Friday 25 January 2013

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்


kahlil-gibran
(1883-1931)
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம் இதயங்கள்
சொல்லும் !
பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று !
ஏன் அவலம் அவைமேல்
இன்று இனித்திடும் போது ?
கலில் கிப்ரான் (1883-1931)
“மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா விடுதலை கேட்டு மன்றாடுகிறது. ஆனால் நாம் அந்தக் கூக்குரல்களைக் கவனிப்ப தில்லை ! காதில் கேட்பதில்லை ! புரிந்து கொள்வது மில்லை ! ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் ஒருவனைப் பைத்தியம் என்று சொல்லி நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.”.
கலில் கிப்ரான்.
கடவுளின் படைப்பு :
கடவுள் தன்னிடமிருந்து ஆன்மாவைப் பிரித்து அதை ஓர் அழகிய தேவதையாக ஆக்கினார். அவளுக்கு ஆசீர்வாதமாய்க் கனிவையும், கவர்ச்சியையும் அருளினார். இன்பக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்து “இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் நீ மறக்க நேர்ந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து நீ எதையும் அருந்தாதே” என்று கூறினார். “ஏனென்றால் மகிழ்ச்சி என்பது தற்போதைய தருணத்தைத் தவிர வேறு சமயத்தில் வருவதில்லை.” மேலும் துன்பக் கிண்ணத்தையும் அவளுக்குக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தில் உள்ளதைக் குடி. அப்போதுதான் வாழ்க்கையின் இன்பவேளை விரைந்து நழுவும் தருணத்தை நீ அறிவாய். ஏனெனில் சோகமே எப்போதும் நம்மிடம் மேலோங்கி நிற்பது.”
கலில் கிப்ரான்.
paintings-of-gibrans-mother“கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக் களஞ்சியத்திலிருந்து ஊறி வந்தது. இல்லாவிட்டால் அவர் சுயமாக உண்டாக்கியவை எல்லாம் அத்துணை உலக மயமாக, மகத்துவமாக, அழகு மொழி மூலம் ஆடை போர்த்திய படைப்புக்களாய் அமைந்திருக்க முடியாது.”
கிளாடி பிராக்டன் (Claude Bragdon)
“நானொரு வார்த்தை சொல்ல வந்தேன். நானதைச் சொல்ல வேண்டும் இப்போது.  மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு (வேறொருவரால்) அது சொல்லப்படும்.  ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் (Book of Eternity) ஒருபோதும் ஒரு ரகசியத்தை எதிர்காலம் புறக்கணிக்காது !”
கலில் கிப்ரான்

நானொரு வார்த்தை சொல்ல
வந்தேன் !
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது !
மரணம் என்னைத் தடுத்தால்
நாளைக்கு
உரைக்கப்படும் அது !
ஏனெனில்
நீடிக்கும் வரலாற்று நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிப்ப தில்லை
ஒரு ரகசியத்தை !
கலில் கிப்ரான்
“கடவுளின் பிரதிபலிப்பான அன்பின் மகிமையிலும் அழகின் ஒளிச்சுடரிலும் நான் வாழப் பிறந்தேன்.  இங்கிருக்கிறேன் நான் (அவ்விதம்) வாழ்ந்து கொண்டு ! அந்த வாழ்க்கை அரங்கிலிருந்து என்னைத் துரத்த முடியாது.  ஏனெனில் உயிரோடு வாழும் எனது வார்த்தைகள் மூலம் மரணத்திலும் நான் உயிர்ப்பித்து வாழ்பவன் !”
அன்பின் மகிமை,
அழகின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
அவற்றில் வாழப் பிறந்தேன் !
அவ்விதத்தில்
நானிங்கு வசிக்கிறேன் !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !
கலில் கிப்ரான்



கலில் கிப்ரான் வாழ்க்கை வரலாறு
லெபனீஸ் அமெரிக்கக் கவிஞரான கலில் கிப்ரான் ஓர் உயர்ந்த ஓவியக் கலைஞர், சிறந்த ஆன்மீகக் கட்டுரையாளர், ஒப்பற்ற கவிஞர், உன்னத வேதாந்த மேதை. கிறித்துவரான கலில் கிப்ரான் முதலில் அராபிக் மொழியிலும், பிறகு ஆங்கிலத்திலும் தன் கலைப் படைப்புகளை வடித்தார். 1923 இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய “தீர்க்கதரிசி” (Prophet) என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் உலகப் புகழ் பெற்றார். 26 கவிதைக் கட்டுரைகள் கொண்ட அந்த நூல் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வறுமையில் வாழ்ந்த கலில் கிப்ரான் முறையாகக் கல்வி கற்க முடியாமல், இளம் வயதில் ஒரு கிராமப் பாதிரியாரிடம் மதத்தின் உன்னதம் பற்றியும் பைபிளைப் பற்றியும் விளக்கமாக அறிந்து பிறகு அராபிக், சிரியா மொழிகளை அவரிடம் கற்றுக் கொண்டார். பின்னர் தானே உலக வரலாறுகளையும், விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொண்டார். பத்து வயதாகும் போது கலிக் கிப்ரான் குன்றிலிருந்து தவறிக் கீழே விழுந்து வலது தோளைப் பலமாகக் காயப் படுத்திக் கொண்டார். அந்த உடற் பழுது அவரை வாழ்க்கை முழுவதிலும் பாதித்தது.
வட லெபானில் உள்ள பிஷாரி (Bechari or Bscharri in Lebanon) என்னும் ஊரில் 1883 ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் கலில் கிப்ரான். அப்போது துருக்கியைச் சேர்ந்த ஒரு மாநிலமாக இருந்தது லெபனான். அதில் ஒரு பகுதி சிரியாவைச் சேர்ந்திருந்தது. அவர் பிறக்கும் போது அவரது அன்னைக்கு முப்பது வயது.. தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர்தான் கலில் கிப்ரான். தகப்பனார் பொறுப்பற்றவராய் வாழ்ந்து குடும்பத்தை வறுமையில் தள்ளித் தாயாரால் ஒதுக்கப் பட்டார். படிப்பில்லாத அன்னை மன உறுதியால் இன்னலுடன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கலில் கிப்ரானுக்கு எட்டு வயதாகும் போது, அவரது தகப்பனார் வரிப்பணத்தைச் சரிவரக் கட்டாமல் சிறையில் தள்ளப்பட்டார். அரசாங்கம் அவர்களது வீட்டைப் பறிமுதல் செய்ததால் அனைவரும் வெளியேற்றப் பட்டு உறவினர் இல்லத்தில் வாழ வேண்டியதாயிற்று. மன ஊக்கமுடைய அன்னை தன் பிள்ளைகளை (இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்கள்) அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். 1894 இல் விடுதலையான தகப்பனார் புலம்பெயரத் தயங்கி லென்பனானில் தங்கிக் கொண்டார்.
paintings-4
சிரியன் சமூகக் குழுவினர் வாழும் பாஸ்டனில் அனைவரும் முதலில் தங்கினார். 1895 செப்டம்பர் 30 இல் கலில் கிப்ரான் தனது 12 ஆவது வயதில் முதன்முதல் பள்ளியில் சேர்ந்து ஆங்கலம் கற்கலானார். அந்த வயது முதல் அவரது ஓவியத் திறமை சீராக வெளிப்பட்டு ஆசிரியர் பலரது கவனத்தைக் கவர்ந்தது. பாஸ்டனில் செழித்த கலாச்சார, நாடக, கான இசைக் கலைகள் கலில் கிப்ரானைப் பற்றிக் கொண்டன. 1897 இல் கலில் கிப்ரான் லெபனானுக்குத் திரும்பி பேரூட்டில் இரண்டு ஆண்டுகள் தங்கி அரேபிக் இலக்கியம் கற்றார். 1904 இல் (21 ஆவது வயதில்) கலில் கிப்ரானின் முதல் ஓவியக் கண்காட்சி பாஸ்டனில் அரங்கேறியது. 1908 முதல் 1910 வரை புகழ் பெற்ற பிரென்ச் ஓவிய மேதை “ஆகஸ்டு ரோடின்” (August Rodin 1840-1917) கீழ் சிற்பக் கலை, ஓவியக் கலைப் பயிற்சி பெற கலில் கிப்ரான் பாரிசுக்குச் சென்றார். கலில் கிப்ரானின் ஓவியங்கள் பல அவரது குரு ஆகஸ்டு ரோடின் படைப்புகளை ஒத்திருப்பதில் வியப்பில்லை.
கலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிக் மொழியிலும், பிற்காலப் படைப்புகள் 1918 முதல் ஆங்கிலத்திலும் வடிக்கப் பட்டன. 1912 இல் அவர் நியூயார்க் நகரில் இடம்மாறி கவிதைப் படைப்புக்கும் ஓவியக் கலைக்கும் தன் ஆயுட் காலத்தை அர்ப்பணித்தார். தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10 1931) கலில் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது..
++++++++++++++++++
self-portrait1
கலில் கிப்ரான் கவிதை -1
என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
என் ஆத்மாவே ! நீ
ஏன் அழுகிறாய் ?
என் பலவீனத்தை நீ
அறியாயோ ?
உன் கண்ணீரின் கூர்மை
காயப் படுத்தும்
என்னை ஊடுருவி !
காரணம்
என்பிழை தெரியா தெனக்கு !
எதுவரை நீடிக்கும்
உன் அழுகை ?
நின் கனவுகள், ஆசைகள்,
அறிவுரைகள்
எவற்றையும் கலைக்க என்னிடம்
எதுவு மில்லை
மனித வார்த்தைகள் தவிர !
என் மீது கண்ணோக்கு
என் ஆத்மாவே !
உன் உபதேசங்களைக்
கவன மாய் நான்
பின்பற்றி
இரை யானது
என் வாழ்வு முழுவதும் !
எப்படி நோகிறது பார்
என் இதயம் ?
களைத்துப் போனது
என் வாழ்க்கை
பின்பற்றி உன்னை !
உன்னதம் பெற்றது
என் இதயம்
உன் ஆசன பீடத்தில் !
அடிமை யானது உன்னிடம்
இப்போது
பிணைத்துக் கொண்டு ! எனக்குத்
துணைவனாய் இருந்த
என் பொறுமை
இப்போது எனக் கெதிராய்ப்
போட்டி போடுது
பகைவனாய் !
வாலிப வயதெனக்கு
வழங்கியது
வாழ்வில் ஓர் நம்பிக்கை !
கண்டிக்கும் அது என்னை
இப்போது
கவனக் குறைவால்
பேணிப் பாராததால் !
எப்போதும் ஏன் என்னை
வற்புறுத் துகிறாய்
என் ஆத்மாவே ?
எனது இன்பங்களை எல்லாம்
புறக்க ணித்தேன் !
உன் அறிவுரைக் குடன்பட்டு
என்மீது புகுத்திய
உன் நியதியைப் பின்பற்றி
வாழ்வின் பூரிப்பைத்
துறந்தேன் !
நீதி வழங்கு நீ எனக்கு !
அல்லது
கொடு மரணத்தை
விடுவிக்க என்னை
நியாயமே உனது உன்னத
நெறியான தால் !
என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
என் மீது அன்பை
ஏற்றி இருக்கிறாய்
என்னால்
சுமக்க முடியாப் பளுவாய் !
நீயும் அன்பும்
இணை பிரியா வல்லினம் !
ஆனால்
நானும் செல்வமும்
இணை பிரியா பலவீனம் !
எப்போ தாவது
போராட்டம் நின்று விடுமா
வல்லினத் துக்கும்
மெல்லினத் துக்கும் இடையே ?
என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
என் பிடிக்கு அகப்படாத
அதிர்ஷ்டத்தை
எனக்கு அளித்தி ருக்கிறாய் !
நீயும் அதிர்ஷ்டமும்
உச்சி மலையில் மீது
உட்கார்ந் திருக்கிறீர் ! ஆனால்
நானும் இடர்களும்
பள்ளத்தில்
தள்ளப் பட்டுள்ளோம்
ஒன்றாக !
எப்போ தாவது கூடி
ஐக்கிய மாகுமா
மலையும் பள்ளமும் ?
என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
எழில் மயத்தை காட்டினாய்
எனக்கு ! ஆனால்
ஏனோ அதை ஒளித்து வைத்தாய் !
நீயும் எழிலும்
ஒளிச்சுடராய் வாழ்கிறீர் !
ஆனால்
நானும் அறியாமையும்
இருள் வெளியில்
சிறைப் பட்டோம் !
எப்போ தாவது
படையெடுத்து வெல்லுமா
ஒளி யானது
இருளின் மீது ?
முற்றுப் பெறுவதில் தான்
உந்தன் பூரிப்பு
வந்தடையும் உனக்கு ! அதை
எதிர்பார்த்து நீ
இன்பம் அடைகிறாய்
இப்போது !
ஆயினும் இந்த உடல்
வாழ்க்கையில் துன்புறுகிறது
வாழ்ந்திடும் போது !
இதுதான் என்னைக் குழப்பும்
என் ஆத்மாவே !
முடிவற்ற நீடிப்பை நோக்கி
துரிதமாய்ப் போகிறாய் நீ !
ஆயினும் இந்த உடல்
மெதுவாகச் செல்லுது
மரணத்தை நோக்கி !
காத்து நிற்ப தில்லை நீ
அவனுக்கு !
விரைவில் அவனும்
மறைவ தில்லை !
இது சோக மளிக்கும் எனக்கு
என் ஆத்மாவே !
சொர்க்க புரி உன்னை
ஈர்ப்பதால் நீ
உயரத்தில் ஏறுகிறாய் !
ஆயினும் இந்த உடல்
கீழே வீழ்கிறது
பூமியின் ஈர்ப்பால் !
ஆறுதல் அளித்திடாய் நீ
கடவுளுக்கு !
அவரும் உனைப்
பாராட்டுவ தில்லை !
இதுதான் என் அவலநிலை
என் ஆத்மாவே !
மெய்ஞானக் களஞ்சியம் நீ
ஆயினும் இந்த உடல்
அறிவைப் புரிவதில்
பரம ஏழைதான் !
விட்டுக் கொடாதவன் நீ !
கீழ்ப்படி யாதவன்
அவனும் !
இதுதான் எனக்கு வேதனை
என் ஆத்மாவே !
இரவின் மௌன வேளையில்
தேவனைக் காணச் சென்று
இனித்திடும்
தெரிசனம் பெறுவாய் !
ஆயினும் இந்த உடல் என்றும்
முடங்கிக் கிடக்கும்
பிரிவிலும்
நம்பிக்கை இழப்பிலும்
கசப்ப டைந்து !
இதுதான் எனக்குச் சித்திரவதை
என் ஆத்மாவே !
பரிவு காட்டு என்மீது
என் ஆத்மாவே !
++++++++++++++


“நானிங்கு பிறந்தது எல்லோரோடும் இருப்பதற்கு, எல்லோருக்கும் உதவுவதற்கு ! எனது ஏகாந்தத்தில் இன்று நான் புரிவது நாளைக்குப் பல்வேறு மாந்தரால் எதிரொலிக்கப்படும்.”
நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும் உதவுதற்கு !
எனது தனிமையில்
இன்று நான் புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !
கலில் கிப்ரான்
என் ஆத்மாவைக்
கவர்ந்து கொள்ளும்
மிருதுவான முரட்டுக்
கரங்கள் யாருடையவை ?
கசப்பான களிப்பும்,
இனிப்பான வலியும்
கலந்து என் இதயத்தில்
ஊறிப் போயிருக்கும்
ஒயின் எது ?
இரவின் மௌன வேளையில்
என் தலையணை மேல்
பறக்கும் அந்தச்
இறக்கைகள் யாவை ?
என் தூக்கம் கலைக்கும் அவை !
என்ன நடக்கு தென்று
எவரும் அறியக்
காணாது !
ஆனந்தக் களிப்பை விடப்
பேருன்னத மான
சிரிப்பின்
பிரதிபலிப்பை விடப்
பேரழகுத் துயரம்
கலந்திருக்கும் எனது
பெரு மூச்சில் !
கலில் கிப்ரான்
+++++++++++++++++++++++
கவிதை -2 (பாகம் -1)
<< காதலியுடன் வாழ்வு >>
(வசந்த காலம்)

++++++++++++++++++++++++
என் கண்மணியே ! வா
இந்தக் குன்றின் மேல்
இருவரும் உலாவி வருவோம் !
பனிப் பொழிவுகள்
நீராய் ஓடும் !
உறக்கத்தி லிருந்து வாழ்க்கை
உயிர்த் தெழுந்து
மேடு பள்ளங்களில்
திரிந்து வருகிறது !
வசந்த காலம்
வைத்த தடங்களைப்
பின்பற்றுவோம்
தூரத் தளங்களில் !
பசுமைக் குளிர்
வயல்களுக்கு மேல்
உயர்ந்த
மலை உச்சிக்கு நாம்
ஏறுவோம்
மகத்தான உள்ளெழுச்சி நம்மை
இழுத்துக் கொள்ள !
விடிந்துள்ள வசந்த காலம்
குளிர் காலத்து
அங்கியை
மடித்து வைத்து
எலுமிச்சை மரங்கள் மேல்
படிய விட்டது !
பார்ப்பதற்கு
இரவில் அலங்கரித்த
பெருநகர்த்
திருமணப் பந்தலில் உள்ள
மணப்பெண் போல்
தெரிகிறது !
ஒருவரை ஒருவர்
தழுவிக் கொள்ளும்
காதல் ஜோடிகள் போல்
தெரிகின்றன
திராட்சைக் கொடிகள் !
பாறைகளுக் கிடையில்
நடனமிடும்
சிற்றோடைகள் களிப்புடன்
பாடிக் கொண்டு !
மொட்டுகளில் சட்டென
முகிழ்த் தெழும் பூக்கள்
இயற்கை இதயத்தில்
களஞ்சியாய்ச் செழித்த
கடல் வயிற்றி லிருந்து வரும்
நுரை போல் !
என் கண்மணியே ! வா
மல்லிகைக் கிண்ணத்தில்
கடந்த காலத்தில் குளிர்ந்த
கண்ணீர்த் துளிகளைக்
குடித்துத்
தேற்றுவோம் நம் ஆத்மாவை !
பறவைகள் பொழிந்திடும்
கீதங்களைக் கேட்டு
உலாவித் திரிவோம்
உவகை யோடு
மதி மயக்கம் உண்டாக்கும்
தென்றலில் !
ஊதாப் பூக்கள்
ஒளிந்திருக்கும்
அந்தப் பாறை அருகிலே நாம்
அமர்ந்தி ருப்போம் !
அவை கொடுக்குக் கொள்ளும்
இனிய முத்தங்களை
பரிமாறிக் கொள்வோம்
நாமிருவரும் !
+++++++++++++++
“காதல் அன்பு தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு எதனையும் தனக்கென பற்றிக் கொள்வதில்லை. அதை எவரும் கைப்பற்ற முடிவதில்லை. ஏனெனில் காதல் அன்புக்கு காதல் அன்பே போதுமானது.”
கலில் கிப்ரான் (1883-1931)
“ஒவ்வொருவருக்கும் உன் உணவைப் பங்கிட்டுக் கொடு. ஆனால் அதே உண்டியிலிருந்து எடுத்து நீ உண்ணாதே. ஆடிப் பாடிக் கூடிக் களித்திரு. ஆனால் உங்களில் ஒவ்வொருவரும், வீணைக் கருவியின் நாண்கள் தனித்தனியாய் ஒலித்து ஒருங்கே கீத இசையை எழுப்புவதுபோல் தனித்த உரிமையோடு வாழ்ந்திருக்கட்டும்.”
கலில் கிப்ரான்
<< வேனிற் காலம் >>
வயல் வழியே செல்வோம்
வா என் கண்மணி !
வருகிறது
அறுவடைக் காலம் !
பரிதியின் விழிகள்
பக்குவ மாக்கும் பயிர்களை !
காசினி விளைத்திடும்
கனிகளைக்
கண்காணித்து வருவோம்
இதயத்தின் ஆழத்தில்
விதைக்கும்
காதல் வித்துக்கள்
விளைவிக்கும்
களிப்புத் தானி யங்களை
ஊட்டி வளர்ப்பது
அந்த ஆன்மா !
முடிவில்லாக் கொடைகள்
அளிப்பது இயற்கை !
இதயத்தை ஆட்கொண்டு
வாழ்வு செழிப்படைந்து
மூழ்கிப் போவதால்
நிரம்பட்டும் நமது
சேமிப்புக் களங்சியம்
இயற்கையின் விளைவுப்
பயிர்களால் !
பூக்களால் நமது படுக்கை
ஆக்கப் படட்டும் !
ஆகாயம் நமது போர்வை யாய்
அமையட்டும் !
மெல்லிய வைக்கோல்
தலையணை மேல்
சாயட்டும்
நம்மிரு தலைகளும் !
உடல் உழைப்பில் சற்று
ஓய்வெடுத்து
ஓடை முணு முணுப்பைக்
கேட்போம் நாம் !
++++++++++++++
<< பேராற்றல் பெறும் அமெரிக்கா >>
கலில் கிப்ரான்
சங்கமம் அடையும் புத்துலகுக்கு
ஓர் ஆத்மா உண்டு !
உறுதியாய் அந்த ஆத்மாவுக்கு
ஒரு குரலும் உண்டு !
அமெரிக் காவின் குரல்
அகில தேசக் குரலாய்
அமைவது அவனி விதி !
அந்நாட்டுக் கலை, கலாச்சாரம்,
சந்ததிகள்
அந்நியர் ஈடுபாட்டால்
கறைபடும் நிறம் மாறி !
உன்னத யுரேசிய
ஆன்மாக் களின்
உண்மை அழகு
உருவாகி வருகிறது அதன்
கருவாகி !
அகில நாடுகள் தழுவும்
மகத்துவ
ஒருமைப் பாட்டுணர்வை
உருவாக்கும் !
பல்வேறு கலாச்சாரம்
பின்னிடும்
பன்னிறப் பேழை அது !
அந்த அந்த தேச மாந்தர்
மாறுபாடாய்ச்
சிரம்மேல் கொள்கிறார்
அவரவர் சமூகத்து
வரலாற்றுப் பழக்கத்தை !
அனைவரும் ஒருமித்து
நோக்குவது
அமெரிக்க மண்ணை
ஒரு பொதுத் தளமாய் ! ஆயினும்
பொதுவில்லாக்
கருணை உள்ளம்
உதிக்கிறது அங்கே
எதிர்பாராது !
அந்தப் பரம்பரையில்
படிப்படியாய்
விருத்தி யாகி
அனைவரையும் பிணைக்கும்
ஓரின உணர்ச்சி !
கலப்புக் கலாச்சாரமே
கவர்ந்து
உருவாகி வருகுது
அமெரிக்க ஐக்கியம்
பேராற்ற லோடு !
++++++++++++++
“உன் சேமிப்புக் களஞ்சியத்திலிருந்து நீ கொடுக்கும் போது உன் கொடை அளவு சிறிதே ! உன்னை முழுவதும் நீ எப்போது அர்ப்பணம் செய்கிறாயோ அதுதான் உண்மையான பெருங் கொடை.”
கலில் கிப்ரான் (1883-1931)
“வெளிப்படையாகத் தெரியும் பரிவன்புடன் செய்யும் ஒரு பணி. பரிவன்பு இல்லாது நீ வெறுப்போடு பணி செய்ய நேர்ந்தால் அந்த வேலையை விட்டு விலகி ஆலயத்தின் முன்னமர்ந்து பரிவோடு பணிபுரிவோர் இடும் பிச்சையை நீ பெற்றுக் கொள்ள வேண்டும்.”
கலில் கிப்ரான்
<< இலையுதிர் காலம் >>
வா நாமிருவரும் போவோம்
முந்திரிப் பழத் தோப்புக்கு
திராட் சையைச்
பறித்துச் சாரெடுக்க !
பழரசத்தை விட்டு வைப்போம்
பழைய குடங்களில் !
காரணம் :
யுக யுகமாய்ச்
சேர்ந்திடும் அறிவை
ஆன்மா
முடிவில்லா நீடிப்புப்
படகுகளில்
வடித்துள்ளதால் !
மீளுவோம் நமது குடிலுக்கு !
வீழ்ந்திட வைக்கும்
மஞ்சல் இலைகளை
வீசிடும் காற்று !
வேனிற் காலத் துக்கு
இலைகள் மூடும்
உதிரும் பூக்கள்
இரங்கற் பா பாடும் !
எனக்கென்றும் உரியவளே !
வீட்டுக்குள் வா என் கண்மணி !
வேனிற் தளம் நோக்கிப்
புள்ளினம்
புரிந்திடும் பயணம் !
குளிர்ந்து போன
அறுவடை வயல்கள்
அழுது வாடும் தனிமையில் !
கண்ணீர் வரண்டு போகும்
மல்லிகைச் செடிக்கும்
முல்லைக் கொடிக்கும் !
திரும்பிச் செல்வோம் நாம்
பாடிக் களைத்த அந்த
ஓடைக்கு !
பொங்கி எழுந்த ஊற்றுகள்
அடங்கி விட்டன
அழுது தீர்த்த தீவிரத்தில் !
பழங் குன்றுகள்
கழற்றிச் சேமிக்கும் தமது
பன்னிற உடுப்புகளை
எச்சரிக்கை யோடு !
வா என் கண்மணி !
இயற்கை ஓய்ந்து போனது
நியாயமே !
மகிழ்ச்சிக்கு விடைகூறி
வழியனுப்பி வைக்கும் இயற்கை
மௌன மாக
மனத் திருப்தி யோடு
சோக கீதம் இசைத்து !
++++++++++++++
Winter to be included
+++++++++++++
முடிவில்லா நீடிப்புள்ள ஆத்மா பூர்த்தி பெறுவதில்லை ! அது பூரணத்தைத் தேடி எப்போதும் செல்கிறது ! பிறகு என்னிதயம் எழில்மய வாழ்வை நோக்கிக் கேட்கிறது : “நீயே எல்லா ஞானக் களஞ்சியம் ! பெண்ணின் மர்மத்தை எனக்குத் தெளிவு செய் !” அது பதில் அளித்தது. “ஓ மனித இதயமே ! பெண் என்பவள் உனது மனப் பிரதிபலிப்பே ! நீ எப்படி உள்ளாயோ அவள் அப்படி இருக்கிறாள் ! எங்கெல்லாம் நீ வசிக்கிறாயோ அங்கெல்லாம் அவள் வாழ்கிறாள் ! அறிவில்லாதவர் விளக்காத மதத்தைப் போன்றவள் அவள் ! முகில் மறைக்காத ஒரு நிலவைப் போன்றவள் ! மாசில்லாத் தென்றலைப் போன்றவள் !”கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter) “அனுதினம் நீ வாழும் வாழ்க்கையே உனது ஆலயம் ! உனது மதம் !
கலில் கிப்ரான் (1883-1931)
“துயர்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்.”
கலில் கிப்ரான் (கண்ணீரும் சிரிப்பும்)
“எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மேற்தளக் காற்றில் பறந்து நான் கற்பனை உலகில் மிதந்தேன் ! ஆங்கே தெய்வீக ஒளிவீசும் வட்டாரத்தோடு நெருங்கி இருந்தேன் ! இங்கே நான் பொருளாயுதச் சிறையில் கிடக்கிறேன் !
கலில் கிப்ரான்
<< அலையின் கீதங்கள் >>

உறுதியுள்ள கடற்கரை
என்னரும் நாயகன் !
நானவள் ஆசை நாயகி !
இறுதியில் இருவரும் இணைந்தோம் காதலால் !
நிலவென்னை இழுக்கும் அவனிடமிருந்து !
நெருங்கிப் பிறகு பிரிவேன்
வெறுப்புடன் பிரியா விடை
பெறுவேன் சிறிது சிறிதாய் !விண்ணீலத் தொடுவானின்
பின்புறம் ஒளிந்து விரைவேன்
என்னுடை வெண்ணிற நுரைகள் அவன்
பொன்னிற மணல்மேல் தெளிக்கும் !
பின்னிக் கலப்போம் ஒன்றாய்
உருகிக் குவிந்த சுடர் ஒளியில் ! அலைகளின் தாகத்தைத் தணித்து
அதனுடை மோகத்தைத் தீர்ப்பேன் !
எனது குரல் ஒலி மிதமாகும்
எனது கோபம் அடங்கிப் போகும் !
பொழுது வெளுத்ததும் காதல் விதிகளைப்
பூஜித் திடுவேன் அவன் காதில் !
தழுவிடு வான் அவன் என்னை
நீடித்த இச்சை யோடு !
மாலையில் நம்பிக்கைக் கீதம் இசைப்பேன்
மெல்லிய முத்தம் அவனுக்கு முத்திரையாய்
முகத்தில் இட்டுப் பயந்து நகர்வேன் !
அமைதியாய் பொறுமையில் அவனோ
சிந்தித் திடுவான் ! என் சீற்றத் துக்கு
அடைக்கலம் தரும் அவன் பரந்த மார்பு !
அலைகள் மீளும் போது நாமிருவர்
தழுவிக் கொள்வோம் ஒருவரை ஒருவர் !
அலைகள் நீங்கும் போது அவன் கால்
அடியில் வீழ்வேன் நான் பூஜித்து !
++++++++++++++
என்னிதயம் நடந்து சென்று அன்புக்கும் அழகு மயத்துக்கும் மகளான ஞானக் களஞ்சியத்தைக் கேட்டது : “எனக்கு ஞானத்தை அளித்திடு, பிற மக்களுக்கு நான் அதைப் பகிர்ந்து கொள்ள.” அதற்குப் பதில் கிடைத்தது : “ஞான மென்று சொல்லாதே ! ஆனால் சொத்தென்று கேள் ! எனென்றால் மெய்யான சொத்து வெளிச் சூழலிருந்து வருவதில்லை ! புனிதத்திலும் புனிதமான வாழ்விலிருந்து ஆர்ம்பமாகிறது. உன் அனுபவத்தை மற்ற மக்களோடு நீ பகிர்ந்து கொள்.”
கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)
“நீ மௌன நதியிலிருந்து நீர் அருந்துகிற போதுதான் மெய்யாகப் பாட முடியும். நீ மலைச் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போதுதான் நீ மேலேறத் துவங்குகிறாய். இந்தப் பூமித் தளம் உன் பாதங்களை உரிமை கொள்ளும் போதுதான் நீ மெய்யாக நாட்டியம் ஆட முடியும்.”
கலில் கிப்ரான் (1883-1931)
“மனிதரை, அவரது சந்ததிகளை, மனிதரின் விதிகளை, அவரது உபதேசங்களை, கருத்துகளை, அவரது ஆரவாரத்தை மற்றும் புலம்பலைத் தவிர்ப்பதற்கே அல்லாமல், நான் மதத்தின் பொருட்டு ஏகாந்தத்தைத் தேடவில்லை.”
கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)
<< அலையின் கீதங்கள் >>
நடனம் ஆடினேன்
நான் பன்முறைக்
கடற் கன்னிகளைச் சுற்றி வந்து
ஆழ்கடல் உள்ளிருந்து
மேலேறி !
பாறை மீதமர்ந் தேன்
தாரகைகள் நோக்கிட !
என்னிடம் காதலர்
பன்முறைப் புகார் செய்வதைக்
கேட்டுளேன்
தாம் குள்ளமாய் உள்ளதை !
ஆறுதல் கூறுவேன்
அவர்க்கு மனச்
சோர்வுகள் நீங்கிட !
பாடுபடுத்துவேன் பாறைகளைப்
பன்முறை !
புன்முறுவ லோடு
தடவிக் கொடுப்பேன் !
ஆயினும் அவை
நன்றியுடன் எனைக் கண்டு
நகைப்ப தில்லை !
மூழ்கிடும் ஆத்மாக்களைத்
தூக்கி வந்து
பன்முறைப் பரிவுடன்
அன்புக்கரை சேர்த்தேன் !
ஆத்மாக் களுக்கு
மன உறுதி அளிக்கும்
கடற்கரை என்
உடற் சக்தி எடுத்து !
விலை மதிப்பில்லா
ஒளிக் கற்களைக் களவாடிப்
பன்முறை
அன்புக் கரைக்குப்
பரிசாய் அளித்தேன் !
மௌன மாக
எடுத்துக் கொண்டான் !
நானின்னும் கொடுத்தாலும்
வாங்கிக் கொள்ள
தயக்க மில்லை
எப்போதும் !
நடுநிசிப் பொழுதில்
உயிர்ப் பிராணிகள் எல்லாம்
ஆழ்ந்த உறக்கத்தை நாடி
மூழ்கிப் போன வேளையில்
அமர்ந் திருந்தேன் நான்
பாடிக் கொண்டு
ஒரு சமயம் !
பெரு மூச்சை விட்ட படி
மறு சமயம் !
உறக்க மில்லை எப்போதும்
எனக்கு மட்டும் !
எழுப்பி விட்ட தென்னை
ஐயகோ ! எனது
விழிப்புத் தன்மை !
ஆயினும்
மனித நேயன் நான்
சத்தி யத்தைக்
காதலிக்கும்
சித்த வலு பெற்றவன் நான் !
களைத்துப் போயினும்
ஒருபோதும்
மரண மில்லை
எனக்கு !
++++++++++++++
காதல் சேயிடம் என் இதயம் கேட்டது : “அன்பே ! எங்கே நான் மனநிறைவைக் காண்பேன் ? உன்னுடன் சேர இங்கு அது வரப் போவதாய்க் கேள்விப்பட்டேன்.”
காதல் சேய் அதற்குப் பதில் உரைத்தாள் : “பேராசையும், லஞ்சமும் முதன்மையான நகருக்கு மன நிறைவு ஏற்கனவே உபதேசம் செய்யப் போய் விட்டாள். நமக்கு அவள் தேவை யில்லை.”கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter) “உனக்கு வலி உண்டாகும், நீ புரிந்து கொண்ட அறிவுக் கோட்டை தகர்க்கப்படும் போது.”
கலில் கிப்ரான் (1883-1931)
“நான் ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : தம்மையே விற்று அதே பணத்திற்குத் தம்மை விடத் தாழ்வான ஆன்மீக அல்லது உலோகாயுதப் பொருட்களை வாங்கும் மனிதரின் முகத்தைக் காணாமல் இருப்பதற்கு !”
கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)
<< மரணமே கவிஞன் வாழ்வு >>
வருவாய் அழகிய மரணமே !
வாஞ்சை யோடு
ஏங்கிடும் உன்னைத்தான்
என் ஆத்மா !
வா என்னை நெருங்கி !
வந்தென் வாழ்க்கையின்
இரும்புத்
தளைகளை அவிழ்த்திடு !
களைத்துப் போனேன்
அவற்றின்
கனத்தைச் சுமந்து !
வருவாய் இனிய மரணமே !
வந்தென்னை விடுவிப்பாய்
வழிப் போக்கனாய்
என்னை நோக்கிடும்
பக்கத்துச் சொந்த
பந்தங்களிருந்து !
என்னெனில் நான் அவருக்கு
விளக்கிச் சொல்வேன்
தேவதை களின் வாசகத்தை !
வருவாய் மௌன மரணமே !
இருட்டு மூலை
மறதியில்
விட்டுச் சென்ற என்னை கடத்திச் செல்
இந்தக் கும்பலிட மிருந்து !
எனெனில்
எளியவர் குருதியை நான்
அவரைப் போல்
பிழிந்திட மாட்டேன் !
வருவாய் சாந்த மரணமே !
இழுத்துக் கொள்
என்னை
உந்தன் வெள்ளை
இறக்கைக் குள்ளே !
ஏனெனில்
என்னாட்டு மாந்தருக்கு
இனி நான்
தேவை யில்லாதவன் !
தழுவிடு என்னை மரணமே !
முழுப் பரிவோடு அன்பு
கொண்டு !
உன் உதடுகள் தொடட்டும்
என் உதடுகளை !
அன்னையின் முத்தங்கள்
சுவைக் காதவை !
தங்கையின் கன்னத்தைத்
தடவா தவை !
அருமைக் காதலியின்
விரல் நுனிகளை
வருடா தவை !
வா வந்தென்னை
ஏற்றுக் கொள்
என்னினிய மரணக் காதலி !
(From : “A Poet’s Death is His Life” By Kahlil Gibran)
+++++++++++++
“கலைத்துவம் என்பது புதிராகவும், மறைந்தும் இருப்பவற்றுள் நமக்கு வெளிப்படையாய்த் தெரிவதை விட ஒரு படி உயர்ந்தது !
“எழில் (Beauty) என்பது கண்ணாடியில் தன்னையே நோக்கிக் கொள்ளும் முடிவில்லாமை (Eternity).”
கலில் கிப்ரான் (1883-1931)
“நான் உலகத்தை விட்டு ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : பணிவு என்பது பலவீனம் என்றும், பரிவு என்பது கோழைத்தனம் என்றும், செல்வப் பகட்டு ஒருவித வலுவென்றும் நம்பிடும் பல்வேறு மாந்தருக்கு மதிப்பளிப்பதில் நான் களைப்படைந்து போவதே !”
கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)
<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >>

ஒரு மணி நேரமே
ஒதுக்கப் பட்டது
அழகைத் தேடும் முயற்சிக்கு !
மெலியோர் அஞ்சி
வலியோர்க்கு அளித்திடும்
பூரண நூற்றாண்டுக்
கீர்த்திக்குக்
காதல் தகுதி பெறும் !
அந்த நேரத்தில் தான்
வெளிப்படும்
மனிதனின் இயற்கைத் தன்மை !
அந்த நூற்றாண்டில் தான்
உறங்கிடும் மெய்ப்பாடு
தடுமாற்றக் கனவுகளின்
நடுங்கும் கைகளுக்கு
இடையே !
அந்த நேரத்தில் தான்
ஆத்மா நோக்கிக் கொள்ளும்
தனக்காக
இயற்கையின் நியதியை !
அந்த நூற்றாண்டுக் காக
தன்னைத் தானே
ஆத்மா
சிறையிட்டுக் கொள்ளும்
மனித விதியின் பின்னே !
அடக்கு முறை
இரும்பு
விலங்கு மாட்டப்படும்
ஆத்மாவுக்கு !
அந்த நேரம் தான்
உள்ளுணர்ச்சி எழுந்திடும்
சாலமனின்
இசைப் பாக்களால் !
அந்த நூற்றாண்டில் தான்
குருட்டுத்தன அதிகாரம்
பால்பெக்* கோயிலைப் (1)
பாழாக்கியது !
அந்த நேரம் தான்
(ஏசு கிறித்துவின்)
“மலைப் பேருரை” உதித்தது !
அந்த நூற்றாண்டில் தான்
தகர்க்கப் பட்டன
பல்மைராக்* கோட்டைகளும் (2)
பாபிலோன் கோபுரமும் !
அந்த நேரம் தான்
முகமது நபி மெக்காவுக்குப்
பயணம் இருந்தது !
அந்த நூற்றாண்டு தான்
மறந்தது
அல்லாவை !
கொல்கொதாவை* (3) !
சினாய் மலையை !
*********
1. பால்பெக்* கோயில் (Baalbek Ruined Temple in Lebanon)
2. Palmyra is an ancient city of central Syria,
3. கொல்கொதா (Golgotha)
(ஏசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த இடம்)
++++++++++++++
சுதந்திர மனிதர் நாம் !
சுதந்திர மனிதர்கள் நாம் !
கிழக்கையோ மேற்கையோ
தழுவியோர் அல்லர் !
எல்லைக் கோடுகள் நமது
இதயத்தில் இல்லை !
சிலுவை, பிறை நிலவை
வழிபடுவோர் இல்லை !
ஏசுவையோ புத்தரையோ
நேசிப்போர் இல்லை !
யூதர் மீதோ, இஸ்லாமியர் மீதோ
பேதமை இல்லை !
சுதந்திர மனிதர்கள் நாம் !

கலில் கிப்ரான் (From “A Chant of Mystics” & Other Poems 1921)

நான் ஏகாந்தத்தைத் தேடினேன், போலி அறிவைத் (Spectre of Knowledge) தமது கனவுகளில் கண்டு கொண்டு அவரது குறிக்கோளை அடைந்து விட்டதாக நம்பிடும் சுயநல வாதிகளிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ள !”
கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)


<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >>

ஒரு மணி நேரமே
ஒதுக்கப் பட்டது
பலவீனரின்
களவு போன சமத்துவத்தைப்
பற்றி நாம்
கவலைப் படுவதற்கும்
மனம் நோவ தற்கும் !
பேராசையும்
பெரும் பதவி மோகமும்
நிரம்பிய
நூறாண்டை விட அது
பாராட்டத் தக்கது !
அந்த மணி நேரத்தில்தான்
எந்தன் இதயம்
சுத்த மானது
துக்கத்தைச் சூடாக்கி
காதல் விளக்கேற்றி
கதிரொளி வீசிக் கொண்டு !
அந்த நூற்றாண்டில் தான்
மெய்ப்பாடைத் தேடும்
வேட்கை
மேதினியின் நெஞ்சுக்குள்
மேவியது !
அந்த மணி நேரத்தில்
வேரிட்டன
ஓங்கி உயர்வ தெல்லாம் !
அந்தத் தருணம் தான்
மௌன தியானத்தின்
மணிக் கணக் கானது
தியான வேளை,
பிரார்த்தனை வேளை
புதிய யுகத்தின்
நன்னெறி வேளை !
அந்த நூற்றாண்டு தான்
நீரோ மன்னன் வாழ்க்கை
மண் பொருள்
மூலமாய்த் தன்னையே
அர்ப்பணிக்கும் !
யுக யுகமாய்
நாடக அரங்கில்
காட்சி தரும்
வாழ்க்கை இதுதான் !
ஏட்டில் பதிக்கப் பட்டது
நூறாண் டுகளாய் !
புதிராய்ப் பல்லாண்டுகள்
நீடித்தது !
பாக்களாய் அதனைப் பாடியது
பல நாட்களாய் !
ஒரு மணி நேரத்தில்
உன்னத மானது !
ஆனால் அத்தருணம்
முடிவில்லாத
மாணிக்கக் கல்போல்
நிலை பெற்றது
மதிப்புடன் !
++++++++++++++



உன்னிதயம் ஓர் எரிமலையாக இருக்குமேயானால் அதிலிருந்து பூக்கள் மலரும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம் ?”
“அழ முடியாத அறிவு, புன்னகை சிந்தாத வேதாந்தம், குழந்தைகள் முன் பணியாத உன்னதம் ஆகியவற்றிலிருந்து நீ விலகி நில்.”
“விடுதலை இல்லாத வாழ்வு ஆன்மா இல்லாத உடம்பை ஒத்தது.”
“ஆன்மா ஆழ்ந்து செழிப்புறுவதைத் தவிர நட்பில் வேறெந்தக் குறிக்கோளும் இருக்கக் கூடாது.”
கலில் கிப்ரான்.
<< கவிஞன் யார் ? >>
இந்த உலகிற்கும் எதிர்கால உலகிற்கும்
இணைப்புப் பாலம் அவன்.
தாகமுற்ற ஆத்மாக்கள்
தண்ணீர் குடிக்க வந்திடும்
தூய நீர் ஊற்று அவன்.
எழில் நதி நீர் பாய்ச்சிப்
பசித்தோர் பசி அடக்கும்
பழங்கனி காய்க்கும் மரம் அவன்.
இன்னிசைக் கானம் பாடி
மனத்தாழ்வை ஒழிக்கும் வானம் பாடி !
விண்வெளி முகம்
முழுதும் நிரம்பும் வரை
அடிவான் மீது
மேலும் கீழும்
தோன்றும் வெண்முகில் அவன்.
பின்பு ஒளியை அனுமதிக்க
வாழ்வுத் தள மலர்கள் மேல் படிந்து
இதழ்களை விரிப்பான் !
தெய்வம் அனுப்பிய தேவன் அவன்
மெய்யான உபதேசம்
செய்திட வந்தவன்.
இருள் வெல்லாத
ஒளிச்சுடர் விளக்கு !
புயல் அணைக்காத ஒளி விளக்கு.
காதல் தேவதை
எண்ணை ஊற்றி
இசைக் கீதம் ஏற்றிய தீபம் !
ஏகாந்த வாதி அவன் !
பரிவோடு
எளிய உடை
உடுப்பவன் அவன் !
உள்ளெழுச்சி தனைத்
தூண்டி விட
இயற்கை மடி மீது
அமர்பவன் அவன் !
ஆத்மீகம் வரவேற்கக்
காத்திருந்து
இரவு மௌனத்தில்
தியானிப் பவன் !
தனது இதயத்தில்
விதைகளை நட்டு வைத்து
வன வயல்களில் பரிவு விதை
விதைப்பவன்.
மனித இனம் அவற்றை
அறுவடை செய்யும்
தமக்குணவாய் ஊட்டித்
தான் வளர்வதற்கு !
++++++++++++
மகா மேதைகள்
என் தேசத்தின் ஊழ்விதி
கவிதை -30 பாகம் -2
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத வேந்தன் பரிதிக்கு முன்னால் நாம் பிறந்து வளர்ந்து நம்மை ஆடவர் மாதராய் ஆளாக்கிய குன்றுகளையும், சமவெளிகளையும் ஆக்கிரமிப்பான் ? புதிய யுகம் ஒன்று காலையில் புலர்ந்து லெபனான் சிகரத்தின் மீது தோன்றுமா ? ஏகாந்தனாய் உள்ள ஒவ்வொரு சமயத்திலும் நான் இந்த வினாக்களை என் ஆத்மாவிடம் கேட்கிறேன். ஆனால் ஊழ்விதி அதிபனைப் போல் என் ஆத்மா ஊமையாக இருக்கிறது.”
கலில் கிப்ரான். (The Giants)
++++++++++++++++++++++++
<< என்  தேசத்தின்  ஊழ்விதி >>
++++++++++++++++++++++++
இராப் பகலாகச் சிந்திக் காதவர்
எவர் உங்களில் இருக்கிறார்
போதை ஏறிய
பூத மன்னர் ஆட்சியில்
விதவைகள் கண்ணீரும்
அனாதைகள் அழுதிடும் நீரும்
விழுந்திடும்
உலகத்து ஊழ் விதியை
ஒரு பொழு தேனும் எண்ணாமல் ?
பரிணாம விதியை நம்புவோரில்
ஒருவன் நானும் !
பூரண விடுதலைப் புரட்சிகள்
கோர மாந்தரால்
உதித்தெழும் என்று
நம்புவோன் நான் !
மதங்களும் அரசாங் கமும்
உன்னத பீடத்துக் குயரும் என்று
நம்புவோன் நான் !
எனைச் சுற்றி இருப்பவர்
அனைவரும்
பூதங்கள் உதிப்பதைக் காணும்
குள்ளர்கள் !
தவளைகள் போல்
கத்துவார் இந்தக் குள்ளர் !
இவ்வுலகம் காட்டு மிராண்டிகள்
இருப்பிட மாய்த்
திருப்பி வந்துள்ளது !
விஞ்ஞானக் கல்வி படைத்தவை
இந்தப் புது ஆதி வாசிகளால்
அந்த மாகி அழிந்தன !
கற்காலத்துக் குகை வாசிகளாய்
தற்போது மாறி விட்டோம் !
நாம் படைத்த
நாச எந்திரங்களும்
நுணுக்கத் தொழிற் துறைக்
கொலைக் கருவிகளும்
மினுப்பதைத் தவிர
நம்மை வேறெதுவும்
தனித்துக் காட்டு வதில்லை !
++++++++++++
(தொடரும்)
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris [1968]
5. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
For further reading:
This Man from Lebanon by B. Young (1945); This Man from Lebanon by B. Young (1945); Kahlil Gibran: A Biography by M. Naimy (1959); The Parables of Kahlil Gibran by A.S. Otto (1963); Kahlil Gibran by K.S. Hawi (1963); An Introduction to Kahlil Gibran by S.B. Bushrui (1970); Kahlil Gibran: The Nature of Love by A.D. Sherfan (1971); Kahlil Gibran by J. Gibran and K. Gibran (1975); Gibran of Lebanon, ed. by S.B. Bushrui and P. Gotch (1975); The Meaning of Kahlil Gibran by M.S. Daoudi (1982); The Lebanese Prophets of New York by N. Naimy (1985); Kahlil Gibran of Lebanon by S.B. Bushrui (1987); Modern Arabic Poetry, ed. by Salma Khadra Jayyusi (1987); Kahlil Gibran: A Prophet in the Making by W. Shehadi (1991); Kahlil Gibran: His Life and World by Jean Gibran [1998]
For further information:
The Prophet By Kahlil Gibran /
A Multi media Tribute – Suom.: Gibranin keskeinen tuotanto on julkaistu suomeksi nimellயூ Idயூn ja lயூnnen profeetta, teos Ajan virta sisயூltயூயூ Gibranin mietelauseita. Teokseen Mestarin sanoja (1993) on koottu Gibranin kaksitoista kirjaa.
Selected works:
• AL-MUSIQA, 1905
• ARA’IS AL MURUDJ, 1906 – Nymphs of the Valley
• STONEFOLDS, 1907
• ON THE TRESHOLD, 1907
• AL-ARWAH AL-MUTAMARRIDA, 1908 – Spirits Rebellious – Kapinalliset henget
• DAILY BREAD, 1910
• FIRES, 1912
• AL-AGNIHA AL-MUTAKASSIRA, 1912 – The Broken Wings – Sயூrkyneet siivet
• DAM’AH WA-IBTISAMAH, 1914 – A Tear and a Smile
• THE MADMAN, 1918 – Jumalan tuli
• TWENTY DRAWINGS, 1919
• AL-MAWAKIB, 1919 – The Procession
• AL-’AWASIF, 1920
• THE FORERUNNER, 1920 – Edellயூkயூvijயூ
• THE PROPHET, 1923 – Profeetta
• AL-BADA’I’ WA-AL-TARA’IF, 1923
• SAND AND FOAM, 1926 – Merta ja hiekka
• JESUS, THE SON OF MAN, 1928 – Jeesus, ihmisen poika, suom. Helmi Krohn
• THE EARTH GODS, 1931 – Maan jumalat
• THE WANDERER, 1932 – Vaeltaja
• GARDEN OF THE PROPHET, 1933 – Profeetan puutarha
• PROSE POEMS, 1934 – Temppelin portilla
• TEARS AND LAUGHTER, 1946
• THE SECRETS OF THE HEART, 1947
• SPIRIT REBELLIOUS, 1948
• NYMPHS OF THE VALLEY, 1948
• A TREASURY OF KAHLIL GIBRAN, 1951
• THE BROKEN WINGS, 1957
• THE PROCESSION, 1958
• A SELF PORTRAIT, 1959
• THOUGHTS AND MEDITATIONS, 1960
• A SECOND TREASURY OF KAHLIL GIBRAN, 1962
• SPIRITUAL SAYINGS, 1962
• THE VOICE OF THE MASTER, 1963 – Mestarin யூயூni
• MIRRORS OF THE SOUL, 1965
• THE WISDON OF GIBRAN, 1966
• SPIRITUAL SAYINGS, 1970
• PROPHESIES OF LOVE, 1971
• BELOVED PROPHET, 1972
• LAZARUS AND HIS BELOVED, 1973
• THE DEATH OF THE PROPHET, 1979 (as remembered by Almitra, channeled through Jason M. Leen)
• DRAMAS OF LIFE, 1982
• BLUE FLAME, 1983
• KAHLIL GIBRAN: PAINTINGS AND DRAWINGS 1905-1930

No comments:

Post a Comment

THANK YOU