Sunday 15 July 2012

மகா சிவராத்திரி சிவராத்திரி விரதமுறை:


சிவராத்திரி விரதமுறை:
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிடவேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
நான்கு கால பூஜைகள்:
சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய சிறப்பான அபிஷேக, அலங்காரம், நிவேதனம் ஆகியவற்றை பெரியோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி சிவ வழிபாடு செய்வது நலம்பயக்கும்.
முதல் காலம்: அபிஷேகம் – பஞ்சகவ்யம். மேற்பூச்சு – சந்தனம். வஸ்திரம்-பட்டு. ஆடையின் வண்ணம் – சிவப்பு, நிவேதனம் – காய்கறிகள், அன்னம். வேதம் – ரிக்.
திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது – சிவபுராணம். தீபம் – விளக்கெண்ணெய். தத்வ தீபம் – ரதாரத்தி. அட்சதை – அரிசி. மலர் – தாமரை. பழம் – வில்வ பழம்.
இரண்டாம் காலம்: அபிஷேகம் – பஞ்சாமிர்தம். மேற்பூச்சு – பச்சைக்கற்பூரம். வஸ்திரம் – பருத்தி. ஆடையின் வண்ணம் – மஞ்சள், நிவேதனம் – பரமான்னம், லட்டு. வேதம் – யஜூர். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது – இருநிலனாய்… பதிகம். தீபம் – இலுப்பை எண்ணெய். தத்வ தீபம் – ஏக தீபம். அட்சதை – யவை. மலர்கள் – தாமரை, வில்வம். பழங்கள் – பலாப்பழம்.
மூன்றாம் காலம்: அபிஷேகம்- தேன். மேற்பூச்சு – அகில். வஸ்திரம் – கம்பளி. ஆடையின் வண்ணம் – வெள்ளை, நிவேதனம் – மாவு, நெய் சேர்த்த பலகாரங்கள், பாயசம். வேதம் – சாமம். திருமுறை பஞ்ச புராணத்துடன் – லிங்கபுராண குறுந்தொகை. தீபம் – நெய். தத்வ தீபம் – கும்ப தீபம். அட்சதை – கோதுமை. மலர்கள் – அறுகு, தாழம்பூ. பழங்கள் – மாதுளை.
நான்காம் காலம் : அபிஷேகம் – கருப்பஞ்சாறு. மேற்பூச்சு – கஸ்தூரி. வஸ்திரம் – மலர் ஆடை. ஆடையின் வண்ணம் – பச்சை. நிவேதனம் – கோதுமை, சர்க்கரை, நெய் கலந்த பலகாரங்கள். வேதம் – அதர்வணம். திருமுறை பஞ்ச புராணத்துடன் – போற்றித் திருத்தாண்டகம். தீபம் – நல்லெண்ணெய். தத்வ தீபம் – மகாமேரு தீபம். அட்சதை – உளுந்து, பயறு முதலான ஏழு தானியங்கள். மலர்கள் – எல்லா வகை மலர்களாலும். பழங்கள் – வாழை முதலிய அனைத்து வகைப்பழங்களும்.
சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய எளிய பாடல்கள்
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!
உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!
சிவனுக்குரிய விரதங்கள்:
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு அவையாவன:
சோமவார விரதம்: திங்கட்கிழமை
திருவாதிரை விதரம்: மார்கழி திருவாதிரை
மகா சிவராத்திரி: மாசி தேய்பிறை சதுர்த்தசி
உமா மகேஸ்வர விரதம்: கார்த்திகை பவுர்ணமி
கல்யாண விரதம்: பங்குனி உத்திரம்
பாசுபத விரதம்: தைப்பூசம்
அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம்- தீபாளி அமாவாசை
நிறைவே காணும் மனம் வேண்டும் சிவனே அதை நீ தரவேண்டும்
சிவராத்திரி பிரார்த்தனை
உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.
ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.
திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.
இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.
ஐந்தெழுத்து நாயகனின் ஐந்து அடையாளம்: சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.
சிவபெருமான் கோயில்களில் உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகைநிலைகளில் காட்சிதருகிறார். கருவறையில் பெரும்பாலும் அருவுருவத்திருமேனியான சிவலிங்கமாகவே வீற்றிருப்பார். அருவத்திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) சிதம்பரம், திருப்பெருந்துறை போன்ற கோயில்களில் அருள்புரிகிறார். உருவத்திருமேனியை சிவமூர்த்தங்கள் என்று குறிப்பிடுவர். இம்மூர்த்தங்களில் ஐந்துமூர்த்தங்கள் மிகவும் சிறப்புடையவை.
நமக்கு என்ன பலன் தேவையோ அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டு பலன் பெறலாம்.
1. சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் கைவரப்பெறுவர்.
2. வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும்.
3.வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக சிவனை வழிபட்டால் எதிரித்தொல்லை நீங்கி தைரியம் உண்டாகும்.
4.ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும்.
5.அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.
லிங்கம் உருவான சிவராத்திரி:
சிவன் அபிஷேகப் பிரியர். சிவராத்திரியன்று அவருக்கு அபிஷேகம் நடந்த வண்ணம் இருக்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது தெரியுமா? வட்டமான ஸ்வரூபத்துக்குத் (வடிவம்) தான் அடி முடியில்லை. ஆதியில்லை, அந்தமுமில்லை. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. இது சரியான வட்டமாக இல்லாமல், நீள் வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே நீள் வட்டமாகத் தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் (பாதை) நீள் வட்டமாகத்தான் இருக்கிறது, என்று நம் நவீன விஞ்ஞானம் சொல்வதும், ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ஒற்றுமையாக இருக்கிறது. அன்பினால் மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் என்பதால், அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. கேட்ட மாத்திரத்தில் அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல் தான் ஆசுதோஷி. சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்தது (உருவானது) சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில். அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து (உள் வாங்கி) அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதை விட ஆனந்தம் வேறு இல்லை.
25 வடிவம் கோயில்: சிவனுடைய உருவங்களை மகேஸ்வர வடிவம் என்பர். அவர் 25 வடிவங்கள் எடுத்துள்ளார். அவை அமைந்த கோயில்களின் விபரம் தரப்பட்டுள்ளது.
சோமாஸ்கந்தர் – திருவாரூர்
நடராஜர் – சிதம்பரம்
ரிஷபாரூடர் – வேதாரண்யம்
கல்யாணசுந்தரர் – திருமணஞ்சேரி
சந்திரசேகரர் – திருப்புகலூர் (திருவாரூர்)
பிட்சாடனர் – வழுவூர் (நாகப்பட்டினம்)
காமசம்ஹாரர் – குறுக்கை
கால சம்ஹாரர் – திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
சலந்தராகரர் – திருவிற்குடி
திரிபுராந்தகர் – திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் – வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் – கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர்- (நாகப்பட்டினம்)
தட்சிணாமூர்த்தி – ஆலங்குடி (திருவாரூர்)
கிராதகர் – கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
கங்காளர் – திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர் – திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி – திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் – கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி – மதுரை
லிங்கோத்பவர் – திருவண்ணாமலை
சுகாசனர் – காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் – திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி – சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் – சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
வேகமான பயணத்துக்கு…
நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு விரைந்து செல்வது போல, பிறவிப்பயணத்தை விரைவில் முடிக்க சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வழி காட்டியுள்ளனர். தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடுவோர் பிறவித்துன்பத்தை விரைவில் களையலாம். அத்துடன், ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய சிவாயநம என்பவற்றையும் தினமும் சொல்ல வேண்டும். அவ்வையார், தனது நீதிநூலான நல்வழியில், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

THANK YOU