாமி மாதிரியான சீரியஸ் படங்கள் பிடிக்குமானால் இந்த ஸ்டாலுக்கு கட்டாயம் ஒருமுறை விஜயம் செய்துவிடுவது நன்று. புத்தக கண்காட்சியில் சிரித்து மகிழ சிறந்த இடம்.

அங்கே சென்று சிறிது நேரம் சிரித்து இளைப்பாறிவிட்டு நகர்ந்தேன். புக்வோர்ல்ட் புத்தக கடையின் ஸ்டாலில் ஒரே ஆங்கில புத்தகங்களாக குவித்து வைத்திருந்தனர். பல உபயோகமான குண்டு குண்டு புத்தகங்களும் வெறும் 150ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆங்கில புத்தகங்களோடு எனக்கு வம்புசண்டை கத்திக்குத்து என்பதால் நான் எதையும் வாங்கவில்லை. ஆங்கில புத்தக பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கடை புக் வேர்ல்ட். நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்.

புரட்சி புத்தகங்களுக்கு பேர் போன நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் நிறைய மாற்றங்கள். மொக்கை புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதற்கு நடுவில் அந்தகாலத்து கம்யூனிச ரஷ்ய பதிப்புகளாக வெளியான கம்யூனிச புத்தகங்களும் கிடைக்கின்றன. மிக மிக நேர்த்தியாக அச்சிடப்பட்ட அப்புத்தகங்கள் வெளியே பார்க்க பரவசமூட்டினாலும், பிரித்து படித்தால் புரட்டி போடும் ஜிலேபி மொழிபெயர்ப்பு. விலை அச்சிடப்படவில்லை. அக்கால ரஷ்யன் தமிழ் அகராதிகூட மலிவு விலையில் கிடைக்கிறது. நான் எதையும் வாங்கவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்து விட்ட வெளியே வந்து பேச்சரங்கில் அமர்ந்தேன்.

எங்கள் தலைவி சார்த்தரின் வாரிசு தமிழச்சி பேசிக்கொண்டிருந்தார். சார்த்தரும் புத்தக கண்காட்சியும் என்று பேசுகிறாரோ என்கிற பயத்தோடு அமர்ந்தேன். நான் அமர அவர் பேசி முடித்தார். ராஜ்டிவி அகடவிகடம் புகழ் அப்துல்காதர் நகைச்சுவையாக பேசினார். ஆனால் நிறைய டபுள் மீனிங் வசனங்கள்.. பெண்களையும் குழந்தைகளோடு வந்திருந்தவர்களையும் நெளிய வைத்தது. எனக்கும் உச்சா முட்டிக்கொண்டிருந்ததால் கழிவறை பக்கம் ஒதுங்கினேன்.

உள்ளே போனால் போலீஸ் காரர் ஒருவர் கையில் வாக்கி டாக்கியை பிடித்தபடி கிளியர் கிளியர் என்றார். பவுடர் அடித்த குரங்கு போல் இருந்தது பிளீச்சிங் பவுடர் நிரம்பி வழியும் அந்த கழிவறை. தண்ணீர் வசதி கிடையாது, சிறுநீரெல்லாம் எந்த கனெக்சனும் இல்லாமல் மண்ணுக்கே பாய்கிறது. எத்தனை அவசரமாக இருந்தாலும் தவிர்ப்பது நன்று. வியாதிகள் கியாரண்டீட்.

வெறுத்துப்போய் ஞானியின் கடைப்பக்கம் ஒதுங்க, அங்கு எப்போதும் போல பாரதியாரின் படம் விற்பனையாகிக்கொண்டிருந்தது. இம்முறை காந்தி படமும் சேர்த்து விற்றுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஜங்கிள் புக்கின் தமிழாக்கம் (ஒரிஜினலின் மொழிபெயர்ப்பு) கிடைத்தது. உமாப்பதிப்பகத்தில் குறைந்த விலையில் (ரூ.40) போட்டிருக்கின்றனர். புத்தகம் பழையதாக இருந்தாலும் வொர்த்தான நூல். அதே போல நர்மதாவில் காமசூத்ரா புத்தகம், கொக்கேக சாஸ்திரத்துடன் இணைக்கப்பட்டு கிடைக்கிறது. 200ரூபாய்தான். கட்டிளங்காளைகள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். நான் சென்ற ஆண்டே வாங்கிவிட்டேன். இருந்தாலும் இந்த ஆண்டும் புத்தகம் கிடைப்பதால் பொதுநலன் கருதி இத்தகவல் இங்கே. அங்கேயே இயக்குனர் சிம்புதேவன் உதவி இயக்குனராக இருந்த போது வரைந்து எழுதிய கிமுவில் சோமு என்கிற காமிக் புத்தகம் 40 ரூபாய்க்கு கிடைத்தது. உடனே ஒன்றை பார்சல் செய்துவிட்டேன்.

என்னோடு வந்த தோழர் நர்மதாவிலேயே அசோகமித்திரனின் யுத்தங்களுக்கிடையே நாவல் வாங்கினார்.

ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் புத்தகம் பூம்புகார் பதிப்பகத்தில் வாங்கினேன். மூன்று பாகங்கள் கொண்ட இப்புத்தகம், மொத்தமாக 150ரூபாய்க்கு கிடைக்கிறது. லைலா மஜ்னூவின் கதையும் தனிப்புத்தகமாக அதே பதிப்பகத்தில் கிடைத்தாலும் நான் வாங்கவில்லை.

பதிவர்கள் சிலரும், பாராவும் அமர்ந்து ஏதோ முக்கியமான காரியம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். கிழக்கிலும் உயிர்மையிலும் நல்ல கூட்டம். ஆனந்த விகடனிலும் நல்ல கூட்டம். ஏதாவது வாங்கலாமென்கிற ஆசையோடு உள்ளே நுழைந்தேன்.. புத்தக விலையெல்லாம் வெங்காய விலைக்கு இணையாக இருந்தன. 300 ஜோக்குகள் என்கிற குட்டி புத்தகம் 80 ரூபாயாம்! நான் இன்னும் சாருநிவேதிதாவைப் போல பிரபல எழுத்தாளர் ஆகவில்லையே , இவ்வளவு விலை கொடுத்து புத்தகங்கள் வாங்க! நேற்றைய தினம் சுபமாய் முடிந்தது.

இன்றும் போக நினைத்திருக்கிறேன். வாசகர்கள் என்னுடைய எழுதப்படாத புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்க நினைத்தால் மாலை ஆறுமணிக்குமேல் 8.30க்குள் என்னை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பெற்றுக்கொள்ளலாம்!

கன்பூசியஸ்

சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானியான கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்
ஆழமற்ற, மேலோட்டமான திரைப்படம், கன்பூசியஸின் அரசியல் வாழ்க்கையைப் பிரதானப்படுத்தி அவரது ஞானத்தேடுதலை அதிகம் கண்டுகொள்ளாமல் நகர்ந்து போய்விட்டது திரைப்படம்
சாக்ரடீஸ் போலவே கன்பூசியஸ் இளைஞர்களிடம் போதனை செய்திருக்கிறார், கல்விநிலையத்தை உருவாக்கி அங்கே சமகாலப் பிரச்சனைகள் குறித்த வாதபிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார், அதிகாரத்துடன் மோதி தனது கருத்துகளில் உறுதியாக நின்றிருக்கிறார்.
கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி, போர்வீரன், இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர், சீனமரபினை வளர்த்து எடுத்தவர், அரிய தத்துவ ஞானி, இப்படி அவரது ஆளுமை பன்முகப்பட்டது,  வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உருவான ஞானத்தைக் கொண்டே அவர் தனது அறக்கருத்துகளை உருவாக்கியிருக்கிறார், கன்பூசியஸின் சிந்தனைகளை மாபெரும் கற்றல் என்று கூறுகிறார்கள்,
கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் சாணக்கியரின் வாழ்க்கை மனதில் வந்து போகின்றது, அர்த்தசாஸ்திரத்திற்கும் கன்பூசியஸ் சிந்தனைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்ப்படுகின்றன,
கி.மு. 551. சீனாவில் ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள குபூ நகரில் கன்பூசியஸ் பிறந்தார். அவரது உண்மையான பெயர் கொங் சியூ. கொங் என்பது குடும்பப் பெயர். இவரை மாஸ்டர் கொங் என்றே அழைத்தார்கள்.
கன்பூசியஸின் தந்தை 70வது வயதில் ஒரு நடனக்காரியை மறுமணம் செய்து கொண்டார், அவர்களது மூத்த மகனாகப் பிறந்தவர் தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது, பசியின் கொடுமையை சிறுவயதிலே அனுபவித்த காரணத்தால் தனது அறக்கருத்துகளில் பசியைப் போக்குதலை முக்கியமான அறமாக முன்வைத்தார் கன்பூசியஸ்
கன்பூசியஸ் பிறந்த லூ மாநிலம் பண்பாட்டு சிறப்புமிக்க ஒன்றாகும், ஆனால் அங்கே அதிகார போட்டி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அதற்குக் காரணம் மூன்று செல்வச்செழிப்பு மிக்க குடும்பங்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆட்சியை பிடிப்பதற்காக சண்டையிட்டுக் கொண்டனர், அண்டை மாநிலமான க்யூ இதனை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது
கன்பூசியஸ் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்த உள்நாட்டுப்போர்கள், மற்றும் வறுமை காரணமாக சீன தேசம் சிதறுண்டு கிடந்தது, இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது, வலிமையான ஒற்றை மைய அரசு என்ற கோட்பாடு அப்போது வரை சாத்தியமாகவில்லை,
மிதமிஞ்சிய லஞ்சம், ஊழல், வேசைகளின் களியாட்டம், எதிர்பாராத போர் என்று லூ மாநிலம் தத்தளித்துக கொண்டிருந்த சூழலில் அதிகாரப்போட்டியில் அதிகம் பாதிக்கபட்டது அறிவார்ந்த குடும்பங்களே, இவர்கள் பிறப்பில் உயர்குடியாக இருந்த போதும் போதுமான செல்வம் இல்லாத காரணத்தால் கூலிவிவசாயிகளைப் போலவே நடத்தப்பட்டார்கள், கன்பூசியஸின் குடும்பமும் அத்தகையதே.
சிறுவயதில் இசையிலும் விளையாட்டிலும் கன்பூசியஸ் அதிக ஆர்வம் கொண்டிருந்தார், மீன்பிடித்தல், மற்றும வில்வித்தை இரண்டும் அவரது முக்கிய ஆர்வமாக இருந்தன,
அந்த காலங்களில் புத்தகங்கள் அச்சுவடிவம் பெறவில்லை, ஒலைச்சுவடிகளில் உள்ள கவிதைகளை, நீதிநூல்களைத் தேடித்தேடி படித்திருக்கிறார், கல்வியின் முக்கியத்துவம் குறித்து இவரளவு பேசியவர் எவருமில்லை,  இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் வாழக்கை அதிகமாகக் கிடைத்தால்  மரபுக் கவிதைகள் முழுவதையும் ஆழமாகப் பயின்று கொள்வேன் என்று ஆதங்கப்படுகிறார் கன்பூசியஸ்
ஒரு முறை கன்பூசியஸ் தனது பயணத்தின் போது கிராமப்புற இசை ஒன்றினைக் கேட்டு மயங்கி அந்த கிராமத்திலே மூன்று மாத காலம் தங்கிவிட்டார், கிராமப்புற இசையில் உள்ள துள்ளலான தாளம், இனிமை போல வேறு எதிலும் இசையின் உச்சநிலை வெளிப்படுவதில்லை, அது மனதைக் கொந்தளிக்கச் செய்கிறது எனறு கன்பூசியஸ் குறிப்பிடுகிறார்
முந்தைய காலங்களில் அறிஞர்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள கற்றார்கள், ஆய்வு செய்தார்கள், இந்தக் காலங்களிலோ மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுகின்றன, அடுத்தவரின் பாராட்டிற்காக அறிஞராக இருப்பது அவமானத்திற்குரியது என்று கன்பூசியஸ் குறிப்பிடுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சுட்டிக்காட்டப்பட்ட உண்மை இன்றளவும் மாறிவிடவில்லை
தமது 20-ஆவது வயதில் கன்பூசியஸ் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண வாழ்க்கை இனிமையானதாக அமையவில்லை ஆரம்ப காலங்களில் அரசாங்க உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக பணியாற்றினார், அந்த நாட்களில், உணவைப் பகிர்ந்து அளிப்பது தான் சிறந்த நிர்வாகத்தின் ஆதாரப்புள்ளி என்பதை தனது புதிய நடைமுறைகளின் வழியே சாதித்துக் காட்டினார்
வறுமையைப் போக்கிக் கொள்ள பொய், சூது, களவு இல்லாத ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும், உடனடியாக ஏற்றுக் கொள்வேன் என்று கன்பூசியஸ் தனது வேலையில்லாத நாட்களை பற்றிய குறிப்பு ஒன்றில் கூறுகிறார்,
இப்படி வேலைக்காக அலைந்து திரிந்த அவர் சின்னஞ்சிறு அரசாங்கவேலைகளை செய்து அதில் தனது கடுமையான பணியின் சிறப்பு காரணமாக பதவி உயர்வினை அடையத்துவங்கினார்
எது உங்களின் உயர்விற்கான முக்கிய காரணம் என்ற கேள்விக்கு கன்பூசியஸ் வாழ்வியல் அனுபவங்களே என்னை மேலோங்க செய்தன, ஆனால் அனுபவம் பெற்ற அத்தனை பேரும் வாழ்வில் உயர்ந்துவிடுவதில்லை, வாழ்க்கை அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்பவனே உயர்நிலையை அடைகிறான், அதற்கு அறிவை விருத்தி செய்து கொள்வதும், கடின உழைப்பும், தெளிந்த சிந்தனையும், தூய வாக்கும் அவசியமானது என்கிறார்
ஒரு அரசாங்கம் சிறப்பாக செயல்படத் தேவையான நிர்வாகக் கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார். கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையோடு பெரிய கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
தனது  ஐம்பதாவது  வயதில் நீதிபதியாக பதவி உயர்ந்தார். அதன்பின்பு லூ மாநிலத்தின் முதல்வரானார். அவர் ஆட்சியில் குற்றச் செயல்கள்  ஒடுக்கபட்டன, மக்களுக்கு நலன் பயக்கும் பல்வேறு  சமூக சீர்திருத்தங்களை கன்பூசியஸ் நடைமுறைப்படுத்தினார்
இவரது ஆட்சியின் சிறப்பை கண்டு அண்டை மாநில அரசுகள் அவருக்கு எதிராக சதி செய்தன, அதன் காரணமாக தொடர்ந்த இடையூகளை சந்தித்து வந்த கன்பூசியஸ் முடிவில் அரசியலை விட்டு ஒதுங்கி ஊர் ஊராக சுற்றியலைந்து தனது அறக்கருத்துகளை பரப்பி வந்தார், . தனது 72 வது வயதில் கன்பூசியஸ் மரணம் அடைந்தார். இவரது தத்துவங்களை அரச நியதியாக ஏற்றுக் கொண்ட மாமன்னர் அதன்படியே சீனமக்கள் நடக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்
சீனாவின் முதல் தத்துவப் பேராசான் கன்பூசியஸே, இவரது Analects எனப்படும் அறக்கருத்துகளை வாசிக்கையில் சீன சமூகத்தின் அன்றைய நிலையும் அரசின் தெளிவற்ற செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது
ஒரு மனிதன் எவ்வளவு குதிரைகளை வைத்திருக்கிறான் என்பதை வைத்தே அந்த காலத்தில் அவனது செல்வாக்கு மதிப்பிடப்பட்டிருக்கிறது,  நாற்பது குதிரைகளின் உரிமையாளனே என்று கன்பூசியஸ் ஒருவனை அழைக்கும் போது அவன் எவ்வளவு வசதியானவன் என்பதைப்புரிந்து கொள்ள முடிகிறது
உள்நாட்டு போர் முற்றிய சூழல் என்பதால் கன்பூசியஸ் விசுவாசம் மற்றும் கடமை பற்றி அதிகம் பேசியிருக்கிறார், ஒருவன் தனது எஜமானுக்காக எவ்வளவு விசுவாசமாக இருப்பது என்ற கேள்வி பலமுறை அவர் முன் கேட்டப்பட்டிருக்கிறது, கன்பூசியஸ் மதம் சாராத ஒழுக்கமுறை ஒன்றினை அறிமுகப்படுத்துகிறார், இது எளிய மனிதன் தன் வாழ்வின் தவறுகளைத் தானே திருத்திக் கொள்ள வழிவகை செய்வதாகும்
மனிதன் இயல்பிலே தவறினை நோக்கி வசீகரப்படுகின்றவன், அவனை நல்வழிபடுத்த தொடர்ந்த நடவடிக்கைகள் தேவை, அதில் சிலவற்றை சமூகம் மேற்கோள்ளும், பெரும்பான்மை மாற்றங்களை தனிநபரே மேற்கொள்ள வேண்டும், நன்மையை ஏற்றுக் கொண்டு அதன் நெறிகளுக்கு ஏற்ப வாழ்வது என்பது ஒரு தொடர் போராட்டம் என்பதை கன்பூசியஸ் வலியுறுத்துகிறார்
பஞ்சம் பசி பட்டினி என்று அடித்தட்டு மக்கள் வறுமையில் வாழ்க்கையில் அவர்களை ஆள்பவர்கள் மேலும் மேலும் வரிகளை போட்டு, கடுமையான வேலைகளை செய்ய வைத்து மக்களை வதைக்க கூடாது. சிறந்த நிர்வாகம் என்பது மக்கள் பிரச்சனையை சரியாக கையாண்டு உடனடியாக தீர்த்து வைப்பதில் தானிருக்கிறது, எல்லா அரசியல் பிரச்சனைகளுக்கும் தாய் பசி தான் என்கிறார் கன்பூசியஸ்.
ஒரு வில்லாளி அம்பை எய்கிறான், அது இலக்கைத் தாக்கவில்லை என்றால் அவன் தனது அம்பை குற்றம் சொல்வதில்லை, தவறு தன்னுடையது என்று ஒத்துக் கொள்கிறான், அரசும் அதன் நலத்திட்டங்கள் உரியவருக்குச் சென்று அடையவில்லை என்றால் தனது குற்றத்தைத் தானே ஒத்துக் கொள்ள வேண்டும், மாறாக தவறு மக்களுடையது என்றால் அது மோசமான நிர்வாகம் செய்கிற அரசாங்கமாக கருதப்படும் என்கிறார் கன்பூசியஸ்
நீதிநூல்கள் எதை வாசிக்கையிலும் அது தனிமனிதனை எப்படிக் கருதுகிறது, தனிமனிதனின் இருப்பிற்கான ஆதாரங்களாக எதை முன்வைக்கிறது, தனிமனிதன் மேற்கொள்ள வேண்டிய அறங்கள், கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், பின்பற்றவேண்டிய நெறிகள் எவை என்பதையும், அதே நேரம் அரசின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எந்த அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையே வரையறை செய்கின்றன ,
அந்த வகையில் திருக்குறளும் கன்பூசியஸின் சிந்தனைகளும் மிக நெருக்கமானவை, வள்ளுவர் கூறுகின்ற அதே கருத்துகளை தான் கன்பூசியஸ தானும் எடுத்துக் கூறுகிறார்
Order  எனப்படும் சமூகவகைப்பாடு எப்படி உருவாக்கபடுகிறது, அதன் உள்கட்டுமானம் எந்த அறத்தை முதன்மைப்படுத்துகிறது, சமூகத்தின் உள்வெளி தளங்கள் எவ்வாறு பிளவுபடுகின்றன என்பதை கன்பூசியஸ் தெளிவாக ஆராய்கிறார்,  Polarity  எனப்படும் முரண் இயக்கதை கவனப்படுத்தி புதியதொரு தர்க்கவியலை கன்பூசியஸ் உருவாக்கியிருக்கிறார்.
Knowing  என்ற சொல் தத்துவப் பாடத்தில் மிக முக்கியமான ஒன்று, அதை எளிதாக வரையறுத்துவிட முடியாது, உள்வாங்கும் முறைகளின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்லாம், இந்த அறிதலின் பல்வேறு நிலைகளை, அதன் பின்னுள்ள சமூக்காரணிகளை கன்பூசியஸ் தீர்க்கமாகச் சுட்டிக்காட்டுவதை அவரது நீதிநூல்களை வாசிக்கையில் அறிந்து கொள்ள முடிகிறது
தவறு செய்தவர்களாக ஒதுக்கபட்ட குற்றவாளிகள், வேசைகள், திருடர்களை தேடிச்சென்று சந்தித்து அவர்களுடன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றியிருக்கிறார் கன்பூசியஸ், நான்ஷி என்ற அழகான இளம்பெண்ணை தேடிச்சென்று அவளுடன் தங்கி போதனைகள் செய்திருக்கிறார் கன்பூசியஸ், இதை ஒரு குற்றமாக அவரது சீடர்களில் சிலரே சொல்லிய போது தான் மனிதர்களை அவர்களின் செயல்களைக் கொண்டு பேதம் பார்ப்பதில்லை, மனித இயல்பை அறிவதே எனது வேலை என்கிறார் கன்பூசியஸ்
தொடர்பயணத்தின் போது இவரை கொல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன, ஒரு தாக்குதலில் இவரது சீடர் யென் யூ இறந்து போயிருக்கிறார், கிறுக்குதனம் பிடித்த முட்டாள் என்று இவரை பல மாநிலங்களில் உள்ளே வரவிடாமல் துரத்தியிருக்கிறார்கள், அதே நேரம் உள்நாட்டுக் கலகங்களை கட்டுபடுத்த விரும்பிய ஆட்சியாளர்கள் இவரை அழைத்து உரிய ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள்
தனது மகனின் எதிர்பாரத மரணம், நண்பர்களின் சாவு, தான் நேசித்த ஆட்சியாளர்கள் அதிகாரப்போட்டியில் படுகொலை செய்யப்பட்டது என்று தனது முதிய வயதில் தொடர்ந்த வேதனையில் வீழ்த்த கன்பூசியஸ் சில மாதங்கள் யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாக வாழ்ந்திருக்கிறார், சீனாவில் இன்று கன்பூசியஸ் ஒரு கடவுளை போல வழிபடப்படுகிறார். இவரது நீதிநூல் சீனாவின் தேசிய அடையாளமாக கருதப்படுகிறது
கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்ற படமாக்க போகிறார்கள் என்றதுமே சீனர்களிடம் பெரிய எழுச்சி உருவானது, முன்னதாக கன்பூசியஸ் வாழ்க்கைவரலாறு ஆவணப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும், கறுப்பு வெள்ளை, மற்றும் கலர்படமாகவும் வெளியாகி உள்ள போதும் இன்றுள்ள சினிமா தொழில்நுட்பத்தை கொண்டு மிக சிறப்பான ஒரு படத்தை உருவாக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு சீனமக்களிடம் இருந்தது, ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை,
வெற்றிகரமான குங்பூ படங்களில் நடித்த Chow Yun-fat கன்பூசியஸாக நடித்திருக்கிறார், போர்கலை படங்களில் தொடர்ந்து நடித்தவர் என்பதால் சௌ யுன் பேட்டின் உடல் இறுக்கமானதாகவே இருக்கிறது, அவரிடம் ஞானியின் உடல்மொழியைக் காணமுடியவில்லை,
படத்தின் துவக்கத்தில் வயதான கன்பூசியஸ் தனது கடந்த காலத்தினை நினைவுபடுத்திப் பார்க்கத் துவங்குகிறார், தனது சொந்த மாநிலமான லியூ பகுதியின் மேயர் பதவியில் இருந்து மந்திரி பதவிக்கு உயர்த்தபடுகிறார் கன்பூசியஸ்,
அப்போது ஒரு அடிமைச் சிறுவனை அவனது எஜமானன் இறந்து போன காரணத்தால் உயிருடன் புதைக்க முற்படுகிறார்கள், அது தான் அன்றைய மரபு, இந்தக் கொடூரத்தை கண்ட கன்பூசியஸ் மனம் கொதித்து சிறுவனைக் காப்பாற்றுகிறார், இது ஒரு தவறான செயல் என்று கன்பூசியஸ் குற்றம் சாட்டப்படுகிறார், ஆனால் அவர் தனது மனிதாபிமானம் மிக்க செயலை நியாயம் என்கிறார், இந்த பிரச்சனை புகையத் துவங்குகிறது
கன்பூசியஸ் சீனா முழுவதும் சுற்றியலைகிறார், அவர் தான் கன்பூசியஸ் என்று அறியாதபடி எளிய மனிதனைப்போல மக்களுடன் ஒன்று கலந்து வாழ்கிறார், நீதிக்கருத்துகளை முன்வைத்து உரையாற்றுவதுடன் பழமையான சீனமரபு இலக்கியங்களுக்கு உரை எழுதி அவற்றை பதிப்பிக்க முயற்சிக்கிறார் என்று அவரது முதுமையான நாட்களை படம் விவரிக்கிறது
வணிக நோக்கத்திற்காக படத்தில் நான்ஷியுடன் கன்பூசியஸிற்கு ஏற்படுகின்ற காதலும், ஏக்கமும், தவிப்பும் கவர்ச்சியாக காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன
கன்பூசியஸின் வாழ்க்கை குறித்த பிபிசியின் டாகுமெண்டரிப் படம் இதைவிடவும் சிறப்பானது, அவதார் படத்துடன் போட்டியிடுவதற்காக பெரிய பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் வெறும் அலங்காரத் தோரணமாகவே வெளியாகியுள்ளது
கன்பூசியஸை பற்றி அறிந்து கொள்ள வாசிக்கபட வேண்டிய நூல் The Analects of Confucius, இது அவரது அறக்கருத்துகளின் தொகைநூல், அதில் எனக்கு பிடித்தமானதொரு மேற்கோள் இருக்கிறது
To study and not think is a waste. To think and not study is a danger           குரு
••••

ஆயிரத்தோரு அராபிய இரவுகள்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்களுக்கும் மேலாகிறது. இன்றைக்கும் அந்த திரைப்படத்தின் சுவாரஸ்யம் குறையவேயில்லை. கோடை விடுமுறையின் போது சிறார்களுடன்  மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.

ஆரவாரத்துடன் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தார்கள். படம் முடிந்த போது அலிபாபாவின் சாசகங்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்து போயிருந்தன. 


அன்று மாலையில் சிறுவர்கள் விளையாடும் போது ஒரு கதவை பிடித்து கொண்டு அண்டா ஹா ஹசம். அபு ஹா குகூம் திறந்திடு சீசேம் என்று அலிபாபாவில் திருடர்கள் குகையை திறக்கும் மந்திரச்சொல்லை சொல்லி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 நானும் இந்த படம் பார்த்த வயதில் இப்படி தான் விளையாடிக் கொண்டிருந்தேன். இன்றைக்கும் அந்த சொற்கள் மந்திர குகையின் வாசலை திறந்துவிடும் என்ற நம்பிக்கை அப்படியே மனதில் பதிந்து போயிருக்கிறது.

உலகின் மிகப்பழமையான கதைத்தொகுதி ஆயிரத்தோரு அராபிய இரவுகள். சாவின் முன்னால் அமர்ந்தபடியே ஷரசாத் ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்வாள். ஆயிரத்தோரு இரவுகள் அவள் சொன்ன கதைகள் கேட்டு அவளை உயிருடன் விட்டுவிடுவான் அவளது கணவன்.

இந்த கதைகளின் வழியே அரபு தேசத்தின் பழமையும் தொன்மையும் மிகை கற்பனையும் பாக்தாத் நகரின் மீதான புனைவுகளும் ஒன்று சேர்ந்து வெளிப்படுகின்றன.

ஆயிரத்தோரு இரவுக்கதைகளை வாசிக்கையில் இந்திய கதை மரபின் தொடர்ச்சியை காண முடிகிறது. குறிப்பாக திருடர்களை பற்றிய கதைகள் இந்தியாவில் அதிகம். நாட்டார் கதை மரபில் திருடர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. திருடர்கள் வெறும் சாகசகாரர்கள் மட்டுமில்லை. அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள். அதிகாரத்திற்கு எதிரானவர்கள்.

தமிழ் கதைகளில் வரும் திருடர்கள் மன்னர் காவலை மீறி அரண்மனையில் திருடுவதை தான் பெரிதாக நினைக்கிறார்கள். சில நேரங்களில் அரசனையே மயக்கி கட்டி திருடி வந்துவிடுகிறார்கள். திருடனை அரசன் பிடிக்க முடிவதேயில்லை. பலநேரம் திருடன் திருடப்போன இடத்தில் விதவிதமான சாப்பிடுகிறான். தூங்குகிறான். காதலிக்கிறான். என்றால் திருடன் நம் எல்லோருக்குள்ளும் உள்ள ஒரு அம்சமே.

அராபிய இரவுக்கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் தான் சிந்துபாத். பலமுறை சிந்துபாத்தின் கடற்பயண சாகசங்கள் படமாக்கபட்டிருக்கின்றன. தமிழில் இது தனித்து படமாக்கபடவில்லை.

அலிபாபா கதை பாக்தாத் நகரில் நடக்கிறது. அராபிய கதைமரபில் இது ஒரு இடைசெருகல் கதை என்றும் அறியப்படுகிறது. 

அராபிய கதையில் வரும் அலிபாபா ஒரு நாள் திருடர்கள்  தாங்கள் திருடிய பொருட்களை புதைத்து வைத்துள்ள குகையை காண்கிறான். அங்கே திறந்திடு சீசேம். என்றால் கதவு திறக்கும். மூடிடு சீசேம் என்றால் கதவு மூடிவிடும் என்பதை அறிந்து கொள்கிறான்.

திருடர்களுக்கு தெரியாமல் பொருட்களை திருடி வந்துவிடுகிறான்

அலிபாபா திருடிய தங்கத்தை நிறுத்து பார்க்க தனது அண்ணியிடம் இருந்து ஒரு தராசை வாங்கி வருகிறான். அவளோ அந்த தராசில் கொஞ்சம் அரக்கை ஒட்டி வைத்து அலிபாபா எதை நிறுத்தான் என்று கண்டுபிடிக்கிறாள். இதை அறிந்த அலிபாபாவின் அண்ணன் காசிம் தானும் திருடர் குகைக்கு போய் புதையல் எடுக்க விரும்பி மாட்டிக் கொள்கிறான்.

அவனை திருடர்கள் கொன்றுவிடுகிறார்கள். கொன்ற உடலை யாரும் அறியாமல் எடுத்து வந்து தைத்து உடலை மறைத்துவிடுகிறான் அலிபாபா. செத்துபோன உடல் காணாமல் போகவே இந்த திருட்டில் இன்னொருவனுக்கும் பங்கிருக்கிறது என்று நம்பிய திருடர்கள்  அலிபாபாவை தேட துவங்குகிறார்கள்.

இதிலிருந்து தந்திரமாக தப்பிக்கிறான் அலிபாபா. முடிவில் எண்ணை வணிகர் போல வந்த திருடர் தலைவன் அலிபாபா  அடிமை காதலியை கண்டுபிடிக்கிறான். அவளை பிடித்து வைக்கவே  அவளை மீட்க சென்ற அலிபாபா திருடனோடு சண்டையிட்டு தனது அடிமை காதலியை மீட்டு அவள் மூலம் திருடர்களை ஏமாற்றி மலையில் இருந்து தள்ளிவிடுகிறான் . 

இந்த கதை சற்று உருமாற்றங்களுடன் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. எம்.ஜி.ஆர் தமிழிலும் என்டி ஆர் தெலுங்கிலும் ஹிந்தியில் தர்மேந்திராவும் அலிபாபாவாக நடித்திருக்கிறார்கள்

அது தவிர வீடியோ விளையாட்டாகவும் காமிக்ஸ் புத்தகமாகவும், குழந்தைகள் சினிமாவாகவும் ஹாலிவுட்டிலும் ஜப்பானிலும் வெளியாகி உள்ளது.

 சுஜாதா வசனத்தில் ஆங்கில அனிமேஷேன் படமாக மீடியா ட்ரீம்ஸ் உருவாக்கியுள்ளது

எம்.ஜி. ஆர் நடித்த அலிபாபா 1956ல் வெளியானது.  மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. டி. ஆர் சுந்தரம் இயக்கம். தமிழின் முதல் கலர்படம் இதுவே. திருச்செங்கோடு ராமலிங்க சுந்தரம் என்பது தான் டி. ஆர் சுந்தரத்தின் பெயர்.

வசதியான நூற்பாலைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்திற்கு சென்று டெக்ஸ்டைல் தொழிற்நுட்பம் படித்து வந்தவர். எஸ்எஸ் வேலாயுதம் பிள்ளையுடன் இணைந்து இவர் சேலத்தில்  ஏஞ்சல் பிக்சர்ஸ் என்ற விநியோக நிறுவனத்தை துவக்கினார்.

அதில் கிடைத்த பணத்தில் கல்கத்தா சென்று இரண்டு படங்களை தயாரித்தார்கள். அந்த லாபத்தில் சேலத்தில் மார்டன் தியேட்டர்ஸ் உருவாக்கபட்டது. சதி அகல்யா இவர்களது முதல்படம் இவரது படப்பிடிப்பு அரங்கில் 250 பேர் முழுநேர ஊழியர்களாக வேலைபார்த்தனர்.

அலிபாபா அவரது பிரம்மாண்டமான தயாரிப்பு . இந்த படத்தில் நடனமாடுகின்ற பெண்களில் ஒருத்தியாக ஹிந்தி சினிமாவின் தாரகை வஹிதா ரஹ்மான் ஆடியிருக்கிறார். வஹிதா ஹிந்தி சினிமாவில் அங்கீகாரம் பெறாத காலமது.

எம்.ஜி. ஆருக்காக அராபியக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்ப்பட்டன. முதல் மாற்றம் அராபிய கதையில் வரும் அலிபாபா இளைஞன் இல்லை. அவனுக்கு திருமணமாகி  மகன் இருக்கிறான். அவனது அடிமை தான் மர்ஜீயனா. இப்படி தமிழுக்கு ஏற்ப மாற்றம் செய்திருக்கிறார்கள்

எது அலிபாபா படத்தை இன்றும் சுவாரஸ்யமானதாக்குகிறது. முதலில் திருடர்கள் உலகம். அவர்கள் ஒரு குகையில் வசிப்பது. நாற்பது பேர் ஒன்று சேர்ந்து திருட செல்வது. அந்த குகையின் உள்ளே கையால் சுற்றும் இயந்திரம். அதை இயக்கும் மனிதர்கள். திருடர் தலைவனின் அண்டாஹாஹசம் என்ற அடிதொண்டை குரல்.

அடுத்தது வறுமையில் உள்ள ஒருவனுக்கு புதையல் கிடைப்பது போன்று எதிர்பாராமல் பணம் கிடைப்பது. அல்லது திருடர்களிடம் திருடுவது. அதை கண்டு பொறமை படுகின்றவன். அதில் மாட்டிக் கொண்டு உயிர்விடுவது.

இந்த படத்தில் தங்கவேலு செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அவர் தன் கையில் பச்சை குத்திக் கொண்ட பெண் உருவத்துடன் பேசிக் கொண்டேயிருப்பார். ஒரு முறை அவரை இறந்த மனிதன் உடலை பச்சை குத்த அழைத்து போவார்கள். அந்தக் காட்சி இன்றைக்கும் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது

திருடர்கள் அலிபாபாவை கண்டுபிடிக்க அவன் வீட்டின் வெளியே சங்கேத குறியிடுகிறார்கள். அதை அறிந்த அவன் பலவீடுகளிலும் சங்கேத குறியீடுகிறான். அதுபோல மரபீப்பாக்களில் ஒளிந்து கொண்டு திருடர்களை அருவியில் தள்ளிவிடுவது என்று திரைக்கதை அமைப்பில் பல சுவாரஸ்யங்களை இந்த படத்தில் காணமுடிகிறது

உடைகள், ஒப்பனைகள் நகரவீதிகள் யாவும் பாக்தாத்தின் அராபிய கலாச்சாரம் என்ற போதும் அதை தமிழ்மக்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காரணம் கதை செல்லும் வேகம். மற்றும் பாடல்கள் ,

மாசிலா உண்மை காதலே ஏ,எம்,ராஜா. பானுமதியின் பாடல் இன்றைக்கும் மெய்மறக்க செய்கிறது

இந்த படம் இன்றைக்கும் ரசிக்கபடுவதற்குமுக்கிய காரணம் நம் மனதில் இது போன்ற திருடர்களை பற்றிய சாகசக்கதைகள் பால்யத்தில் கேட்டு ஆழமாக புதைந்து போயிருக்கிறது. மற்றது  கதை சொல்லும் முறை. உலகின் எல்லா கலாச்சாரத்திலும் கதை சொல்லல் முக்கிய அறிதல் முறையாகவே உள்ளது .

இப்படி நமக்கு வெளியில் உள்ள ஒரு கலாச்சாரத்தின் கதையை நாம் உருமாற்றி தமிழில் நாவலாகவோ, படமாகவோ செய்வது மிகவும் குறைவு. அதனாலே இன்றைக்கும் அலிபாபா படம் முக்கியமானதாகவே இருக்கிறது

விளையாடி விளையாடி சிறார்கள் தங்களை திருடர்களாக நினைக்கிறார்கள். வீட்டின் கதவுகள் குகையாகின்றன. சிறார்களில் ஒருவன் கூட தன்னை அலிபாபா என்று சொல்லிக்கொள்ளவேயில்லை. அலிபாபாவை விடவும் திருடன் தான் அவர்களை வசீகரம் செய்கிறான்.

அலிபாபா போல நூறு நூறு கதைகள் ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் உள்ளது. கதையில்லை என்று அலுத்துக்  கொள்ளும் வெகுஜன சினிமா இந்த கதைகளஞ்சியங்களை மறந்து பல வருசமாகி விட்டது.

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்... :) (ஒரு பக்க வரலாறு...)


------------------------------------------------------------------------------------------
1893-ம் வருடம். தென்னாப்பிரிக்காவின் ஆளரவம‌ற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24 வயது இளைஞன். ரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தனக்கே இந்த கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இந்தியர்களுக்கு என்னெவல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விகள்தான் அவனிடம் அப்போது இருந்தது. இரெவல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண் விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும் அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து, ‘மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்’ என்று போராட்டத்தை தொடங்கினான். அதில் வெற்றிபெறவும் தொடங்கினான். ஆம்... பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன்.

21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தின்
வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது. 1869-ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பன்னிரெண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்தியேபாதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்கு
சென்றவர், கோர்ட்டுக்குக் கொண்டு சென்ற வழக்குகளைவிட, கோர்ட்டுக்கு
வேளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம்.

தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது. போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக ‘அகிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘‘ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் உறுதியுடன் நின்று சாத்வீக‌மாக போராடுவதுதான் உண்மையான வீர‌ம், எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல’’ என்ற காந்திஜியின் அகிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான், சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழுந்தபோது, ‘‘மன உறுதியுடன் போராடினால், வெற்றி நிச்சயம்’’ என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.

1930-ம் வருடம். 61 வயதான காந்தி, உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து ‘தண்டி யாத்திரை’யை தொடங்கினார். 241 மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி, ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

காந்தியின் மன உறுதியையும் அகிம்சையின் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.
1947-ம் வருடம். காந்தியின் இந்த‌விடாத போராட்டத்தால், இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்தும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக் கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

‘120 வயதுவரை வாழ்ந்தால் மட்டுமே நான் நினைத்திருக்கும் எல்லா
காரியங்கைளயும் செய்து முடிக்க முடியும்’ என்ற காந்திஜியை 78வது வயதில்
மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்துவைத்தான் நாதுராம் வினாயக
கோட்ஸே. காந்தி மறைந்தாலும் மன உறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ,
அங்ெகல்லாம் ெவற்றி உருவத்தில் அவைர தரிசிக்க முடியும்.

                                                                                                         குரு
                                                                                                          

மனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே! (ஒரு பக்க வரலாறு... :) )


ஜே.கிருஷ்ணமூர்த்தி
------------------------------------------------------------------------------------------
நெருக்கடி நிலையை இந்தியாவில் அறிவித்திருந்த இந்திராகாந்தி, ஆலோசனைக்காக தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் வந்திருந்தார்.
‘‘நான் ஒரு புலியின் மீது ஏறி அமர்ந்துவிட்டேன். இறங்க முடியாமல் தவிக்கிறேன்’’ என்றார் இந்திரா.
‘‘புலியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதையும் அறிந்திருப்பீர்களே..?’’ என்றார் ஜே.கே.
‘‘அப்படியானால், என்னை நான் மாற்றிக்கொள்ளத்தான்
வேண்டுமா?’’ என்று இந்திரா கேட்க,
‘‘மாறுதல் என்பது தாற்காலிக சந்தோஷம் தரலாம். ஆனால், அதுவே தீர்வாகாது.மனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்றார் ஜே.கே.

அதன் பின்னர், நெருக்கடிநிலை விலக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்து, பல்வேறுவழக்குகளில் கைதாகி, இந்திரா ஜெயிலுக்குப் போனார். மீண்டும் அடுத்த தேர்தலில் வெற்றி கிடைத்தது. அந்தச் சமயத்தில், ‘‘நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டு விழிப்பு உணர்வு அடைந்து, சோதனைகளைத் தாங்கிக்கொள்வது என முடிவு எடுத்தேன். அதன் பலனாகவே, மீண்டும் எனக்கு வெற்றி கிட்டியிருக்கிறது’’ என்று மனம் திறந்து சொன்னார் இந்திரா.

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் 1895-ல், ஒரு தாசில்தாரின் எட்டாவது
குழந்தையாகப் பிறந்தார் ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. அவரது பத்தாவது வயதில்
தாயார் மரணம் அடையவே, தந்தை நாராயணய்யா சென்னைக்குக் குடி பெயர்ந்து,அடையாறில் அப்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமயில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் உதவிச் செய‌லாளராக வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தியும் அவரது தம்பி நித்யாவும் சபைக்குத் தத்துக்
கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய முறைப்படி கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

1925-ம் ஆண்டு தம்பி நித்யாவின் மரணம், கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையான விழிப்பு உணர்வைக் கொடுத்தது. ‘ நெருங்கியவரின் மரணத்தின்போது நாம் கண்ணீர் வடிப்பது, உண்மையில் இறந்தவருக்காக அல்ல; நாம் முன்பு போல் வலிமையாக இயங்க முடியாது, அவர் மூலம் நமக்கு இனி சந்தோஷமோ, உதவிகளோ கிடைக்காது என்பதாலேயே அழுகிறோம்’ என்பதைக் கண்டுகொண்டார். 1929-ம் வருடம் ‘அனைத்துலக ஆசான்’ என்ற பட்டத்தையும், கோடிக்கணக்கான டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் தூக்கி எறிந்த கிருஷ்ண மூர்த்தி, ‘‘நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்பிலும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான், மக்களுக்குச் சுதந்திரம் பற்றி என்னால் விளக்கிச் சொல்ல முடியும்’’ என்றார்.

‘‘கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று, தேசப்பற்று... எல்லாமே மனித ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. மத மாற்றம், கொள்கை மாற்றம் போன்றவை மனித குலத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாது.
மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்று தனது 90-வது வயதில் மரணமடையும் வரை, உலகெங்கும் சுற்றிப் போதித்தார் ஜே.கே.

ஜே.கே வைப் புரிந்துகொள்ளவும், பின்பற்றி நடக்கவும் மிகக் கடினமானவர் என விமர்சனங்கள் உண்டு. ஆனால், ‘மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’ என்ற அவரது மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை மாற்றுக் கருத்து இல்லை.
------------------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ

மிருகம் உருவான கதை..!





என் கழுத்தில் கயிறு ஒன்று கட்டப்பட்டபோது நான் அமைதியாகவே இருந்தேன். கொஞ்சம் தலையைத் தாழ்த்தி வாகாக என் கழுத்தைக்கூட நீட்டினேன். ஏன் தெரியுமா? மனிதர்கள் உயர்ந்தவர்கள். தீங்கு செய்ய மாட்டார்கள். அருகில் இருந்து பழகியதை வைத்துச் சொல்கிறேன். என்னால் செய்ய முடியாத பல பெரிய விஷயங்களை, என்னால் புரிந்து கொள்ள முடியாத பல ஆச்சரியங்களை மனிதர்கள் சர்வ சாதாரணமாக நிகழ்த்துகிறார்கள். வாலைக் குழைத்து அவர்கள் காலடியில் அமைதியாகப் படுத்துக் கொள்வதுதான் அவர்களுக்குச் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

என் பெயர் பக். அலாஸ்காவில் உள்ள ஒரு நீதிபதியின் வீட்டில் செல்ல நாயாக வளர்ந்து வருகிறேன். தூய்மையான அன்பும் கரிசனமும் கொண்டவர் என் எஜமான். அவரது ஒவ்வோர் அசைவையும் நான் அறிவேன். எப்போது அழைப்பார், எப்போது அணைப்பார், எப்போது வாஞ்சையுடன் தடவித் தருவார் என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் இருப்பது அவருடைய பணியாளர் ஒருவருடன். அதனால்தான் என் கழுத்தில் இந்தக் கயிறு கட்டப்பட்டிருக்கிறது.

சதுரமாகக் கத்தரிக்கப்பட்டிருக்கும் சீட்டுகளைக் கையில் பிடித்து கொண்டிருந்தார் அந்தப் பணியாளர். உடன் அமர்ந்திருந்தவர்களும் அதே போன்ற சீட்டுகளை வைத்திருந்தார்கள். நான் ஒவ்வொருவரையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது அவர்கள் சிரிப்பதையும் ஹோவென்று கத்துவதையும் வைத்துப் பார்க்கும்போது ஏதோ விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எழுந்து கெண்டார்கள். வீட்டுக்குக் கிளம்பலாம் என்று நானும் எழுந்தேன்.

அப்போதுதான் அந்த விநோதம் நடந்தது. அந்தப் பணியாளர் கயிற்றை எடுத்து அருகில் இருந்த நண்பரிடம் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வெளியேறிவிட்டார். கயிற்றின் ஒரு முனை என் கழுத்தில். இன்னொரு முனை, ஓர் அந்நிய மனிதனிடம். இதற்கு முன்னால் இப்படி நடந்ததில்லை என்பதால் எனக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு வேளை அருகில் எங்காவது சென்றிருக்கிறாரா? இங்கு என்ன நடக்கிறது?

தயக்கத்துடனும் பயத்துடனும் நான் குரல் கொடுத்தபோது அந்த அந்நிய மனிதன் கயிற்றை இறுக்கினான். என்னைப் பிடித்து இழுக்கவும் செய்தான். கயிறு கழுத்தில் அழுத்தியது. அதுகூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. என்னை ஒருவன் கட்டாயப்படுத்தி இழுக்கிறான் என்னும் உணர்வே அதிக காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் கயிறு என் பாதுகாப்புக்காக அணிவிக்கப்பட்டது என்று தான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த மனிதன் கத்தினான். அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளின் பொருள் புரியாவிட்டாலும் அவனுடைய முகத்தில் தென்பட்ட கடுகடுப்பைக் கண்டபோது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என்னை அவமானப்படுத்தியதோடு நிற்காமல் என்னைத் திட்டவும் செய்கிறானே! அவனுக்குச் சமமாக நானும் என் குரலை உயர்த்தினேன்.

அவனுக்கு என் மொழி புரியவில்லை. என்னை மேலும் பலவந்தப்படுத்தி இழுத்தான். என் கோபம் பெருகியது. நீதிபதியிடம் திரும்பிச் சென்று அவர் மடியில் தலையைப் புதைத்து என்னைக் கைவிட்ட பணியாளர் பற்றியும் இந்த முரட்டுத்தனமான அந்நியனைப் பற்றியும் புகார் செய்ய வேண்டும் என்று கருவிக்கொண்டேன். அது, பிறகு. முதலில், இவனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்.

கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிடு என்றது உள்மனம். திமிறினேன். அவன் விடாமல் இழுத்தான். கால்களை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி நிற்க முயற்சி செய்தேன். உன்னை எனக்குப் பிடிக்கவில்லை, என்னை விட்டுவிடு என்பதை எனக்குத் தெரிந்த அத்தனை சாத்தியமான வழிகளிலும் வெளிப்படுத்தினேன். அவன் கேட்பதாக இல்லை.

எனவே சட்டென்று அவன்மீது பாய்ந்தேன். கூரான பற்களைக் காட்டி பயமுறுத்தினேன். அவன் கொஞ்சம் பின்வாங்கினான். முகத்தில் பயம் தெரிந்தது. இதுதான் தருணம். ஓடு! ஓடிவிடு! நான் அவனிடம் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டு விட்ட தருணத்தில் திடீரென்று நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்து என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு பெட்டியை என்மீது கவிழ்த்துவிட்டான் ஒருவன். சட்டென்று இருள் என்னைச் சூழ்ந்து கொண்டது. பயம். கண்கள் தெரியவில்லை. என்னைச் சுற்றி விநோதமான குரல்கள் கேட்டன. கத்தி, கத்தி ஓய்ந்து போனேன்.

பெட்டியோடு சேர்த்து என்னைத் தூக்கிப் போனதை உணர முடிந்தது. என்னை எங்கோ கொண்டு செல்கிறார்கள். அநேகமாக இது ரயில் வண்டியாக இருக்கலாம். நீதிபதியின் வீட்டைவிட்டு இப்போது வெகு தொலைவுக்கு வந்துவிட்டதைப் போல் இருந்தது.

கண் விழித்தபோது ஓர் இருண்ட அறையில் இருந்தேன். மயக்கமும் சோர்வும் அவமானமும் என்னை அழுத்திக் கொண்டிருந்தன. இதோ மீண்டும் காலடிச் சத்தம். நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இனியும் தாமதிக்கக்கூடாது. கதவு திறக்கப்படும்போது பாய்ந்து விடவேண்டும்.

அறையில் ஒரு சிறிய ஓட்டை மட்டும் திறக்கப்பட்டது. அதன் வழியே உணவு தள்ளிவிடப்பட்டது.

சாப்பிடு, பிசாசே!"

என்ன ரொம்ப பிகு செய்து கொள்கிறதா?"

செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட நாய் போல. நம் வழிக்குக் கொண்டு வர நேரம் ஆகும்."

என்னிடம் கொடு. இரண்டே நாள்களில் நம் பின்னால் வாலைக் குழைத்துக்கொண்டு வரச் செய்கிறேன்."

நீ முரடன். இதன் மதிப்பு தெரியாமல் நடந்து கொண்டால் நமக்குத்தான் இழப்பு."

கவலைப்படாதே. நீ எதற்காக இதை வாங்கியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், நான் இதை வழிக்குக் கொண்டு வருகிறேன்."

பசி இம்சித்தது. நான் அந்தத் தட்டை நெருங்கக்கூட இல்லை. மானம் உயிரை விடப் பெரிது அல்லவா? போயும் போயும் இவர்களுடைய உணவையா சாப்பிட வேண்டும்? காத்திருந்தேன். இரண்டு நாள்கள் கழிந்தன. ஒரு சொட்டு நீர்கூட இல்லை. என்னைக் கட்டாயப்படுத்திப் பார்த்தார்கள். என்னைச் சாப்பிடவைக்க முடியவில்லை.

சிவப்பு ஸ்வெட்டர் மனிதன் இறுதியாகக் கதவைத் திறந்தான். என்னை நோக்கித் தட்டைத் தள்ளினான். நான் அமைதியாக நின்றேன். கத்துவதற்கோ ஓடுவதற்கோ என்னிடம் பலமில்லை. அவன் நகர்ந்தான்.

நான் தடுமாறியபடி திரும்பினேன். மின்னல் போல் என் முதுகில் ஒரு சுளீர்! சுருண்டு விழுந்தேன். பிரம்பு ஒன்று மின்னிக் கொண்டிருந்தது. எழுந்திருக்க முயன்றேன். முடியவில்லை. இந்தமுறை அந்தப் பிரம்பு என் முன் கால்களின்மீது பாந்தது. மூர்ச்சையடைந்து அப்படியே விழுந்தேன்.

நினைவு திரும்பியபோது அந்தச் சிவப்பு ஸ்வெட்டர் மனிதனின் கால்களுக்குக் கீழே சுருண்டு கிடந்தேன். என் முதுகில் தட்டி, உணவை நீட்டினான். எதிர்க்க வலுவில்லை. தவிரவும், இறந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. இது பசியா அல்லது வலியா? பயமா அல்லது பலவீனமா?

சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். மனிதர்கள் அலாஸ்காவின் பனி பொழியும் பகுதிகளில் ஒரு புதிய உலோகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தகதகவென்று மின்னும் அந்த மஞ்சள் உலோகத்தை வண்டியில் கட்டி இழுத்து வருவதற்கு வலுவான நாகள் தேவைப்படுகின்றன என்பதால், நான் திருட்டுத் தனமாகக் கடத்தி வரப்பட்டிருக்கிறேன்.

ம், சாப்பிடு" என்று பிரம்பை எடுத்தான் அந்தச் சிவப்பு ஸ்வெட்டர் மனிதன்.

நான் சாப்பிடத் தொடங்கினேன். உணவு உள்ளே இறங்கும்போது கண்களில் நீர் கோத்துக் கொண்டது. இனி நான் நீதிபதியைப் பார்க்கப் போவதில்லை. யார் மடிமீதும் முகம் புதைக்கப் போவதில்லை. என் உலகம் மாறிவிட்டது. அல்லது நானே தான் மாறிவிட்டேனா?

ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது. இனி பிரம்புதான் என் எஜமான். இன்னொன்றும் புரிந்தது. மனிதர்கள் அத்தனை உயர்ந்தவர்கள் இல்லை. இந்த எண்ணம் எனக்குள் பரவிய அந்த நொடியில் இருந்து நான் மிருகமாக மாற ஆரம்பித்தேன்!

ஜேக் லண்டன் (1876-1916)

சாடர்டே ஈவினிங் போஸ்ட் பத்திரிகையில் தொடராக வெளிவந்து பிறகு புத்தகமாகவும் வெளிவந்த கூடஞு The Call of the Wild ஜேக் லண்டனுக்கு முதல் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்தது. அன்று தொடங்கி இன்று வரை, அதிகம் விற்பனையாகும் அமெரிக்க நாவல்களின் பட்டியலில் இந்தப் புத்தகம் இடம் பெற்று வருகிறது. நாவல்கள் மூலம் உலகின் மிகப் பெரும் செல்வந்தராக உயர்ந்த முதல் அமெரிக்க எழுத்தாளர் ஜேக் லண்டன்.

மருதன்

கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில


q09
தெரிந்ததைச் சொல்வதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான். முதலாவது இலக்கியம்; இரண்டாவது சாஸ்திரம். முதல் கலை; இரண்டாவது ஸயன்ஸ். முதல் உணர்ச்சி நூல்; இரண்டாவது அறிவு நூல்.
ஒரு ஸி.வி.ராமன், ஜகதீச சந்திரவசு, ஒரு மார்க்கோனி, ஒரு எடிஸன், ஒரு கார்ல் மார்க்ஸ், ஒரு கீத் பிறக்காவிட்டால் நாகரிக வளர்ச்சிக்கு சாதனம் இருக்காது.
ஒரு பாரதி, ஒரு கம்பன், ஒரு தாகூர், ஒரு வால்ட் விட்மன் பிறக்கா விட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படாது; வாழ்க்கை ரஸிக்காது. வெறும் வெட்டவெளியாய், காரண காரியங்களால் பிணைக்கப் பட்ட ஒரு இருதயமற்ற கட்டுக்கோப்பாக இருக்கும்.
தெய்வத்தைப் படைப்பது கவிஞன்; தெய்வத்தை அறிவது ஸயன்டிஸ்ட்.
    *********
“உண்மையே இலக்கியத்தின் ரகசியம்”
    *********
கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு, ஆனால் அவற்றின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.
    *********
நான் எப்பொழுதும் ராமலிங்க சுவாமியைச் சாப்பாட்டு சாமி என்று சொல்லுவது வழக்கம். கடவுள் என்றால் எத்தனை டஜன் மாம்பழங்கள் என்று சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவர் திருவாசகத்தை அனுபவித்த அருமையைப் பாருங்கள்.
“வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!”
    *********
மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள் சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்னத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில் வாழ்க்கை ரகசியங்களில், அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறி விட முடியாது.
    *********
இன்று உள்ள நிலைமையில் தமிழ்ப்பாட்டு சீர் பெற வேண்டுமெனில் அதாவது இன்று பாட்டு எழுத வேண்டுமெனில், பாஷையின் வளத்தை அறிந்து அதை சாகசமாக உதறித் தள்ளவும், ஏற்றுப் பயன்படுத்தவும் தகுதி வாய்ந்த பயிற்சியும், உணர்ச்சியின் வேகத்தை அனுபவித்து அறிய அறிவிக்கக் கூடியவர்களாலேயே முடியும். இன்று அப்படிப் பட்டவர்கள் யாருமே கிடையாது என்பது என் கட்சி. இனி வருங்காலத்தில் வரட்சியா, வளமா என்பது இன்றைய நிலையில் ஊகிக்க முடியாத விஷயம். ஒன்றை, பாரதியை வைத்துக் கொண்டு உடுக்கடித்துக் காலந்தள்ளியது நமக்குப் பெருமை தரும் காரியம் அல்ல. ஆனால் கடையில் ‘பிஸ்கோத்து’ வாங்குவது போலவோ, கவர்மென்ட் அதிகாரம் செய்வது போலவோ, கவிராயருக்கு ‘ஆர்டர்’ கொடுக்க முடியாது. அவன் பிறப்பது பாஷையின் அதிருஷ்டம். அவனுக்கு உபயோகமாகும் பாஷையை மலினப்படுத்தாமலிருப்பது நமது கடமை.
    *********
உண்மைக் கவிதைக்கு உரைகல் செவி. கம்பன் சொல்லுகிறான் “செவி நுகர் கவிகள்” என்று.கவிதையின் உயர்வைக் காதில் போட்டுப் பார்க்க வேண்டும்.கவிஞன் தனது உள்ளத்து எழுந்த ஒரு அனுபவத்தைச் சப்த நயங்களினால்தான் உணர்த்த முடியும்………
கவிதையில், சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.
    *********
கலை ஒரு பொய்; அதிலும் மகத்தான பொய். அதாவது மனிதனின் கனவுகளும் உலகத்தின் தோற்றங்களும் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய். இந்தக் கலை என்ற நடைமுறைப் பொய்தான் சிருஷ்டி ரகசியம் என்ற மகத்தான மெய்யை உணர்த்தக் கூடிய திறன் படைத்தது……
தத்துவ சாஸ்திரிக்கு ஒரு கண்ணீர்த்துளி, ஒரு சொட்டு ஜலமும், சில உப்புகளும் என்றுதான் தெரியும். அந்தக் கண்ணீரின் ரகசியத்தை, அதன் சரித்திரத்தை அவன் அறிவானா? அது கலைஞனுக்குத்தான் முடியும்……கவிஞன் பக்தனாக இருப்பதில் ஆச்சயமில்லை. ஆனால், கவிஞன் பக்தனாக இல்லாமலிருப்பதிலும் அதிசயமில்லை. அவன் சிருஷ்டி அகண்ட சிருஷ்டியுடன் போட்டி போடுகிறது. அதில் பிறக்கும் குதூகலந்தான் கலை இன்பம்.
    *********
கவி என்கிற பகுதியைக் கவனிக்கும் பொழுது சங்கீதத்துடன் இணைந்தது என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கவேண்டும். சங்கீதத்திற்கு ஒரு வடிவத்தை அர்த்தத்தைக் கொடுப்பது பாட்டு. பாட்டும், சுருதியும் கலந்த கூட்டுறவுதான் பண். பாட்டின் ஜீவநாடி, உணர்ச்சி, அழகு, வாய்மை. அதுதான் கவி.
    *********
கவிதை தமிழில் இருக்கலாம். ஆனால் கவிதையைப் பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றி ஆராய்ச்சி இருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தை (Form) பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். கவிதைக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைப் போல் இயற்கையான அமைப்பு வேறு கிடையாதென்றே கூறி விடலாம்.ஆனால் கவிதை என்றால் என்ன என்று தமிழர்கள் ஆராயவே இல்லை.
    *********
கவிதை மனிதனின் அழகுணர்ச்சியையும், உணர்ச்சிப் பான்மையையும் சாந்தி செய்வது.
    *********
கடவுள் கனவு கண்டார், இந்தப் பிரபஞ்சம் பிறந்தது. கவிஞன் கனவு கண்டான்; இலக்கியம் பிறந்தது. இதிலே ‘பத்து தலை ராவணன் உலகில் இல்லையே; கவிஞன் பொய்யன்தானே’ என்று கவிதையிலே சரித்திரத்தையும், பொருளாதாரத்தையும், ஒழுக்கத்தையும் தேடிக் கொண்டிருக்கும் பெரியார்கள் கவிஞனை அறியவில்லை; அறிய முடியாது. சிருஷ்டியின் ரகசியத்தைச் சற்று அறிந்தவர்கள் கவிஞனைத் தராசில் போட்டுப் பார்ப்பவர்கள் அல்ல. கவிஞனது சக்தியை அனுபவிப்பவர்கள்.
சிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன். அவனுடைய ஆனந்தக் கனவுதான் இந்தப் பிரபஞ்சம். அதன் ரகஸியம்,, தத்துவம் வேறு. அது இன்பத்தின் விளைவு. அவனுடைய அம்சத்தின் சிறு துளிதான் கவிஞன். அவன்தான் இரண்டாவது பிரம்மா. கண்கூடாகக் காணக் கூடிய பிரம்மா.
    *********
கவிஞன் சமயத்தை அதன் உயிர் நாடியை வெகு எளிதில் அறிந்துவிடுகிறான்.
    *********
தமிழ் மறு மலர்ச்சியின் (Prometheus) பிரமாத்தியூஸ், நமது அசட்டுக் கலையுணர்ச்சிக்கு பலியான பாரதியார், அவரும் பாவங்களை எழுப்ப முடியவில்லையானால் பழைய நாகரிகச் சின்னங்களையணிந்து கொண்டு உலவி வரும் நமது மடாதிபதிகளைப் போல் தமிழும் ஒரு ‘அனக்ரானிஸமாகவே’ (Anachronism) காலவித்தியாசத்தின் குருபமாகவே இருக்க முடியும்.
    *********
புதுமைப்பித்தன் படைப்புகள் நூலிலிருந்து                       குரு

Boys vs Girls -வித்தியாசங்கள் (-கலாட்டா அறிவியல்-)


------------------------------------------------------------------------------------------
உலகத்தில் எத்தனையோ வித்தியாசங்கள் இருந்தாலும்... முக்கியமான வித்தியாசம் ஆண்-பெண் வித்தியாசம்தான்.
( இத தான் கவுண்டர் சொல்லி இருகார்... "உலகத்தில ரெண்டே ரெண்டு ஜாதிதான்.. ஒன்று ஆண்ஜாதி இன்னொன்று பெண்ஜாதி... " என்று.. :P )

உண்மையிலேயே... உடல் அளவிலும், மன உணர்வளவிலும், நடத்தையிலும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன ஆண்கள் பெண்களிடையே.
இது தெரியாமல்... சில வீடுகளில், ஆண் பிள்ளைகளை பெண் பிள்ளைகளின் உணர்வுகளுடன் ஒப்பிட்டு குறை சொல்வதும்... பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளைகளின் செயற்திறன்களுடன் ஒப்பிட்டு குறை சொல்வதும் சகஜமாக இருக்கிறது.

இந்தப்பதிவில்... அந்த வித்தியாசங்கள்பற்றி கொஞ்சம் பார்ப்போம்...

------------------------------------------------------------------------------------------


மனித மூளையானது முக்கியமாக வெள்ளைத்திசு (white tissue), சாப்பல் திசு (gray  tissue) என இரு வேறுபட்ட பதார்த்ததால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திசுக்களில் ஆண்கள் கிறே திசுக்களை பயண்படுத்தியே அதிகமாக சிந்திக்கிறார்கள்-கருமமாற்றுகிறார்கள். எனினும் பெண்கள் வெள்ளைத்திசுக்களையே அதிகம் பயண்படுத்துகின்றனர். இது தான் அடிப்படையில் இந்த வேறுபாடுகளுக்கு எல்லாம் காரணமாக திகழ்கிறது.
( கிட்டத்தட்ட 6.5 மடங்கு அதிகபடியான கிறே திசுக்களை ஆண்கள் பயண்படுத்துகின்றனர். அதேவேளை பெண்கள் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான வெள்ளைத்திசுக்களை பயண்படுத்துகின்றனர். )
கிறே திசுக்கள்,  சிந்தித்து செயலாற்றுவதற்கு துணை புரியும் அதேவேளை... வெள்ளைத்திசுக்கள் அவற்றிற்கு இடையிலான தொடர்பாடலுக்கு முக்கியமானதாக திகழ்கிறது.

இந்த வேறுபாடுகளின் அடிப்படையில்...

பெண்கள் சமூகத்தொடர்பாடல்களில் ஆண்களை விட முன்னிலையில் இருப்பார்கள். அவர்களால், இலகுவாக உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடிவதுடன்... தாமும் இலகுவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பேசக்கூடியவர்கள். ஆண்களால் இது முடியாது. பேச்சுத்திறன் ஒப்பீட்டளவில் பெண்களை விடக்குறைவு.... பொறுமையாக கேட்கும் தன்மையும் குறைவு.
( இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல்...  தம்மை கணக்கெடுப்பதில்லை, அல்லது பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஆண்கள் மீது சுமத்தப்படுகிறது :P )

ஒரு பிரச்சனையை எதிர் நோக்கும் போது... ஆண்கள் உடனடியாக தீர்ப்பதில் வல்லவர்களாக இருபார்கள். பெண்கள் நேரம் எடுத்து தீர்க்க நினைபார்கள்.
காரணம், இந்த சந்தர்ப்பத்தில்... ஆண்கள், இடது பக்க மூளையை அதிகம் பயண்படுத்தி உடன் முடிவுக்கு வந்து விடுவார்கள். பெண்கள் இரு பகுதி மூளையையும் சரி சமமாக பயண்படுத்தி ஜோசிப்பதால் முடிவு லேட் ஆகும்... ஆனால், எமோஷனலானதாக இருக்கும்.

கணிதத்திறனில் ஆண்கள் பெண்களை விட திறமையானவர்களாக இருபார்கள்.
காரணம், கணித சிந்தனைகளுக்கு பொறுப்பான "IPL -  inferior-parietal lobule"பகுதி ஆண்களிடம் பெரியது எனவே இடது மூளை பெரியதாக இருக்கும்... இதனால் இலகுவாக கணித ரீதியான தீர்மாணங்களை எடுக்க முடியும்.
இது தான்.. பொறியியல்,கணக்கியல் துறைகளில் பெண்கள் குறைவாக இருக்க காரணம்.
அதே வேளை..
பெண்களின் வலது மூளை பெரியது... அது தான் பெண்களால் உண்னிப்பாக ஒரு விசயத்தை அவதானிக்க (ஆராய ) முடிகிறது. உதாரணமாக, இரவில் பிள்ளை அழுவது பல ஆண்களுக்கு தெரிவதில்லையாம்... பெண்கள் உணர்ந்து கொள்வார்கள்.
( இது தான் சந்தேகம் என்று வந்தால் அலசி ஆராய்வதற்கும் காரணமாக இருக்குமோ... :O :P )

மகாத்மா காந்திஜி பற்றி பரவலாகத் தெரியாத தகவல்கள்



        iசிறுவயதிலேயே காந்திஜியிடம் வீரம், வெளிப்படையாகப் பேசும் பண்பு போன்றவை இருக்கவில்லை. அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளதன்படி பார்த்தால், அவர் சிறு வயதாக இருந்தபோது மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டராக இருந்துள்ளார். பிறருடன் பேச வெட்கப்பட்டு, பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்துள்ளார்.
        iநடப்பதில் ஆர்வம் கொண்டவர். 'உடற்பயிற்சிகளின் இளவரசன்' நடைபயிற்சி என்று அவர் அவ்வப்போது குறிப்பிடுவது வழக்கம். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதிலிருந்து அவருக்கு நீண்டதுõரம் நடப்பது மிகவும் பிடிக்கும். லண்டனில் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது, தினமும் 8-10 மைல் துõரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் பணத்தையும் மிச்சப்படுத்தியுள்ளார். 'லண்டனில் நான் தங்கியிருந்த காலத்தில் தினமும் நீண்ட துõரம் நடப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். இதன் மூலம் என் உடல் வலுப்பட்டது' என்று காந்திஜி குறிப்பிடுகிறார். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீண்ட துõரம் அவர் நடந்ததால்தான், 1930ம் ஆண்டு, சபர்மதி ஆசிரமத்திலிரந்து தண்டி நோக்கி, தனது 60வது வயதில் யாத்திரை மேற்கொண்டு 241 மைல் துõரத்தை நடந்தே கடந்தார்.
        iபிரிட்டீஷாருடன் காந்திஜிக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் அவர் இருந்தபோது, ரயில் பயணம் மேற்கொண்டார். அவர் இருந்த பெட்டியில் ஏறிய பிரிட்டீஷ்காரர் ஒருவர், காந்திஜியை கறுப்பர் இனத்தவர் என நினைத்து, கீழே இறங்குமாறு நிர்பந்தித்துள்ளார். இந்தப் பெட்டியில் பயணம் செய்ய நான் டிக்கெட் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்து, காந்திஜி இறங்க மறுத்தபோது, அந்த பிரிட்டீஷாரும் ரயில்வே ஊழியர் ஒருவரும் சேர்ந்து, காந்தியை ரயிலில் இருந்து கீழே வீசியுள்ளனர்.
        iகாந்திஜியின் முதல் ரேடியோ உரை, 1931ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்தபோது ஒலிபரப்பானது. அமெரிக்க மக்களுக்காக அவர் ரேடியோவில் பேசினார். அவரின் முதல் பேச்சு, 'இந்த விஷயத்தை நான் பேசலாமா?' என்று ஆங்கிலத்தில் துவங்கியது.
        iபிறருக்கு உதவுவதில் காந்திஜி விருப்பம் கொண்டவர். ஒருமுறை ரயிலில் ஏறும்போது, ஒரு காலில் அணிந்திருந்த செருப்பு கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்துவிட்டது. அடுத்த கணமே, தன் மற்ற கால் செருப்பையும் கழற்றி கீழே போட்டுவிட்டு மேலே ஏறினார். ஒருகால் செருப்பை கண்டெடுப்பவர்களுக்கு அந்தச் செருப்பால் எந்த பயனும் இல்லை என்பதால் தன் மற்றொரு கால் செருப்பை அவர் கழற்றிப் போட்டார்.
        iஉண்மை, அகிம்சை, ஆன்மீகம், மதத்தைப் பின்பற்றுதல், நேர்மை, ஒழுக்கம், பணிவு, விருப்பம் போன்றவையே அவரின் வாழ்க்கைக் குறிக்கோள்களாக இருந்தன. இந்த உயர்ந்த குணங்கள்தான் அவரை மகாத்மா (உயர்ந்த ஆத்மா) ஆக்கியது.
        iகாலம் தவறாமையை கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காக அவர் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். படுகொலை செய்யப்பட்ட 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அவர் சற்று மனவேதனையுடன் இருந்துள்ளார். ஏன் என்று நெருக்கமானவர்கள் கேட்டபோது, அன்றாட இறைவணக்கத்திற்கு 10 நிமிடம் தாமதமாகப் போனதற்காக காந்திஜி வருத்தம் அடைந்துள்ளார்.
        iஅமெரிக்காவின் பிரபல பத்திரிகையான, 'டைம்', 1930ம் ஆண்டில் காந்திஜியை, அந்த ஆண்டின் மனிதராக (மேன் ஆப் த இயர்) அறிவித்தது.
        iகாந்திஜி ஒரு வழக்கறிஞர். அந்தத் தொழிலில் 20 ஆண்டுகள் அவர் இருந்துள்ளார். எனினும், பெரும்பாலான வழக்குகளை அவர் சமரசம் செய்தே தீர்த்து விடுவார். இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி சமரச தீர்வு கண்டுவிடுவார். 'இதனால் நான் எதையும் இழக்கவில்லை. பணத்தைக்கூட இழக்கவில்லை. கண்டிப்பாக என் ஆத்மாவையும்தான்' எனக் குறிப்பிடுகிறார்.
        iசட்டம் படிக்க காந்திஜி லண்டன் சென்ற ஆண்டு, 1888. அந்த ஆண்டில் லண்டன் மாநகரமே பீதியில் உறைந்திருந்தது. ஜேக் தி ரிப்பர் என்ற தொடர் கொலைகாரன் பற்றிய செய்திகளே அப்போது பத்திரிகைகளில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது.
        iகாந்திஜி கிண்டலாகப் பேசுவதில் வல்லவர். ஒரு முறை நிருபர் ஒருவர், 'மேற்கத்திய நாகரீகம் பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த காந்திஜி, 'நான் அதை மிகச் சிறந்த ஒரு ஐடியாவாகக் கருதுகிறேன்' என்றார்.
        iரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயுடன் காந்தி தொடர்பு வைத்திருந்தார்.
        i1948ஆம் ஆண்டு காந்திஜியின் உடலைச் சுமந்து சென்ற பீரங்கி வண்டி, 1997ல் அன்னை தெரசா உடலையும் சுமந்து சென்றது.
        iதென் ஆப்ரிக்காவின் ஜூலு போரின்போது காயமடைந்த பிரிட்டீஷ் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 1906ம் ஆண்டு, இந்தியர்களை ஒருங்கிணைந்து ஸ்ட்ரெச்சர் பியரர் கார்ப்ஸ் என்ற தள்ளுவண்டி தொண்டர்கள் பிரிவைத் துவக்கினார்.
        iஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளில் வெளிவந்த ஹரிஜன், யங் இண்டியா போன்ற பல பத்திரிகைகளுக்கு காந்திஜி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவற்றில் தென் ஆப்ரிக்க பத்திரிகையான இண்டியன் ஒபினியன் என்ற பத்திரிகையும் அடக்கம்.
        iமகாத்மா காந்திஜியின் சுயசரிதை 'சத்தியசோதனை' , 1920ஆம் ஆண்டு வரையுள்ள தகவல்களைக் கொண்டிருந்தது. அந்த நுõல், 1927ஆம் ஆண்டு வெளியானது. ஹார்பர் கோலின்ஸ் என்ற பிரபல புத்தக நிறுவனத்தினர், 1999ம் ஆண்டு, அந்த நுõலை 20ம் நுõற்றாண்டின் 100 முக்கிய ஆன்மீக புத்தகங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தனர்.
        iநோபல் அமைதி விருதுக்கு 1948ம் ஆண்டு காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டதால், நோபல் பரிசுக்குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று அறிவித்தது.
        iஅமெரிக்காவின் பிரபலமான டைம் பத்திரிகை, 1999ம் ஆண்டு, நுõற்றாண்டின் மிகச்சிறந்த நபர் என்ற பெருமையை விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. இரண்டாவது இடத்தை காந்திஜி பிடித்தார்.
        iவயதான பிறகு காந்திஜி, பல் செட் அணிந்திருந்தார். அதை அவர் எப்போதும் அணிவதில்லை. சாப்பிடச் செல்லும்போது மட்டும் அணிவார். சாப்பிட்டு முடிந்ததும் அதை சுத்தப்படுத்தி, துடைத்து தன் இடுப்புத் துணியில் பத்திரமாக வைத்துக் கொள்வார்.
        iகாந்திஜி பேசும் ஆங்கிலம், ஐரிஷ் (அயர்லாந்து) பேச்சு வழக்கில் இருக்கும். இதற்குக் காரணம், அவருக்கு முதலில் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள்.
        iசுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்த காலத்தில் இடுப்பில் மட்டும் அவர் துணியணிந்திருந்தார். ஆனால், லண்டனில் அவர் இருந்தபோது பட்டுத் தொப்பி, கணுக்காலுõறை, கையில் பிரம்பு வைத்திருந்தார்.
        iலண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் முதலில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. வாய் குளறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர் தோல்வியில் கீழே உட்கார்ந்துவிட்டார்.
        iலண்டனில் வழக்கறிஞராக காந்திஜி ஒன்றும் பெரிதாக ஜொலிக்கவில்லை. அங்கு அவருக்குத் தோல்விதான் ஏற்பட்டிருந்தது. முதன்முதலில் இங்கிலாந்து வருவதற்கு முன், அவருக்கு ஆங்கிலப் பாடம் நடத்திய ஐரிஷ் ஆசிரியர்கள், 'செர்மான் ஆன் த மவுன்ட்' என்ற உபதேசத்தை அடிக்கடி படிக்கச் சொன்னார்கள். அதை அவர் முழுமையாக மனப்பாடம் செய்துவிட்டார். அது அவருக்கு பின்னாளில், தென் ஆப்ரிக்காவில் உதவியது.
        iதென் ஆப்ரிக்காவில் கடன்களை வசூலிக்க அவர் சென்றிருந்தபோது, செர்மான் ஆன் த மவுன்ட் அவருக்குக் கைகொடுத்தது. அதை சமயோஜிதமாகப் பயன்படுத்திய காந்திஜிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அவர்கள் வழக்குகளை, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாக முடித்து வைத்தார்.
        iதென் ஆப்ரிக்காவில் அவர் இருந்த காலத்தில் அவரின் ஆண்டு வருமானம், 15,000 டாலர்கள். இந்தத் தொகை, இப்போதுகூட பல இந்தியர்களின் கனவுத்தொகையாக உள்ளது.
        iதென் ஆப்ரிக்காவில் அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக பணத்தைக் குவித்தாலும் அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சகஇந்தியர்கள், அங்கே வறுமையில் வாடினர். பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் பசி, பிணியைப் போக்க தன் வருமானத்தின் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார்.
        iதென் ஆப்ரிக்காவில் இருந்த இந்தியர்களில் பத்து பேரில் ஒருவர், மிகுந்த வறுமையிலும் பட்டினியிலும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த காந்திஜி, அவர்களின் குழந்தைகளை தென் ஆப்ரிக்காவுக்கு கூட்டி வரவேண்டாம். அந்தக் குழந்தைகளையும் இங்கு கொண்டு வந்து வறுமைச்சூழலில் வாட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
        iஎளிய உ<ணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதில் காந்திஜி முன்னுதாரணமாக இருந்தார். பழங்கள், வெள்ளாட்டுப் பால், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உட்கொண்டார்.
        iதன் வாழ்நாளில் காந்திஜி ஒருபோதும் அமெரிக்கா சென்றதில்லை. ஆனால், அந்நாட்டில் அவருக்கு ஏராளமான தொண்டர்களும் நண்பர்களும் இருந்தனர். அத்தகைய நண்பர்களில் ஒருவர், ஹென்றி போர்டு. அவருக்கு காந்தி தன் கையெழுத்திட்ட கை ராட்டையை பரிசாக வழங்கிவைத்திருந்தார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் அந்த கை ராட்டையை அவ்வப்போது சுழற்றிய போர்டு, 'இந்த ராட்டை மகாத்மா காந்தி எனக்காக அளித்தது. இந்த ராட்டை மிகவும் எளிய இயந்திரவியல் தத்துவத்தைக் கொண்டது மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் உதவும். பொருளாதாரச் சுதந்திரத்தின் அடையாளச் சின்னம்' என்று குறிப்பிட்டாராம்.
        iமகாத்மா காந்திஜியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகப் போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் அவரைப் பின்பற்றினர்.
        iநோபல் பரிசு பெற்ற 5 உலகத் தலைவர்களான, மார்ட்டின் லுõதர் கிங் ஜூனியர் (அமெரிக்கா), தலாய் லாமா (திபெத்), ஆங் சான் சூ கியி (மியான்மர்), நெல்சன் மண்டேலா (தென் ஆப்ரிக்கா) மற்றும் அடோல்போ பெரஸ் எஸ்க்யுவெல் (அர்ஜென்டினா) ஆகியோர், தாங்கள் மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அத்தகைய பெருமை பெற்ற காந்திஜிக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இதனால், நோபல் பரிசுக்குத்தான் பாதிப்பு; காந்திக்கு அல்ல.
        iகாந்திஜிக்கு தாய்மொழிப்பற்று அதிகம். பிற்காலத்தில் தன்னுடைய சுயசரிதையை தன்னுடைய தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் எழுதினார். அவருடைய செயலாளர் மகாதேவ தேசாய் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
        iஇந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற ஒரு பிரிவு இருப்பதையும் மற்ற இந்துக்கள் தீண்டத்தகாதவர்களாக அவர்களைக் கருதுவதையும் காந்திஜி கடுமையாக எதிர்த்தார். ஙிண்டாமை இந்து மதத்தின் சாபக்கேடு என்று தொடர்ந்து சொல்லி வந்தார். அவர்களை பெருமைப்படுத்துவதற்காகவே கடவுளின் குழந்தைகள் அவர்கள் என்கின்ற அர்த்தத்தில் ஹரிஜன் எனவும் அவர் பெயர் சூட்டினார்.
        iகாந்திஜிக்கு புகைப்படக் கலைஞர்களைக் கண்டாலே பிடிக்காது. புகைப்படம் எடுப்பதையும் விரும்பாதவர் அவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவரே அவர்தான்.
        iகாந்திஜி தன்னுடைய வாழ்நாளில் இறுதிக்காலம் வரையில் சினிமாப்படங்களை வெறுக்கவே செய்தார். சினிமா மூலம் தன்னுடைய கருத்துகளைப் பாமர மக்களிடம் பரப்ப முடியும் என்கின்றன எண்ணம் அவருக்குத் தோன்றாமலேயே போயிற்று. ஆனால், தன்னுடைய கடைசி காலத்தில் தன்னுடைய எண்ணங்களை மக்களுக்குச் எடுத்துச் சொல்ல ரேடியோவை அவர் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
        iஅஞ்சல் அட்டைகள்தான் மிகவும் சிக்கனமான தகவல் தொடர்பு சாதனம் என்று கருதியவர் காந்திஜி.
        iமனித வடிவில் வந்த இயேசு மாண்டது வெள்ளிக்கிழமை, காந்தியடிகள் பிறந்தது வெள்ளிக்கிழமை, இந்தியா விடுதலை பெற்றது வெள்ளிக்கிழமை, தேசப்பிதா மகாத்மா காந்திடிகள் இறந்ததும் வெள்ளிக்கிழமைதான்.
        iநமது தேசத்தந்தை காந்தியடிகளைக் கௌரவப்படுத்தும் வகையில் முதன்முதலில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட வெளிநாடு அமெரிக்கா. ஜனவரி 26, 1961. (குறிப்பு: இது ஏற்கனவே முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது)
        i1915-ம் ஆண்டு ஒரு சமயம் சாந்திநிகேதனுக்கு காந்தியடிகள் சென்று கவிஞர் இரவீந்திரநாத் தாகூரைப் பார்த்து நமஸ்தே குருதேவ் என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். உடனே தாகூர், நான் குருதேவ் என்றால் நீங்கள் மகாத்மா என்று சொல்லி வணங்கினார். இதுவே, காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற அடைமொழி அமையக் காரணமான நிகழ்ச்சி.
        iநமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் தனது வாழ்நாட்களில் எப்போதும் விமானப்பயணம் மேற்கொண்டதில்லை. அதிகாரம் இருந்தும் ஒரு துளிகூட ஆடம்பரத்தை விரும்பாத உத்தமர் அவர். தனது வாழ்க்கை முழுவதும் எளிமையாகவே வாழ்ந்து மறைந்தார்.
        iஉலகிலேயே காந்திஜிக்கு டாக்குமென்டரி படம் எடுத்த முதல் நபர் ஏ.கே.செட்டியார் என்ற தமிழர். கடைசி வரை காந்தி பக்தராகவே வாழ்ந்து விளம்பரம் இன்றி பணிசெய்து மறைந்து போனார். காந்தியைப் பற்றிய டாக்குமென்டரி படம் எடுப்பதற்காக மட்டுமே தன் சொந்த முயற்சியில் ஜப்பான் சென்று சினிமாப்பட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் சென்று காந்திஜியைப் பற்றிய பல அபூர்வ காட்சிகளைப் பணம் கொடுத்து வாங்கி தன்னுடைய டாக்குமென்டரியில் சேர்த்தாராம், அந்த காந்தி பக்தர்.
        i1921-ம் ஆண்டு செப்டம்பருக்கு முன்புவரை முழுஉடையுடன் காட்சியளித்த நமது தேசத்தந்தை தனது தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது ஏழை விவசாயிகள் பெரும்பாலானோர் இடுப்பில் முழந்துண்டு மட்டுமே அணிந்து வேலை செய்வதைப் பார்த்த மகாத்மா, ஒரு துணைக்கு அதிகமாக இரண்டாவது துணி வாங்கவும் இயலாத ஏழைகள் நிறைந்த இந்த நாட்டிலே, தமக்கெதற்கு இவ்வளவு ஆடைகள் என்று எண்ணினார். மறுகணமே ஒரு முழந்துண்டு மட்டுமே அவரது ஆடையானது. அவரது ஆடை மாற்றம் தமிழகத்தில்தான் நிகழ்ந்தது. அன்று முதல் கைராட்டையும் அவரது ஆடையுமே அவரது அடையாளங்களாயின.
        iஇந்தியாவின் முதல் சுதந்திரதினமான 1947-ஆம் ஆண்டு 15-ஆம் நாளை காந்தியடிகள் கொண்டாடவில்லை. அன்றைய தினம் வாழ்த்துச் செய்திகூட மகாத்மா அனுப்பவில்லை. மாறாக, வகுப்புவாத கலவரங்களினால் மனம் நொந்து காணப்பட்டார்.
        iகாந்திஜி இரண்டு விஷயங்களுக்கு வருந்துவதுண்டு. ஒன்று, அவருடைய கையெழுத்து கிறுக்கலாக, எளிதில் புரியாமலிருக்கும் என்பது. இன்னொன்று, தம்மிடமிருந்த ஒரு கெட்ட பழக்கமான, யாரையாவது உடம்பைப் பிடித்து விடச் சொல்வது. அதாவது மசாஜ் செய்து கொள்வதைத் தனது கெட்ட பழக்கமாக காந்தி குறிப்பிட்டார்.
        iகாந்திஜி இறந்த அன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் இலங்கை வானொலி நிலையம் 24 மணி நேரத்திற்கு எந்த வித நிகழ்ச்சியையும் ஒலிபரப்பவில்லை. இலங்கை வானொலி மௌன அஞ்சலி செலுத்தியது.
        iநமது இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்திஜி மொத்தம் 6 ஆண்டுகள், 5 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரைத் தேசப்பிதா என்று அழைப்பது சரிதானே! மகாத்மா காந்தியைத் தேசப்பிதா என்று முதன்முதலில் சொன்னவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்தான்.
        iகாந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி நாட்டின் மூன்றாவது விடுமுறை. மற்ற இரண்டு விடுமுறை நாட்கள், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம்.
        iகிழிந்த துணிகளைத் தானே தைத்துக் கொள்வார் காந்திஜி. ஒருவர் எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் உடுத்துகின்ற உடைகள் மிகச் துõய்மையாக இருக்க வேண்டும் என்று காந்திஜி விரும்புவார். அதை அவர் கடைசி வரை கடைபிடித்தார்.
        i15 ஜூன் 2007-ல், காந்திஜியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஐ, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சர்வதேச அகிம்சை தினமாக (ஐணtஞுணூணச்tடிணிணச்டூ ஞீச்தூ ணிஞூ Nணிண-திடிணிடூஞுணஞிஞு) அறிவித்து காந்திஜியை கௌரவப்படுத்தியது.
        iசுதேசியாகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை சுதேசியாகவே தன் நாட்டிற்கு அர்ப்பணித்த காந்திஜியின் முதல் அஞ்சல் தலை அச்சிடப்பட்டதோ சுவிட்சர்லாந்து நாட்டில் என்பது முரண்பட்ட ஆச்சர்யம். 1925 முதல் இன்று வரை வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட ஒரே அஞ்சல் தல
f ரூபாய் கரன்சி நோட்டுகளில் வாழ்கின்ற நமது காந்தியின் புன்னகை உலகம் அறிந்ததே. ஆனால், இது நிழல் புன்னகை, நிஜப்புன்னகையின் பதிவு மேலே.
படம் 1ல் உள்ள புகைப்படம் 1946ம் ஆண்டு எடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியுடன் இருப்பவர் இந்தியா மற்றும் பர்மா மாநில பிரிட்டீஷ் செயலாளர் பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ். இந்தப் புகைப்படத்தில் உள்ள நம் தேசத்தந்தையின் உருவப்படம்தான், இப்போதைய இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கிறது என்பது ஆச்சர்யமான செய்திதானே!
படம் 2. முதல் படத்தில் உள்ள புகைப்படத்தின் கண்ணாடி பிம்பம்.
படம் 3. இரண்டாம் புகைப்படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட இந்தப் படம்தான் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள காந்திஜியின் உருவப்படம்.
படம் 4,5 : மூன்றாம் படத்தில் உள்ள படம்தான் இங்கு உள்ள ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.