Wednesday 2 January 2013

புத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 2



என் வீட்டுக்குப் பக்கத்திலேயே என்னுடைய தமிழ் ஆசிரியரும் குடியிருந்தார். அவரிடம் என்னுடைய தேவையைச் சொன்னவுடன் லைப்ரரியில் சேர்வது நல்ல விஷயம்தானே, நானே ஹெட்மாஸ்டரிடம் சொல்லி கடிதம் வாங்கித்தருகிறேன் என்று சொல்லி அப்படியே செய்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு லைப்ரரியில் சேர்ந்தேன்.

தினமும் ஸ்கூல் விட்டவுடன் லைப்ரரிக்குச் சென்று ஒரு நாவலை எடுத்து வருவேன். அங்குதான் எனக்கு ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், வி..காண்டேகர் ஆகியோர் பரிச்சயமானார்கள். ஏறக்குறைய அவர்கள் எழுதிய அனைத்து நாவல்களையும் படித்துவிட்டேன்.

படிப்பது என்றால் எப்படி தெரியுமா? புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 500-600 பக்கங்கள் இருக்கும். லைப்ரரியிலிருந்து எடுத்து வீட்டுக்கு வந்தவுடன் படிக்க உட்கார்ந்தால் நாவலை முடித்துவிட்டுத்தான் தூங்கச் செல்வேன். தமிழ் நாவல்களை மணிக்கு சுமார் 130 பக்கங்கள் படிப்பேன். பிற்காலத்தில் ஆங்கில நாவல்கள் படிக்கும்போது இந்த வேகம் மணிக்கு 100 பக்கங்கள் ஆகக் குறைந்துவிட்டது. காரணம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மனதிற்குள்ளேயே மொழிபெயர்த்து மூளைக்குள் செலுத்தவேண்டும்.

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் இருவரும் எழுதியவை அனைத்தும் துப்பறியும் கதைகள். கொலை, கொள்ளை ஆகியவை நிறைய இருக்கும். அவைகளைப் படித்துவிட்டு பல நாட்கள் கனா கண்டு உளறியிருக்கிறேன். பிற்காலத்தில்தான் அவை அனைத்தும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் மொழிபெயர்ப்பு என்று தெரிய வந்தது.

வை.மு.கோதைநாயகி அம்மாளின் கதைகள் ஏறக்குறைய ஒரே வார்ப்பில் உருவானவை. அந்தப் புத்தகங்கள் ஒரு தனி சைசில் அதாவது புல்ஸ்கேப் மாதிரி, சுமார் 200 பக்கங்கள் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் குடும்பக் கதைகள்தான். கதாநாயகி குடும்பத்தில் படும் கஷ்டங்களை படிப்பவர் மனது உருகும்படி எழுதியிருப்பார்கள். கதையின் 190 வது பக்கம் வரை கதாநாயகியின் கண்ணீர்தான். கடைசி 10 பக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறி நாயகியும் நாயகனும் இன்பமாக வாழ்ந்தார்கள் என்று கதை முடியும்.

அந்தக்காலத்தில் பிரபலமாக இருந்த மாத, வாரப் பத்திரிக்கைகள்கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தினமணி கதிர், மஞ்சரி, கல்கண்டு முதலானவை. எல்லாப் பத்திரிக்கைகளிலும் தரமான சிறுகதைகளும், பிரபல ஆசிரியர்கள் எழுதும் தொடர்கதைகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. இதுதான் கல்கி, தேவன், லக்ஷ்மி, நாடோடி, கி.வா.., அகிலன், எஸ்..பி., சுஜாதா, சாண்டில்யன் ஆகியோரின் கதைகளைப் படித்த காலம். அந்த மாதிரி சிறுகதைகளும் தொடர்கதைகளும் மறைந்து போனதை நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது.

கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் நாகநந்தி அடிகளையும் வந்தியத்தேவனையும் எப்படி மறக்கமுடியும்? தேவனின் துப்பறியும் சாம்பு காலத்தால் அழிக்கமுடியாத பாத்திரம். ஆனால் இன்று அழிந்துதான் போய்விட்டது.

பத்திரிக்கைகள் அல்லாமல் தனி நாவல்களாக மு.வரதராசனார் (கரித்துண்டு), புதுமைப்பித்தன் கதைகள் (கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்) ஆகியவைகள் இளைஞர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்ட கதைகளாகும்.

இப்படி தமிழ் கதைகள் மட்டுமே படித்துக் கொண்டிருந்ததால் என் ஆங்கில அறிவு மிகவும் கேவலமான நிலையில் இருந்தது. நான் தமிழ் மீடியம் ஸ்கூலில் படித்தேன். போதாக்குறைக்கு என் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆங்கில இலக்கணம் முழுவதுமாக சொல்லிக் கொடுக்கவேயில்லை. எஸ்.எஸ்.எல்.சி அதாவது ஸ்கூல் பைனல் பரீட்சையில் திரு. நரசிம்மய்யர் எழுதிய நோட்ஸை வைத்து, சரியாக மினிமம் பாஸ் மார்க் (40/100) வாங்கி பாஸ் பண்ணினேன். மற்ற பாடங்களில் நல்ல மார்க் வாங்கியிருந்ததால் காலேஜ் அட்மிஷன் சுலபமாக கிடைத்து விட்டது.

அந்தக் காலத்தில் இன்டர்மீடியட் என்பது கல்லூரிகளில் ஆரம்ப கட்ட வகுப்பின் பெயர். இரண்டு வருடம் படிக்கவேண்டும். முதல் நாள் வகுப்பில் போய் உட்கார்ந்தால் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் நடத்தினார்கள். நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். வகுப்பில் என்ன நடக்கிறதென்று தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. வீட்டில் படித்தவர்கள் யாருமில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை.

No comments:

Post a Comment

THANK YOU