Sunday 29 July 2012

ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம்


ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம்

தனது மகனின் தலைமையாசிரியருக்கு
ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு

மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே,

எனது மகன், அனைத்து மனிதர் களும் நியாயமானவர்கள் அல்ல;அனைத்து மனிதர்களும் உண்மை யானவர்கள் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல ஒரு பின்பற்றத் தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று ஓர் அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பின்வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும்.

ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரைவிட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அவனுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.

அவனுக்குப் பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள்.

அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என்று விமரிசித்தாலும், தனது சுய சிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டு குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய்க் கரைந்து போய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும். எனி னும் உண்மை என்னும் சல்லடையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். தனது செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும்.

ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மா விற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. பெருங் கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டிப் போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

அவனை அன்போடு நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி மற்றவர்களைச் சார்ந்திருக்க வைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காய்ச்சப்பட்ட இரும்பு மட்டும்தான் பயன்மிக்கதாக மாறுகிறது.

தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் அதே வேளை யில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இது ஒருமிகப் பெரிய பட்டியல் தான். இதில் உங்களுக்குச் சாத்திய மானதையெல்லாம் நீங்கள் அவனுக் குக் கற்றுக் கொடுங்கள்.

அவன் மிக நல்லவன் , எனது அன்பு மகன்.

No comments:

Post a Comment

THANK YOU