Monday 24 December 2012

என் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

புதிய நாவல் - மலரே மௌனமா?

என்னுடைய புதிய நாவல் “மலரே மௌனமா” இம்மாத கண்மணி நாவலாக இன்று வெளியாகி உள்ளது. குடும்பப் பின்னணியில் அமைந்த இந்த சுவாரசியமான நாவல் பல திருப்பங்களுடன் மென்மையான  காதலையும் சுவைபடச் சொல்கிறது.

வாங்கிப் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்.

அன்புடன்
என்.கணேசன்

புதிய நாவல் - மலரே மௌனமா?

என்னுடைய புதிய நாவல் “மலரே மௌனமா” இம்மாத கண்மணி நாவலாக இன்று வெளியாகி உள்ளது. குடும்பப் பின்னணியில் அமைந்த இந்த சுவாரசியமான நாவல் பல திருப்பங்களுடன் மென்மையான  காதலையும் சுவைபடச் சொல்கிறது.

வாங்கிப் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்.

அன்புடன்

என் புதிய நூல் - பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்



பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் என்ற தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்தத் தொடர் “பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்என்ற பெயரில் புத்தகமாக ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டு உள்ளது.

இது வரை சுவாரசியமாக சொல்லப்பட்ட விஷயங்களான நள்ளிரவில் பிரமிடுக்குள் பால் ப்ரண்டனின் அனுபவங்கள்,  உடலைப் பிரிந்து சென்ற பயணம், மந்திரவாதங்கள், ஹிப்னாடிச சக்தியாளர்கள், நாள் கணக்கில் மண்ணில் புதையுண்டு கிடந்தவர், அது பற்றிய அறிவியல் விளக்கங்கள், ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை முறைகள் ஆகியவற்றை மிகுந்த வரவேற்புடன் படித்து இருக்கிறீர்கள்.  புத்தகம் வெளியானதால் இந்தத் தொடர் இந்த வலைப்பூவில் இத்துடன் நிறுத்தப்படுகிறது

மேலும் அனேக சுவையான, சுவாரசியமான தகவல்களை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். ஆவி, பூதங்களை ஆட்கொண்ட மனிதன், இறந்தவர்களின் புத்தகம், கர்னாக் கோயில்களில் இருந்த ரகசியக் குறிப்புகள், ரகசிய அறைகள்,  பிரமிடுக்குள் செய்தது போலவே கர்னாக் கோயிலில் நள்ளிரவில் செய்த தியானத்தின் சுவாரசிய அனுபவம், பாம்பு தேள்களை வசியம் செய்யும் கலை, அதன் சூட்சுமங்கள், அந்தக் கலையை பால் ப்ரண்டன் கற்றுத் தேர்ந்து செய்த ஆராய்ச்சிகள், எகிப்திய மலைப்பகுதியில் கண்ட அதிசய மனிதர், உடலை ரகசிய சமாதியில் ஒளித்து வைத்து விட்டு ஆவியுலகில் வசிக்கும் அபூர்வ மனிதர்கள் பற்றியெல்லாம் சுவையான தகவல்களைக் கூடுதலாக இந்த நூலில் படிக்கலாம்.

நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in ,   blackholemedia@gmail.com  மின்னஞ்சல்கள் மூலமாகவோ,  செல்பேசி:   9600123146,  மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம். 

பதிப்பக இணைப்பையும் இங்கு தந்துள்ளேன்.

இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே தங்கள் மேலான ஆதரவை இந்த நூலுக்கு அளிக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

Monday, May 7, 2012

ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 15
ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு
சிரிஸ் கோயில்கள் எப்போதும் இரண்டு பகுதிகளாக இருந்தன. முதல் பகுதி பொது ஜனங்கள் வந்து வணங்கிச் செல்வதற்காக இருந்தது. இரண்டாம் பகுதி ரகசிய தீட்சை தரும் இடமாகவும், அதைத் தரத்தக்க குருமார்களின் பயிற்சி, தியானம் மற்றும் பிரார்த்தனை இடமாகவும் இருந்தது. இந்த இரண்டாம் பகுதிக்கு சாதாரண பொது ஜனங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.
ரகசிய தீட்சை பெற சுயகட்டுப்பாடு அதி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அங்கு ரகசிய தீட்சை பெற்று ஆன்மிகப் பேருண்மைகளை அறிய விரும்புபவர்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களைக் கடுமையாகச் சோதித்துப் பார்த்த பின்னரே ரகசிய தீட்சை பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படி ரகசிய தீட்சை தருவது கூட எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவரவர் தன்மைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப தருவதற்கு பல தரப்பட்ட தீட்சைகள் இருந்தன.
பால் ப்ரண்டன் அபிடோஸ் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை தரும் இரண்டாம் பகுதியின் சிதிலமடைந்த பகுதியில் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஆராய்வதற்கு முன்பு அங்கு தியானத்தில் அமர்ந்து அங்கிருந்த ஆன்மிக அலைகளில் இருந்து அந்த ரகசிய தீட்சைகளின் சூட்சுமத்தை அறிய முற்பட்டார்.
(எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு. அதனால் திறந்த மனத்துடன் நம் சொந்த அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு உண்மையான தகவலையும், ஞானத்தையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பழமையான நாகரிகத்தின் தகவலை கலப்படமில்லாத தூய்மையுடன் அறிய வேண்டுமானால் அது மிகவும் கஷ்டமான விஷயமே. எனவே தான் உண்மையான ஞானத்தைப் பெற விரும்பிய பால் ப்ரண்டன் அந்தக் கோயிலில் இரண்டாம் பகுதியில் இருந்த சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்து தனக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது, அதன் உண்மையான தன்மையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அப்படி தியானம் செய்து அந்த பழங்கால மகாத்மாக்கள் தந்த ஞானத்தின் தன்மையை அறிய முற்பட்டார்).
சுமார் இரண்டு மணி நேரங்கள் அங்கு அமர்ந்து தியானித்த அவர் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அது மிக அருமையான அனுபவமாக இருந்தது என்று பின்னர் கூறுகிறார். ஓசிரிஸின் துண்டான உடல்கூறுகளும் அவை ஒன்று சேர்ந்து உயிர் பெற்றமையும் காட்சிகளாகத் திரும்பத் திரும்ப அவருடைய தியானத்தின் போது மனத்திரையில் வந்து நின்றன. ரகசிய தீட்சையில் அந்தக் காட்சி மிக முக்கியமான இடம் வகிப்பதாக அவர் நினைத்தார். அது ஏதோ உணர்த்த வருகிறது என்று அவர் உணர்ந்தார்.  
பிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த போது அவருடைய ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வந்தது. தன் உணர்ச்சியற்ற உடலைக் கண்களின் துணையின்றித் தெளிவாகப் பார்த்ததும் பின்னர் தன் உடலுக்குள் திரும்ப வந்ததும் ஒரு விதத்தில் மரணமும், பின் ஜனனமும் போலவே அல்லவா என்று நினைத்தார். தியானம் முடிந்தபின் உள்ளே ரகசிய தீட்சை நடந்த பகுதிகளில் கண்ட சித்திரங்களும் சிற்பங்களும் அவர் தியானத்தில் உணர்ந்த உண்மைகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.
கோயில்களில் முதல் பகுதியில் கூட பூஜை நேரங்களில் கூட சத்தம் ஆரவாரம் எதுவுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்று முன்பே சொல்லியிருந்தோம். உள்ளே இருந்த இரண்டாம் பகுதியில்  வெளிப்புற அமைதி மட்டுமல்லாமல் மன அமைதியும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அபிடோஸில் இருந்த ஓசிரிஸின் அந்தப் பிரதான கோயிலில் உட்பக்கம் இருந்த இரண்டாம் பகுதியில் ரகசிய தீட்சை நடக்கும் இடத்தில் இருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த மனிதர்களின் முகத்தில் பேரமைதியைக் கண்டார் பால் ப்ரண்டன்.
அங்கு ஓசிரிஸின் மரணமும், உயிர்த்தெழுதலும் தத்ரூபமாக வரையப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. ஓசிரிஸின் உடற்கூறுகள் சிதறிக் கிடந்த காட்சிகளில் கூட அங்கு மரணத்தின் போது இருக்கும் ஒரு துக்ககரமான சூழ்நிலை தெரியவில்லை. மாறாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிற, வாழ்கிற ஒரு சூழ்நிலையே அங்கிருந்த குருமார்களின் முகத்திலும், ரகசிய தீட்சை பெற வந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது. ரகசிய தீட்சையின் சடங்குகள் கிட்டத்தட்ட ஓசிரிஸின் மரணம், உயிர்த்தெழுதல் போலவே தெரிந்தன. அங்கு ரகசிய தீட்சைக்கு வந்த அவர்கள் ஒரு விதத்தில் மரணித்து பின் புதிய பிறப்பு எடுப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.
ரகசிய தீட்சை பெறத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவன் அஸ்தமன காலத்திற்குப் பின்னரே கோயிலுக்குள் இருக்கும் இரண்டாம் பகுதிக்கு அனுமதிக்கப் படுகிறான்.  மந்திர தந்திரங்களிலும், ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் போன்ற கலைகளிலும் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த அந்தக் கால எகிப்திய குருமார்கள் தங்கள் சக்தியால் அவனை மிக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். கிட்டத்தட்ட மரணிப்பது போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் ‘எகிப்திய மம்மிபோலவே கிடக்கும் அவனை ஒரு சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக மூடி வைக்கிறார்கள். அவனுக்கு அந்த ஆழ்ந்த மரண நிலை மயக்கத்திலேயே குருமார்கள் பல வித அனுபங்களை ஏற்படுத்தி உண்மை ஞான நிலையை உணர வைக்கிறார்கள். அவனுடைய ஆன்மா வேறொரு மேலான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலான உண்மைகளை உணர்த்தப்படுவது போல காண்பிக்கப்படுகிறது.
அந்தக் காட்சிகளின் விளக்கச் சித்திரங்களில் அந்த ஆன்மாவின் பயணங்கள் மிக சக்தியும், நுண்ணிய உணரும் தன்மையும் வாய்ந்த குருமார்களுக்கெ முழுமையாகக் காண முடிவது போல் சித்தரிக்கப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட மாணவனின் தன்மைக்கும் தரத்துக்கும் ஏற்ற நிலைப்படி தான் அவனுக்கு அறிவிக்கப்படுகின்றது. அந்த தீட்சையின் கால அளவும் அதற்கு ஏற்றபடி கூடவோ, குறையவோ செய்கின்றது. அந்த உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகிலேயே குருமார்கள் நிற்கின்றனர். அந்த நேரத்தில் இரவுப் பிரார்த்தனைகளும் மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகின்றன.
அந்த தீட்சைக்கு உட்படுத்தப்படும் மாணவனின் ஆன்மா ஓசிரிஸின் ஆன்மசக்தியுடன் இணைந்து அறிய வேண்டியவற்றை அறிந்து திரும்புவது போல ஐதிகம். ஓசிரிஸ் மரணித்தது போல அவனும் மரணிக்கிறான். ஆனாலும் உடல் உணர்ச்சியற்று இருப்பினும் ஆன்மாவின் நுண்ணிய பிணைப்பில் இன்னும் உடல் இருக்கின்றது. ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போன்றதே, மரணம் என்பது என்றும் ஆன்மாவிற்கு இல்லை, என்பதை தன் நிஜ அனுபவம் மூலமே அவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிகிறான். இன்னும் பல்வேறு அனுபவங்களை அடைகிறான், தன் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வேண்டிய உண்மைகளை அறிகிறான். உடலோடு ஆன்மா இணைந்திருக்கும் போது அவன் உணர முடியாத எத்தனையோ ரகசியங்களை அந்த தீட்சையின் போது அவன் உணர்கிறான். தன் இயல்பான எத்தனையோ நன்மைகளையும், சக்தியையும் மறுபடி உணர்கிறான். ஓசிரிஸ் போல பலமடங்கு சக்தியுடன் அவன் மீண்டும் உயிர் பெறுகிறான். 
சடங்குகள் முடிந்து மதகுருமார்களின் அற்புத சக்திகளால் அவன் உணர்வுநிலை திரும்பவும் உடலுக்கு தருவிக்கப்படுகிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து அதிகாலையின் சூரிய கிரணங்கள் அவன் மீது விழும் படி வைக்கிறார்கள். அவன் புதிய மனிதனாய் புத்துணர்வுடன் திரும்புகிறான். இந்த ரகசிய தீட்சை பெற்றவர்களை ‘இருமுறை பிறந்தவர்கள்அல்லது ‘வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டவர்கள் என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.
மதகுருமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்குவதற்கும், அவனை அந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு தடியை உபயோகப்படுத்துகிறார்கள்.  மதகுருமார்களின் ஹிப்னாடிச சக்திகள் இன்றைய ஹிப்னாடிச சக்திகள் போலவே வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவர்கள் சக்திக்கும், இன்றைய ஹிப்னாடிச சக்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. இன்றைய ஹிப்னாடிச சக்தியில் அந்த நிலைக்குக் கொண்டு போகப்பட்டவன் விழிக்கும் போது அந்த நிலையில் நடந்த, உணர்ந்த எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த மதகுருமார்கள் ஏற்படுத்தும் ஹிப்னாடிச சக்தியில் அந்த உணர்வற்ற நிலையில் பெற்ற அனைத்து அனுபவங்களும் அவன் உணர்வுநிலைக்குத் திரும்பும் போது நினைவில் தெளிவாக இருக்கின்றன. அவன் இனி வாழப்போகும் நிலைக்கு வழிகாட்டும் உன்னத அனுபவப்பாடங்களாக அமைகின்றன.
ஆரம்பத்தில் எகிப்தியர்களுக்கு மட்டுமே இந்த தீட்சை தரப்பட்டது. பின்னர் காலப் போக்கில் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கும் அந்த தீட்சைத் தரப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டவர்களில் உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் அடங்குவர். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் அனுபவங்களையும் பார்ப்போமா?
(தொடரும்)
- என்.கணேசன்

Monday, April 23, 2012

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை!



பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 14
முகமது நபி தோன்றுவதற்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர் உருவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். மிகப் புராதன காலத்திலேயே அவர்கள் ஓசிரிஸ் (Osiris) என்ற கடவுளை வணங்கி வந்தனர். ப்ரண்டனின் ஆன்மீகத் தேடலின் போதும் எகிப்தில் சில இடங்களில் மசூதிகளுக்கு அருகிலேயே ஓசிரிஸின் பழங்காலக் கோயில்கள் இருந்திருக்கின்றன. பால் ப்ரண்டன் அந்தப் பழங்காலக் கோயில்களுக்குச் சென்று அவை சொல்லும் செய்தியை அறிய முற்பட்டார்.
ஒரே இறைவனை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மனிதர்கள் வழிபட்டார்கள், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்று பால் ப்ரண்டன் ஆழமாக நம்பினார். மிகப் புராதனமான அந்தக் கோயில்களில் பல, பால் ப்ரண்டனின் காலத்திலேயே சிதிலமாக ஆரம்பித்திருந்த போதிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்ட அந்த தலங்களில் ஆன்மிக அலைகள் பரவியிருந்ததை அவரால் அங்கு சென்ற போது உணர முடிந்தது.    
அப்படி அவர் உணர்ந்த ஒரு சக்தி வாய்ந்த இடம் அபிடோஸ் (Abydos) என்ற இடத்தில் இருந்த புராதனக் கோயில். கோயிலின் புறத்தோற்றம் கால ஓட்டத்தின் சிதைவுகளைக் கண்டிருந்தாலும் அங்கிருந்த பெரிய தூண்களின் சிற்பங்களிலும், மங்கிய சித்திரங்களிலும் விவரிக்கப்பட்டு இருந்த கதைகளில் எத்தனையோ ரகசியங்கள் மறைந்திருந்ததாக பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது.
எகிப்தின் பழங்காலக் கதைகளின் படி பூமிக்கடவுளுக்கும், ஆகாயத் தேவதைக்கும் பிறந்த முதல் மகன் ஓசிரிஸ். அவன் மனைவி ஐசிஸ். பூமியை ஆண்டு வந்த ஓசிரிஸ் மீது பொறாமைப் பட்டு அவன் தம்பி செட் சூழ்ச்சி செய்து அவனைத் துண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுகிறான். மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஐசிஸ் நீண்ட நாள் பிரார்த்தனைகளும், சடங்குகளும் செய்து துண்டமான உடலை ஒன்று சேர்த்து உயிர் பெறச் செய்து விடுகிறாள். மாண்டவர் உலகிற்குச் சென்று வந்ததால் அனைத்தையும் உணர்ந்து பல மடங்கு சக்தி வாய்ந்தவனாக சில நாட்கள் வாழ்ந்து மனைவி ஐசிஸை கருத்தரிக்க வைத்து விட்டு மறுபடி மாண்டவர் உலகிற்குத் திரும்பி விடுகிறான். ஐசிஸ் பிரசவித்த ஹோரஸ் என்ற அவனுடைய குழந்தை பெரும் சக்தி வாய்ந்தவனாக வளர்ந்து தந்தையைக் கொன்ற சித்தப்பா செட்டை அழிக்கிறான்.
எகிப்தியக் கடவுள்களில் பிரதானமான கடவுளாய் ஓசிரிஸ் இறப்பின் கடவுளாகவும், நியாயத் தீர்ப்பு கடவுளாகவும் எகிப்திய பழங்கதைகளில் சித்தரிக்கப்படுகிறது. ஹோரஸ் தீயவைகளை அழிக்கும் தெய்வமாகவும், எல்லா புதிய நல்ல மாற்றங்களுக்கான தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அந்தக் கதைகளே அந்த கோயிலில் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் விவரிக்கப் பட்டு இருந்தன.
வழக்கமான கோயில்களில் வழிபாட்டின் போது ஒலிக்கும் இசைக்கருவிகளின் இசையோ, பாடல்களோ பிரதான கடவுளான ஓசிரிஸின் அந்தக் கோயிலில் ஒலிக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரேபோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்கிருந்த பழமையான எழுத்துக்களில் இருந்த தகவல்களை வைத்துக் கூறுகிறார். மயான அமைதி என்பார்களே அது போன்ற மயான அமைதியே வழிபாட்டு நேரத்தில் கடைப்பிடிக்கப் படுவதாகச் சொல்கிறார்.
அந்தக் கோயிலில் ஆன்மீக ரசியங்களை மிக அபூர்வமான, தகுந்த வெகுசிலருக்கு மட்டும் கற்றுத் தரப்பட்டன என்றும் அதற்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன என்றும் சில நாட்கள் ரகசிய சடங்குகள் கழிந்த பின்னர் அவர்களுக்கு குருமார்களால் உணர்த்தப்பட்டது என்றும் எகிப்திய பழமையான ஏடுகள் சொல்கின்றன. அந்த சடங்குகள் குறித்த சில சித்திரங்களும் அங்கிருந்தன. மிகப் பெரிய உண்மைகள் ஆரவாரத்திலும், கூட்டங்களிலும் உணரப்படுவதில்லை, பேரமைதியில் ஒருவன் தனக்குள்ளே ஆழ்ந்திருக்கும் போதே உணரப்படுகின்றன என்பதற்காகவே அமைதி அங்கு வலியுறுத்தப்படுகின்றது என்று பால் ப்ரண்டன் நினைத்தார்.
(கற்பனைக் கதைகளாக சித்தரிக்கப்படும் எத்தனையோ கதைகளைக் கற்பனைக் கதைகளாகவே எடுத்துக் கொண்டு பிற்கால உலகத்தினரில் பெரும்பாலானோர் பார்த்தாலும், விஷயமறிந்த சிலர் அதன் பின்னால் உள்ள செய்தியைப் படித்து பலன் அடைகிறார்கள். அந்தப் பலனையும், ஞானத்தையும் கதைகளாய் படித்து விட்டுப் போகிறவர்கள் பெறத்தவறி விடுகிறர்கள்.)
அங்கிருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த சில சங்கேதக் குறிகள் ரகசியக் கலைகள் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்படி இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிதிலமடைந்து பாழ்பட்டுப் போன அந்தக் கோயிலை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மன்னன் ஒருவன் புனரமைத்தததோடு எகிப்தில் இருந்த ஹீலியோபோலிஸ் என்ற மிகப்பழங்கால நூலகத்தில் இருந்த ஓசிரிஸ் கோயில் பற்றிய தகவல்களைக் கொண்ட நூல்களை எல்லாம் தக்க அறிஞர்களைக்  கொண்டு ஒன்று திரட்டி அந்தப் பழைய தீட்சைக்கான சடங்குகளை தன் பிற்கால சந்ததிகளுக்கு விட்டுப் போனதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னனால் தான் இன்று அந்த தீட்சைகள் பற்றியும் சடங்குகள் பற்றியும் விரிவாக அறிய முடிகிறது. அந்த நூல்களில் இருந்த தகவல்களின் படியே அதே கட்டமைப்புடன் பல கோயில்களை அந்த மன்னன் புதிதாகக் கட்டினான் என்றும் வரலாறு கூறுகிறது.
ஆனால் பால் ப்ரண்டன் எகிப்திற்குச் சென்ற காலத்தில் அதுவும் பழமையாகிப் போன போதும் முழுவதுமாக அழிந்து விடாமல் தப்பிய ரகசியத் தகவல்கள் பல, அன்றைக்கும் ஆன்மிக வல்லுனர்களை ஈர்த்த வண்ணம் இருந்தன. எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் ஆன்மிகத் தேடலுடன் அந்த ரகசிய தீட்சை பெற முயன்றாலும் தக்க குருமார்கள் பல சோதனைகளுக்குப் பிறகு வெகுசிலரையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த ரகசிய தீட்சை தந்தனர் என்று சொல்லப் படுகிறது. அப்படி ரகசிய தீட்சை பெற்றதாக சொல்லப்படுபவர்களுள் ஒரு சிலர் மிகப்பிரபலமானவர்கள். அவர்கள் யார் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்திய சில ரகசியத் தகவல்களையும் பார்ப்போமா?
(தேடல் தொடரும்)
- என்.கணேசன்
    

Monday, March 12, 2012

வெற்றிக்கு முன் வரும் தடைகள்!



ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.  இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் ஜேக் கேன்ஃபீல்டு (Jack Canfield) மற்றும் மார்க் விக்டர் ஹான்சென் (Mark Victor Hansen) இருவரும் சந்தித்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அவர்கள் இருவரும் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்த முகாம்களை நடத்தி வந்த போது அதற்குத் தேவையான நிஜக்கதைகள் நிறைய சேகரித்து வைத்திருந்தார்கள். அந்த முகாம்களில் கலந்து கொண்ட பலர் அந்த நிஜக் கதைகளைப் புத்தகமாகப் போட்டால் பலருக்கு உதவியாக இருக்கும் என்று சொல்ல, அதைப் புத்தகமாகப் போடும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. 1991ஆம் ஆண்டு இறுதியில் ஒரு புத்தகமாகத் தொகுத்து நியூயார்க் சென்று பதிப்பகங்களை ஒரு ஏஜெண்டின் துணையுடன் அணுகினார்கள். சிலர் அது போன்ற தொகுப்பு நூல் விலை போகாது என்றார்கள், சிலர் அந்தப் பெயரே சரியில்லை, படிக்கவும் ஆளிருக்காது என்றார்கள், சிலர் பரபரப்பு இல்லாத கதைகள் விற்பனையாகாது என்றார்கள். நேரடியாக சந்திக்க முடியாத பதிப்பகங்களுக்கு அந்த பத்தகங்களை தபால் மூலமாக அனுப்பிப் பார்த்தார்கள். அந்தப் பதிப்பகங்களும் அவற்றைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அவர்கள் ஏஜெண்டும் கைவிரித்து விட்டார்.
விற்பனை ஆகாது, விலை போகாது என்று திரும்பத் திரும்பக் கேட்க நேர்ந்த ஜேக் கேன்ஃபீல்டும், மார்க் விக்டர் ஹான்செனும் அந்த அபிப்பிராயங்கள் உண்மையல்ல என்று புரிய வைக்க வேறு வழி கண்டு பிடித்தனர். அந்த நூல் வெளியானால் கண்டிப்பாக ____ பிரதி/கள் வாங்குவேன் என்ற உறுதி மொழிக்கடிதம் ஒன்றை அச்சிட்டு அதில் பெயர், விலாசம் எல்லாம் எழுத இடம் விட்டு தங்கள் முகாம்களுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தந்தனர். 20000 புத்தகங்கள் வாங்க உறுதிமொழிக் கடிதங்கள் சேகரித்த பின் கலிபோர்னியாவில் நடந்த புத்தக விற்பனையாளர்கள் பேரவைக் கூட்டம் ஒன்றிற்குச் சென்று ஒவ்வொரு பதிப்பகத்திடமும் அந்த உறுதிமொழிக் கடிதங்களைக் காட்டிக் கூடப் பேசிப் பார்த்தார்கள். அங்கேயும் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.
130 மறுப்புகளுக்குப் பிறகு ஒரு சின்ன பிரசுரம் அவர்கள் புத்தகத்தைப் பிரசுரிக்க முன் வந்தது. புத்தகங்கள் வெளி வந்தவுடன் முதலில் அந்த உறுதிமொழிக்கடிதம் கொடுத்தவர்களுக்கு நூல்களை அனுப்பி அவர்கள் காசோலைக்காகக் காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே உறுதியளித்த எண்ணிக்கை புத்தகங்களை வாங்கினார்கள். படித்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. முதல் புத்தகம் எண்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகி பெரும் சாதனை படைக்க அவர்களது மற்ற தொகுப்பு நூல்களும் பிரசுரமாகி பெரும் வெற்றியைக் கண்டன.  
எந்த ஒரு வெற்றியும் தடைகள் இல்லாமல் சந்திக்கப்படுவதில்லை. அதிலும் வெற்றி மகத்தானதாக இருக்கும் பட்சத்தில் அது சந்திக்கும் தடைகளும் பெரிய அளவிலேயே தான் இருக்கின்றன. தடைகள் ஒன்றிரண்டிலேயே மனம் உடைந்து நிறுத்தப்பட்ட முயற்சிகள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும். அவற்றில் எத்தனையோ இன்று வெற்றி கண்டவற்றை விட எத்தனையோ விதங்களில் மேன்மையாக இருந்திருக்கவும் கூடும். அதனால் எத்தனையோ பெரும் திறமைகள் உலகத்தின் பார்வைக்கே வராமல் போய் இருந்திருக்கின்றன என்பது தான் மிகவும் வருந்தத் தக்க உண்மை.
உண்மையான வெற்றி பிரபலத்திலும், எண்ணிக்கையிலும் இல்லை தான். ஆனால் திறமை வெளியே தெரியாமலேயே அமுங்கி விடும் போது உண்மையான தோல்வி ஏற்பட்டு விடுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதனால் உண்மையான திறமை கொண்டிருப்பவர்கள் திறமைக்கு இணையாக தங்களிடம் விடாமுயற்சியையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வது மிக முக்கியம். ஆரம்பத்தடைகளை எதிர்பார்க்காமல் இருந்து விடக் கூடாது. அவற்றை வெற்றியின் பாதையில் கடக்க வேண்டிய மைல்கற்களாகவே கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
புத்தக வெற்றி மட்டுமல்ல எல்லா மகத்தான வெற்றிகளும் இந்த நிஜத்தை அனுசரித்தே நிகழ்கின்றன. ஒரு ரஜனிகாந்த் ஆகட்டும், மைக்கேல் ஜேக்சன் ஆகட்டும், ஐன்ஸ்டீன் ஆகட்டும், ராமானுஜம் ஆகட்டும், இது போல ஒவ்வொரு துறையிலும் சிகரம் எட்டிய எவரே ஆகட்டும் இது போல பல தடைகள் கடந்து மட்டுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். வெற்றி கிடைத்த பின் கூடும் கூட்டம், புகழ், செல்வம் எல்லாம் பிற்காலத்தையவையே. ஆரம்பத்தில் தனியர்களாகவே அந்த சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள்.
சிக்கன் சூப் கதைகள் வெளியிட அவர்கள் இருவரும் பட்ட ஆரம்ப சிரமங்களைப் பாருங்கள். சில நேரங்களில் அவர்கள் சந்தித்த சில மறுப்புகள் நமக்கு அவமானமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் தாங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தின் மேல் இருந்த நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து முயல வைத்திருக்கிறது. தடைகள் வரும் போது அவர்கள் தயங்கி தங்கள் முயற்சிகளை நிறுத்திக் கொண்டிருந்தால் இன்று அந்த வெற்றி சரித்திரம் விடுபட்டுப் போயிருக்கும். 
எனவே திறமை உள்ளவர்களே ஆரம்பத் தடைகளுக்குத் தயாராகவே இருங்கள். அவற்றை சந்திக்கும் போது மனம் தளர்ந்து விடாதீர்கள். இது உங்களுக்கு மட்டும் நிகழும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. சொல்லப் போனால் இதுவே நியதி. இதுவே பாதை. இந்த உண்மையை மனதில் அழுத்தமாகப் பதித்து எல்லாவற்றையும் தாக்குப் பிடித்து தொடர்ந்து முயலுங்கள். பல தடைகளைக் கடந்து கடைசியில் கிடைக்கும் வெற்றிக் கனியைப் போல் சுவையானது வேறொன்றும் இல்லை. உங்கள் திறமைகள் வெளிவருவதும், புதைந்து போவதும் வெளிப்புற நிகழ்ச்சிகளாலோ, மற்றவர்களாலோ அல்ல, அதை எதிர்கொள்ளும் உங்கள் மனநிலையால் மட்டுமே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.
- என்.கணேசன்

Monday, March 5, 2012

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13
ப்ரண்டன் வியந்த இஸ்லாம்
ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்தில் தங்கிய நாட்களில் இஸ்லாமியர்களின் தொழுகை முறையால் மிகவும் கவரப்பட்டார். கிறிஸ்துவராக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஞானத்தைத் தேடிய அவருக்கு எல்லா இடங்களில் இருந்தும் கிடைத்த மேன்மையான விஷயங்களை அறியவும், மதிக்கவும் முடிந்தது.
மசூதிகளில் தொழுகை நேரத்தில் ஒரு பரம தரித்திரனுக்கு அருகில் ஒரு பெரும் செல்வந்தன் உட்கார்ந்து தொழுவதை அவர் பல இடங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. புனிதக் குரானின் வாசகங்களை உச்சரித்தபடி அவர்கள் செய்த தொழுகை முறையில் பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரே மாதிரியான ஒழுங்கு அவரைக் கவர்ந்தது. தொழுகை என்பது தினசரி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த விஷயமாக இருப்பது அவரை வியக்க வைத்தது.
ரயிலில் பயணம் செய்கையில் ப்ளாட்ஃபாரங்களில் கூட குறிப்பிட்ட நேரமானால் சிறிய பாய்களை விரித்து இறைவனுக்காக ஆறேழு நிமிடங்கள் ஒதுக்க முடிந்த இஸ்லாமியர்களின் சிரத்தையை அவரால் சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. ஒரு மதிய வேளையில் ஓட்டலுக்குச் சாப்பிடப் போன போதும் பரிமாறிக் கொண்டிருந்த சர்வர் தொழுகை நேரமானவுடன் தொழுகையை ஓட்டலிலேயே ஒரு ஓரத்தில் செய்ய ஆரம்பித்ததையும், இன்னொரு சமயம் ஒரு உயர் போலீஸ் அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது அனுமதி வாங்கிக் கொண்டு அந்த உயர் அதிகாரி தொழுகையை நடத்தியதையும் தன் நூலில் பால் ப்ரண்டன் குறிப்பிடுகிறார்.
தொழுகை என்பது வழிபாட்டுத்தலங்களில் என்று ஒதுக்கப்பட்டு விடாமல் அந்தந்த நேரங்களில் எந்த இடமானாலும் சரி அந்த இடத்தில் நடத்தப்படும் உறுதியான விஷயமாய் இருப்பது இஸ்லாத்தின் தனித்தன்மையாக பால் ப்ரண்டன் கண்டார். கெய்ரோவில் கண்டது போல் லண்டன், நியூயார்க் போன்ற மேலை நாடுகளில் காணமுடியாதென்பதை ஒப்புக் கொண்டார். இந்த வழிபாட்டு ஒழுங்குமுறையும், உறுதிப்பாடும் இஸ்லாத்திடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை என்று அவர் நினைத்தார்.
எகிப்தில் இருந்த நாட்களில் இஸ்லாத்தையும் ஆழ்ந்து படித்த பால் ப்ரண்டன் அவர்களது தொழுகை முறையையும் கற்றுக் கொண்டு கெய்ரோ நகர பழமையான மசூதிகளில் தானும் தொழுதார். இறை சக்தி ஒன்றே என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதிருந்த பால் ப்ரண்டனுக்கு அப்படித் தொழுவதில் எந்தத் தயக்கமும் வரவில்லை.
தன்னைப் பின்பற்றுவோர் மனதில் பெருமையான ஒரு இடத்தைப் பெற முகமது நபி தேவையற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டவும் முனையவில்லை என்பதனை இஸ்லாத்தைப் பற்றி விரிவாகப் படிக்கையில் அவர் அறிந்தார். அரேபியாவில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரிக்கையில் சிலர் அவரிடம் சென்று “நீங்கள் ஏதாவது அற்புதம் நிகழ்த்தி நீங்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று நிரூபியுங்கள்என்று வற்புறுத்திய போது முகமது நபி வானை நோக்கி பார்வையைச் செலுத்தியவராய் இறைவன் என்னை அற்புதங்கள் நிகழ்த்த அனுப்பவில்லை. நான் அல்லாவின் செய்தியை மனிதகுலத்திற்குக் கொண்டு வந்திருக்கும் தூதன் மாத்திரமேஎன்ற செய்தி அவரை வெகுவாகக் கவர்ந்தது.
இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், மேலும் அறிந்து கொள்ளவும் எகிப்து இஸ்லாமியர்களின் தலைவரும், இஸ்லாமிய கல்விக்கூடங்களின் தலைமைப் பேரறிஞருமான ஷேக் முஸ்தபா எல் மராகியை சந்தித்துப் பேசினார். இறைவன் ஒருவனே என்ற இஸ்லாத்தின் மிக உறுதியான, முக்கியக் கொள்கையில் ஆரம்பித்து எல்லா முக்கிய அம்சங்களையும் ஷேக் முஸ்தபா விளக்கினார். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே வேறொரு நபர் தேவையில்லை என்பதை இஸ்லாம் நம்புகிறது என்றார் ஷேக் முஸ்தபா.
இஸ்லாம் இறைவனை அறிந்து கொள்ளவும், பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளவும் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. திறந்த மனத்துடன் தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளும், புரிந்து கொள்ளலுமே மூட நம்பிக்கைகளையும், புனிதக் கோட்பாடுகளுக்குத் தங்களுக்குத் தேவைப்படும்படி பொருள் கொள்ளும் போக்கையும், அவ்வப்போது விலக்கி ஒரு மதத்தை கலப்படமற்ற புனிதத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகத் தெரிவித்தார் ஷேக் முஸ்தபா.
அவரிடம் நீண்ட நேரம் உரையாடிய போது பால் ப்ரண்டன் இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களைத் தயக்கமில்லாமல் கேட்டார். அவர் கேட்ட முக்கிய  கேள்விகளும் ஷேக் முஸ்தபா சொன்ன பதில்களும் இதோ-
ஆத்மாவைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
“குரான் ஆத்மா பற்றி எதையும் குறிப்பிடவில்லை. பிற்காலத்திய சில இஸ்லாமிய மகான்களும், அறிஞர்களும் சில அறிவுபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் என்றாலும் அதை குரானில் சொன்னதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில், செய்த நன்மைகளுக்கு வெகுமதியும், செய்த தீமைகளுக்குத் தண்டனையும் கிடைப்பது உறுதி என்பதை குரான் தெரிவிக்கிறது. அல்லா கூறுகிறார். “எவனொருவன் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குத் தகுந்த வெகுமதியைப் பெறுவான். அதே போல அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கேற்ற தண்டனையை அடைவான்.
“இஸ்லாத்தில் மசூதிகள் முக்கியமா?
“இல்லை. மக்கள் பிரார்த்திக்கும் இடங்கள் அவை, வெள்ளிக்கிழமை அன்று பிரசங்கங்கள் கேட்கச் செல்லும் இடங்கள் அவை என்றாலும் இஸ்லாத்தை பின்பற்ற மசூதிகள் அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது. இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய முடியும். சுத்தமான தரை இருந்தால் போதும்..... மசூதிகளைக் கட்டுவது பிரார்த்திப்பதில்  சகோதரத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வளர்த்தவே. அந்த வகையில் தான் மசூதியில் பிரார்த்திப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.”
“தினமும் ஐந்து முறைத் தொழுகை என்பது அதிகமில்லையா?என்று பால் ப்ரண்டன் கேட்ட போது ஷேக் முஸ்தபா பொறுமையாக பதில் சொன்னார்.
“இல்லை. தொழுகைகள் இறைவனைப் பிரார்த்திக்கும் கடமை மட்டுமல்ல, அவன் ஆன்மிக முறைப்படி தன்னை நெறிப்படுத்திக் கொள்ள உதவும் அவசியமும் கூட. திரும்பத் திரும்ப இறைவனையும், இறைவனது செய்தியையும் சொல்லும் மனிதன் மனதில் இறை குணங்கள் தானாக ஆழப்படுகின்றன. உதாரணத்திற்கு இறைவனிடம் தொடர்ந்து கருணையை வேண்டும் மனிதன் அதன் அவசியத்தை உணர்ந்தவனாக இருப்பதால் தானும் கருணையுள்ளவனாக சிறிது சிறிதாக மாற ஆரம்பிக்கிறான். எனவே தொழுகைக்காகக் குறித்து வைத்திருக்கும் நேரங்களில் தொழுகை செய்வது வற்புறுத்தப்படுகிறது. ஏதாவது அவசர சூழ்நிலை அந்த நேரத்தில் தொழுகை செய்வதைத் தடுக்குமானால் அந்த சூழ்நிலை முடிந்தவுடனேயே தொழுகை செய்ய வேண்டும்.
“நோய்வாய்ப்பட்டால் என்ன செய்வது?
“நிற்கவோ, மண்டியிடவோ முடியாத நிலையில் ஒருவன் இருந்தால் பிரார்த்தனையைப் படுத்த நிலையிலேயே கூட செய்யலாம். அவனால் கைகளை நெற்றிப் பொட்டு வரை மடக்க முடிந்தால் கூட போதும்....
“மெக்காவிற்கு செல்வதன் நோக்கம் என்ன?
“மசூதிக்கு செல்வது எப்படி உள்ளூர் சமூக சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கோ அப்படித்தான் மெக்கா செல்வது உலகளாவிய மனிதகுல சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கு. எல்லோரும் இஸ்லாத்தில் சரிசமமானவர்களே. அல்லாவை நம்பி மசூதியில் கூடினாலும் சரி, ஹஜ் யாத்திரையில் கூடினாலும் சரி அங்கு அவர்கள் சமமாகவே கருதப்படுகிறார்கள். மசூதியிலும் சரி யாத்திரையிலும் சரி ஒரு அரசனுக்கருகில் ஒரு பிச்சைக்காரன்  பிரார்த்தனை செய்யலாம். எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒருமித்துப் போகும் இடமாகவும் சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை அவரவர் நற்செயல்களால் மட்டுமே ஒவ்வொருவரும் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்
உண்மையான இஸ்லாம் உண்மையை அறிய ஊக்குவிப்பதாகவும், கண்மூடித்தனமான பின்பற்றுதலை கண்டிப்பதாகவும் ஷேக் முஸ்தபா கூறி புனித நூலில் வரும் ஒரு வாசகத்தையும் கூறினார். “இறைவன் சொன்னதைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படும் போது அவர்கள் நாங்கள் எங்கள் தந்தையர் செய்ததைப் பின்பற்றுகிறோம் என்கிறார்கள்.... உங்கள் தந்தையரே அறியாதவர்களாக இருந்தால், வழிநடத்தப்படாதவர்களாய் இருந்தால் என்ன செய்வீர்கள்?” 


உண்மை தானே!
நீண்ட நேரம் தொடர்ந்த அவருடைய விளக்கங்களில் பால் ப்ரண்டனுக்கு இஸ்லாத்தை வித்தியாசமான புதுமையான கோணங்களில் அறியவும், முன்பு கொண்டிருந்த சில தவறான அபிப்பிராயங்களைக் களைந்து கொள்ளவும் முடிந்தது.
(தொடரும்)

Monday, November 21, 2011

வயதில்லா உடலும், காலமறியா மனமும்


உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலைகள்என்றும், “மனம் அனைத்து துன்பங்களிற்கும் உற்பத்திக்கூடம்என்றும் சொல்வார்கள். அதிலும் வாழ்க்கை இளமையிலிருந்து விலகி முதுமையை நோக்கிச் செல்லச் செல்ல உடலும் மனமும் ஏற்படுத்துகின்ற பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலோருடைய கருத்தும், அனுபவமும் இப்படி இருக்கையில் அதற்கு எதிர்மாறான ஒரு கருத்தை Ageless Body and Timeless Mind (வயதில்லா உடலும் காலமில்லா மனமும்) என்ற தன் நூலில் ஆதாரபூர்வமாய், அழுத்தம் திருத்தமாய் சொல்கிறார் தீபக் சோப்ரா.
இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் குடியேறிய தீபக் சோப்ரா மருத்துவப் படிப்பில் M.D பட்டம் பெற்றவர். உடல்-உள்ளம் சம்பந்தப்பட்ட பல ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டியவர். அவர் எழுதிய சுமார் 65 புத்தகங்களில் 19 புத்தகங்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அதிக விற்பனையான மற்றும் பிரபலமான புத்தகங்கள் பட்டியலில் இடம் பிடித்தவை. அதிலும் வயதில்லா உடலும், காலமில்லா மனமும் என்ற இந்தப் புத்தகம் அந்தப் பட்டியலில் தொடர்ந்து பல வாரங்கள் தங்கிய புத்தகம். இதில் அவர் அலசி இருக்கும் விஷயங்களும், சொல்லியிருக்கும் உண்மைகளும் மிக மிக சுவாரசியமானவை மட்டுமல்ல மிகவும் உபயோகமானதும் கூட. அவற்றைப் பார்ப்போம்...
உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே உள்ள தொடர்பு நெருக்கமானது என்பதை விட இரண்டும் பின்னிப் பிணைந்தவை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நம் உடலில் உள்ள செல்கள் நம் எண்ணங்களால் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பவை என்கிறார் சோப்ரா. செல்களின் செயல்பாடுகள் துரிதப்படுவதும், வேகம் குறைவதும், அப்படியே நின்று போவதும், ஏன் தலைகீழாய் பின்னுக்குச் செல்வதும் கூட மனதின் எண்ணங்களைப் பொறுத்து சாத்தியமாகின்றன என்கிறார் அவர்.
செல்களின் சுமார் 90% சக்தி உடலை ரிப்பேர் செய்வதிலும், உடலுக்குத் தேவையான பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்துவதிலும், சீரமைப்பதிலும் செலவாகிறது. ஆனால் மனம் எதைப் பற்றியாவது கவலை கொண்டாலோ, பயம் கொண்டாலோ, ஏதோ ஆபத்தை உணர்ந்தாலோ செல்கள் அந்த வேலை செய்வதை விட்டு விட்டு மனம் சொல்லும் விஷயங்களில் தங்கள் சக்தியை செலவழிக்கின்றன. இது எப்போதாவது ஒரு முறை நடந்தால் பெரிய பாதகம் இல்லை. ஆனால் இது எப்போதுமே நடந்து கொண்டிருந்தால் உடல் பாதுகாப்பும் சீரமைப்பும் கைவிடப்பட்டு மனதின் கற்பனை அவசரங்களில் செல்களின் சக்தி வீணாகிறது. அதனால் அப்படிப்பட்டவர்களின் உடல்கள் சீக்கிரமாகவே முதுமையடைகின்றன, சீக்கிரமாகவே நோய்வாய்ப்படுகின்றன என்கிறார் சோப்ரா. கான்சர், பக்கவாதம் போன்ற நோய்கள் அதிகமாக துக்க காலத்தில் தான் உடலைத் தாக்குவதில் வெற்றியடைகின்றன என்று ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி அவர் கூறுகிறார்.
நமது உடற்கூறின் அடிப்படையான DNA மாறுவதில்லை என்ற போதிலும் அதன் நகலானதும், வேலையாளுமான  RNA நமது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளிற்கும் ஏற்ப தூண்டப்பட்டு அடிக்கடி தன் வேலையை மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் உடல் கட்டமைப்பையும் அதன் சக்தியையும் நிர்ணயிக்கும் சக்தியையும் பெற்றுள்ள  RNA நமது தவறான எண்ணப்போக்கால் ஒழுங்காக வேலை செய்வதில்லை. சீக்கிரமே சக்தி இழக்கும் உடல் நோயால் விரைவாகவே பாதிக்கப்படுகிறது என்கிறார் அவர்.
இதற்கு பல ஆதாரங்களுடன் கூடிய விரிவான விளக்கத்தையும் தருகிறார் தீபக் சோப்ரா.
முதுமை தவிர்க்க முடியாதது என்ற கூற்றை அவர் முழுமையாக ஒத்துக் கொள்ள மறுக்கிறார். உலகில் ஒரு செல் அமீபா, அல்கே, ப்ரோடோசோவா போன்ற சில உயிரினங்கள் முதுமை அடைவதில்லை என்கிறார். நம் அறிவுத் திறன், உணர்வுகள், தனித்தன்மைகள் முதுமையடைவதில்லை என்கிற அவர் நமது DNAவின் பெரும்பகுதி கூட வயதிற்கேற்ப மாறுவதில்லை என்கிறார்.
தேனீக்களின் வாழ்க்கையை விஞ்ஞானிகள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து கண்ட அதிசயங்களை விவரித்து தன் வாதத்திற்கு வலுவூட்டுகிறார் அவர். தேன்கூட்டிற்குள் தங்கி முட்டைகளைப் பாதுகாப்பதும், அப்போது தான் பிறந்த புதிய தேனீக்களின் உணவுத் தேவைகளைக் கவனிப்பதும் இளம் தேனீக்களின் வேலை. மூன்று வாரங்கள் வளர்ந்த பிறகு தேன் சேகரிக்க வெளியே சென்று விடும் மூத்த தேனீக்களாக அவை மாறி விடும். இது தான் அவற்றின் இயற்கையான செயல்பாடு. ஆனால் அவசர காலங்களில் அவற்றின் வயதும் வேலையும் ஹார்மோன்களின் உதவியுடன் விரைவுபடுத்தப்படுவதையும், தலைகீழாய் திரும்புவதையும் கண்டு விஞ்ஞானிகள் அசந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கூட்டுக்குள் தேவைக்கும் அதிகமான தேனீக்கள் இருந்து வெளியே சென்று தேன் சேகரிக்கும் தேனீக்கள் குறைந்தால் கூட்டில் உள்ள இளம் தேனீக்களின் வயது தானாக ஹார்மோன்கள் இயக்கத்தால் மூன்று வாரமாகக் கூடி தேன் சேகரிக்கக் கிளம்பி விடுகின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதே போல் கூட்டிற்குள் வேலை செய்யும் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வெளியே செல்லும் முதிய தேனீக்கள் எண்ணைக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு முதிய தேனீக்கள் தங்கள் ஹார்மோன்கள் வேலைப்பாட்டால் இளமையாகி கூட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றனவாம்.
தேனீக்கள் மாறும் அளவிற்கு மனிதன் மாற முடியா விட்டாலும் மனித உடலிலும் மூளை தேவைக்குத் தகுந்தபடி பல அற்புதங்களைச் செய்வதை உதாரணமாக தீபக் சோப்ரா சுட்டிக் காட்டுகிறார். மூளையின் வழித்தடங்கள் முதிய வயதிலும் நீள்வதையும், சில நியூரான்கள் சுருங்கும் போது குறுக்குத் தடங்கள் உருவாகி செயல்பாடுகளில் குறைவில்லாமல் மூளை இயல்பாகவே பார்த்துக் கொள்ள முயல்வதையும் விவரிக்கிறார்.
ஆனால் உடல் தன் வேலையை இயல்பாகச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கு இடையூறுகளையும் தடைகளையும் நாமாக நம் தவறான வாழ்க்கை முறையாலும், பழக்க வழக்கங்களாலும் ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார். அதற்கு பொருள் பொதிந்த அறிவுரைகள் சிலவற்றை மிக விரிவாக இந்த புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவை சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
நாம் உடலைப் பொருத்த வரை எந்திரமாக இயங்கப் பழகி விட்டோம். இயற்கையாக நடக்கும் உடலின் செயல்களுக்கு நாம் கவனம் தருவதில்லை. அது ஏதாவது வேலையைச் சரிவர செய்யாமல் போனால் அது மட்டும் தான் கவனத்திற்கு வருகிறது. அந்த சமயத்தில் அது பெரும்பாலும் மருந்தில்லாமல் குணமாகாத நிலைக்கு சென்று விட்டிருக்கும். உடலின் ஒவ்வொரு பகுதியையும், அது செய்யும் வேலையையும் விழிப்புணர்வோடு நம்மை அவ்வப்போது கவனிக்கச் சொல்கிறார். அனிச்சையாக நடக்கும் செயலுக்கு நம் கவனத்தையும் தருவது அப்பகுதியையும், அதன் செயலையும் சீராக்கும் என்று அவர் சொல்கிறார்.
பயன்படுத்தாத எதுவும் பலமிழந்து போகும் என்பது உடலியலிலும், மனவியலிலும் நிரூபிக்கப்பட்ட உண்மை. உடலுறுப்பும் சரி, நம் திறமைகளும் சரி பயன்படுத்தத் தவறும் போது பலமிழந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் பயன்படுத்த முடியாததாகவே மாறி விடுகிறது. ஒவ்வொரு தகவலையும் உடல் அவ்வப்போது நமக்கு நுணுக்கமாகத் தெரிவிக்கிறது. ஆனால் எந்திரத்தனமாக செயல்படும் நாம் மற்ற எத்தனையோ விஷயங்களில் மும்முரமாக இருந்து அது சொல்லும் செய்திகளைக் கேட்கத் தவறி விடுவதால் தான் நோய்வாய்ப்படுகிறோம் என்கிறார் அவர்.
வாழும் விதத்திலும் சிந்திக்கும் விதத்திலும் நாம் செய்யும் சின்ன திருத்தமும் நம்மை மிகப் பெரிய விதத்தில் மாற்றும் வலிமை கொண்டது என்கிறார். ஒரு சிஷ்யன் குருவிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான். நாம் இருவரும் ஒரே மாதிரி தானே இந்த உலகில் வாழ்கிறோம். பின் எது நம் இருவரையும் வித்தியாசப்படுத்துகிறது?
குரு சொன்னார். “நீ இந்த உலகில் உன்னைப் பார்க்கிறாய். நான் என்னில் இந்த உலகத்தைப் பார்க்கிறேன்
சின்னதாய் பார்க்கும் விதம் மாறினாலும் உலகமும், வாழ்க்கையும் மிகப்பெரிய அளவில் மாறி விடுகிறது. வெளியுலகில் நடக்கும் சம்பவங்களுக்கு உண்மையில் நம்மை மாற்றும் சக்தி இல்லை என்கிறார் அவர். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்தே நம் வாழ்க்கை அமைகிறது என்று சொல்கிறார்.

உடல் மீது இவ்வளவு ஆதிக்கம் செய்ய முடிந்த மனதைக் கட்டுப்படுத்துவதில் இக்கால மனிதர்கள் வெற்றி பெறாததே அவர்களது மன உளைச்சலுக்கும், துன்பங்களுக்கும் காரணம் என்று அவர் கூறுகிறார். வாழ்க்கை முறையில் எளிமை இல்லாததும், பொய்யான தேவைகளை உருவாக்கிக் கொண்டு அதை நிறைவேற்ற போராட்ட வாழ்க்கையை நடத்துவதும், இயற்கையிலிருந்து விலகிக் கொண்டே செல்வதும், அவசர ஓட்டமும் இக்கால மனிதர்களின் நிம்மதியின்மைக்கு முக்கிய காரணங்களாக அவர் சொல்கிறார்.
ஒரு செயலில் முழுமையாக ஈடுபடும் போது நம்மைப் பொறுத்த வரை காலம் நின்று போகிறது, அல்லது மறக்கப்படுகிறது. அதில் நாம் களைப்படைவதும் இல்லை. ஆனால் இன்று பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்திலும் களைத்தல்லவா போகிறார்கள். இதையும் மிக அழகாகத் தன் நூலில் கையாண்டிருக்கும் தீபக் சோப்ரா எல்லாவற்றையும் மாற்றி உடலிலும், உள்ளத்திலும் புத்துணர்ச்சியையும், சிறந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இந்தப் புத்தகத்தில் சில தியான முறைகளையும், புரட்சிகரமான சிந்தனைகளையும், பயிற்சிகளையும் விளக்கி இருக்கிறார். எல்லாமே அறிவுபூர்வமாகவும், எளிமையாகவும் இருப்பது தான் இந்த நூலின் தனிச்சிறப்பு. 
342 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதிலும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் விரிவாகவே அலசப்படுகிறது. இரண்டையும் அழகாக இணைத்து தெளிவான முடிவுகளைத் தந்திருப்பதிலும், மாற்றத்திற்கான வழிமுறைகளைக் காட்டி இருப்பதிலும் தீபக் சோப்ரா வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இழந்து விட்ட தனிச்சிறப்புகளை மீண்டும் மீட்டெடுக்க இன்றைய மனிதனுக்கு இந்த நூல் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
- என்.கணேசன்

Friday, November 4, 2011

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-11
அற்புதங்களின் அறிவியல் விளக்கம்
“இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?
இந்தக் கேள்விக்கு உண்மையான விளக்கத்தைச் சொல்ல முன் வருபவர்கள் வெகு சிலரே. விளக்கி விட்டால் தங்களைக் குறித்து அடுத்தவர்கள் வைத்திருக்கும் அதீத மதிப்பு குறைந்து விடும் என்று நினைப்பது இயல்பே. ஆனால் டெஹ்ரா பே அப்படி நினைக்காமல் பால் ப்ரண்டனிடம் விளக்க முன் வந்தார்.
எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நமக்குள்ளே இருக்கும் பிரம்மாண்டமான சக்தியை நாம் கண்டு கொள்வதே. அதைக் கண்டு கொள்ளும் வரை அறியாமை என்ற சங்கிலியால் கட்டுண்டே இருக்க நேரிடும். கண்டு கொண்டால் மட்டுமே ஆழ்மன சக்திகளையும், மற்ற பெரிய சக்திகளையும் பயன்படுத்த முடியும். நான் செய்து காட்டியவற்றை சிலர் கண்கட்டு வித்தை என்று நினைக்கலாம், அல்லது அமானுஷ்ய சக்தியைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளும் சரியல்ல. நான் செய்த அனைத்துமே இயற்கை விதிகளுக்கு உட்பட்டதே. அறிவியல் உண்மையைச் சார்ந்ததே.
மற்றவர்களுக்கு அற்புதமாகத் தோன்றும் இந்தச் செயல்களை நான் செய்ய இரண்டு விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று, உடலின் சில நாடி நரம்பு மையங்களைப் பற்றி அறிந்து அவற்றில் அழுத்தம் தருவது. இரண்டாவது நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு உணர்வற்று ஆழ்மயக்க நிலைக்கு என்னால் போக முடிவது. இந்த இரண்டையும் செய்யத் தவறினால் என்னாலும் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் ஆன்மிகம் எதுவும் கிடையாது. ஆன்மிகம் என்று நான் ஏதாவது சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் செய்யும் போது பற்றுதல் இல்லாத நிலையில் நான் இருப்பதை வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி இதில் ஆன்மிகமோ, மந்திரவாதமோ கிடையாது.
பால் ப்ரண்டனுக்கு அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டு விளக்கிய விதம் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. அவர் கேட்டார். “அந்த இரண்டு அம்சங்களையும் விளக்கிச் சொல்ல முடியுமா?
டெஹ்ரா பே சொன்னார். “நரம்புகள் மூலமாகவே வலி மூளைக்கு உணர்த்தப்படுகிறது. அவற்றின் சில சூட்சும மையங்களை அறிந்து விரல் அழுத்தத்தினால் அந்த மூளைக்கு இரத்த ஓட்டம் செல்ல தடை செய்தால் அந்த நரம்பு மையங்கள் அனஸ்தீஷியா (மயக்க மருந்து) கொடுத்தது போல உணர்விழந்து போகும். வலி தெரியாது. ஆனால் இதைக் கடும் பயிற்சி மூலம் தான் கற்றுத் தேற முடியும். அப்படியில்லாமல் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இதை யாராவது முயற்சித்தால் உயிருக்கு ஆபத்தாகவே முடியும். இதைச் செய்யும் போது மன ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் இறுக்கமற்ற முறையில் தசைகளையும் நரம்புகளையும் வைத்திருக்க வேண்டும். நாக்கை உள்ளிழுத்து ஆழ்மயக்க நிலைக்குப் போவதற்கும் முறையான பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். இதில் இந்திய யோகிகள் கைதேர்ந்தவர்கள்.
பால் ப்ரண்டன் சுவரசியத்துடன் கேட்டார். “ஆழ்மயக்க நிலைக்குச் சென்ற பிறகு என்ன ஆகிறது?
ஆழ்மயக்க நிலைக்குச் செல்லும் முன்பே எந்த நேரத்தில் திரும்ப சுயநினைவுக்கு வரவேண்டும் என்பதனை ஆழ்மனதில் முன்பே குறித்துக் கொண்டு விட வேண்டும். குறித்த காலத்தில் ஆழ்மனம் தானாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடும். மேல்மனம் உறங்கி விட்டாலும் ஆழ்மனம் எப்போதும் உறங்குவதில்லை. இது பெரிய விஷயமல்ல. மறு நாள் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து அப்படியே அலாரம் இல்லாமல் விழித்தெழுவது பலருக்கும் முடிகிறது. அதே போல் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவர்கள் அந்த உறக்க நிலையிலும் எத்தனையோ வேலைகளைத் தங்களை அறியாமலேயே செய்வதையும் நாம் சர்வசகஜமாகப் பார்க்கிறோம். நரம்பு மையங்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்மயக்க நிலைக்குச் சென்றவுடன் உடலில் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது. சுருக்கமாக உடலின் எல்லா இயக்கமும் ஸ்தம்பித்து நின்று விடுகிறது.
“பல முறை குத்திய பிறகும் உங்கள் உடலில் காயமோ, காயத்தின் தழும்போ இல்லாமல் இருந்தது எப்படி?
அதை நான் இரு விதங்களில் சாதிக்கிறேன். முதலில் என் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக அதிகரிக்க வைக்கிறேன். அதனால் இதயத்துடிப்பு அதிகமாகிறது என்றாலும் அது தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். இரத்த ஓட்டம் அத்தனை வேகமாகச் செல்வதால் காயங்கள் என் மன உறுதியின் தன்மையிலேயே குணமாகி விடுகின்றன. அடுத்ததாக இரத்தத்தின் சூட்டை நான் அதிகமாக்குகிறேன். அந்த சூட்டில் ஏதாவது கிருமிகள் காயங்களில் நுழைந்திருந்தாலும் அவை உடனடியாக அழிந்தும் போகின்றன. இந்த இரண்டையும் செய்வதால் சாதாரண காயங்கள் உடனடியாகவும், ஆழமான காயங்கள் சில மணிகளுக்குள்ளும் ஆறி விடுகின்றன
டெஹ்ரா பே எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக விளக்கிய விதம் பால் ப்ரண்டனை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அடுத்தபடியாக அவரை மிகவும் பிரமிக்க வைத்த முக்கிய நிகழ்ச்சி பற்றி கேட்டார். “உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி?
(தொடரும்)
- என்.கணேசன்

Friday, October 28, 2011

மன அமைதிக்கு மார்கஸ் அரேலியஸ்


 
அரசாள்பவர்கள் தத்துவஞானிகளாக இருப்பது மிக மிக அபூர்வம். அப்படி வரலாறு பதிவு செய்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் சக்கரவர்த்தியாக ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஆண்டவர் என்றால் இரண்டாம் நூற்றாண்டில் (26-4-121 முதல் 17-3-180) வாழ்ந்த ரோமானிய சக்கரவர்த்தியான மார்கஸ் அரேலியஸைத் தவிர வேறு யாரும் பெரிய அரச பதவியுடன் தத்துவ ஞானியாகவும் பிரகாசித்ததில்லை.
ஹெராடியன் (Herodian) என்ற வரலாற்றாசிரியன் கூறுகிறான். “தான் ஒரு ஞானி என்பதை வார்த்தைகளாலும், அறிவுரையாலும் தெரிவித்தது மட்டுமல்லாமல் பண்புகளாலும், வாழ்ந்த முறையாலும் உணர்த்திய மார்கஸ் அரேலியஸ் வரலாறு கண்ட சக்கரவர்த்திகளில் தனித் தன்மை வாய்ந்தவரே 
அகண்ட சாம்ராஜ்ஜியத்தை ஆள்வது எந்தக் காலத்திலும் சுலபமாகவோ, மன நிம்மதிக்குத் தகுந்ததாகவோ இருந்ததில்லை. ரோமானிய சாம்ராஜ்ஜியமும் அதற்கு விதிவிலக்கல்ல. மார்கஸ் அரேலியஸ் நிர்வாகத்தை நடத்த அடுத்தவர்களை விட்டு விடவில்லை. போர் புரிய தளபதிகளை அனுப்பி விட்டு தத்துவ ஞானத்தில் ஆழ்ந்து விடவில்லை. ஆட்சி புரிவதிலும், போர் புரிவதிலும் அவர் நேரடியாகப் பங்கு வகித்தவர். அவருடைய ஒரே மகன் பண்புகளில் அவருக்கு ஏற்ற மகனாக இருக்கவில்லை. ஆட்சி, நிர்வாகம், போர், குடும்பப் பிரச்னைகள் இத்தனைக்கும் நடுவில் அவர் தனக்கு அறிவுரையாக தானே சொல்லிக் கொண்டவை இன்றும் தத்துவஞானத்தில் தலைசிறந்த நூலாக கருதப்படுகிறது.
மன அமைதிக்கான அறிவுரையாகவும், ஆட்சி நலன், ஆன்மீகம் குறித்த உயர் கருத்துகளைக் கொண்டதாகவும் “எனக்கு (To Myself) என்ற தலைப்பில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூறிக்கொண்ட அந்த அறிவுரைகள் அவர் காலத்திற்குப் பின் “தியானங்கள் (Meditations)” என்ற பெயர் மாற்றத்துடன் பிரபலமாக ஆரம்பித்தது. மகா ப்ரெடெரிக் (Frederick the Great) போன்ற மாமன்னர்கள், கதே (Goethe) போன்ற தத்துவ ஞானிகள், மற்றும் பல்வேறு அறிஞர்கள் முதல் பாமரர்கள் வரை பலருக்கும் அறிவு விளக்காக விளங்கிய அந்த நூலில் மன அமைதிக்கு மகத்தான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான அறிவுரைகளை இனி பார்ப்போம்.
வாழ்க்கை முறையில் ஒழுங்கும் அமைதியும் இருந்தால் தானாக மன அமைதி கிடைத்து விடும் என்பது மார்கஸ் அரேலியஸின் முக்கியமான சிந்தனையாக இருந்தது. அவர் கூறுகிறார்:
எல்லா காரியங்களும், எண்ணங்களும் ஒரு தர்மத்திற்குள் அடங்கி நிற்கும்படி செய்து கொள்வாயாக! அதுவே அமைதிக்கு வழி.
மனமொவ்வாத செயலைச் செய்யாதே. சமூக நன்மைக்கு மாறுபாடாகவாவது விவேகக் குறைவாகவாவது மனப் புகைச்சலுடன் நடந்து கொள்ள வேண்டாம். பேச்சுத் திறமையால் உண்மையை மறைக்க வேண்டாம். வீண் பேச்சு பேச வேண்டாம். பிறர் காரியத்தில் பயனின்றி தலையிட வேண்டாம். உனக்குள் உள்ள பரம்பொருளைக் கௌரவிப்பாயாக. எந்த நிமிடமும் உலகத்தை விட்டுப் பிரிய தயாராக இரு. சாட்சியாவது உத்தரவாவது வேண்டப்படாத சத்தியவானாக இரு. உள்ளத்தில் சாந்தத்தை வளர்த்துக் கொள்.
நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்தும் நம்மால் மாற்ற முடியாத விஷயங்கள் குறித்தும் கவலை கொள்வது சிறிதும் அறிவுடைமை அல்ல என்பதையும் அவற்றை ஏற்றுக் கொள்வது மிக அவசியம் என்றும் அவர் சில இடங்களில் அழகாகக் கூறுகிறார்:
விதியால் வந்த சுகமும் விலக்க முடியாத துக்கமும் உலகத்தை நடத்தும் தெய்வம் கொடுத்த வரப்பிரசாதமென்று வணக்கத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எது நேர்ந்தாலும் “இது ஆண்டவன் செயல். இது நெய்யும் வஸ்திரத்தில் ஊடும் பாவு போல உலக வாழ்வின் இயல்பில் நெய்யப்பட்ட ஒரு சம்பவம். இதை நான் ஏன் துக்கமாக பாவிக்க வேண்டும்?என்று கேட்டுக் கொள்.
நமக்கு முன்பும் பின்பும் கணக்கிட முடியாத காலம் இருக்கையில் நீர்க்குமிழி போன்ற இந்த நிலையில்லாத குறுகிய வாழ்க்கைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து கவலை கொள்வது அர்த்தமில்லை என்கிறார் மார்கஸ் அரேலியஸ்.
உலகில் எவ்வளவு விரைவில் எல்லாம் அழிந்து விடும் பார். கழிந்து போன யுகங்கள் கணக்கற்றவை. வருங்காலமும் அளவற்றது. இதற்கிடையில் புகழ் என்றால் என்ன? உன் புகழ் ஒரு சிறு குமிழி போன்ற பொருளில்லாத ஆரவாரமே அல்லவா?
முந்தியும் பிந்தியும் ஆதியந்தமற்ற அகண்ட கால அளவுகள் இருக்க மத்தியில் வரும் இந்த அற்பங்களைப் பொருட்படுத்துவது என்ன அறியாமை!
எதைப் பற்றியாவது மிகக் கவலை கொண்டவர்களையும் பெரிய புகழ் பெற்றவர்களையும் நினைத்துப் பார். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே? அவர்களது பெருமையும் பகைமையும் இப்போது எங்கே? புகையும் சாம்பலுமாகிப் போன கதை தான். அக்கதையைக் கூட ஒரு சிலர் தான் சொல்கிறார்கள். அது கூட விரைவில் மறக்கப்பட்டு விடும்.
அடுத்தவர்களால் மன நிம்மதியை இழப்பது நம் வாழ்வில் அதிகம் நடக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நம் மன நிம்மதியின்மைக்குக் காரணமே அடுத்தவர்கள் தான் என்று நம்பும் அளவில் பெரும்பாலோர் இருக்கிறோம். அப்படிப்பட்டோருக்கு அருமையாக மார்கஸ் அரேலியஸ் சொல்கிறார்.
எவனாவது ஒருவன் வெட்கமின்றி நடந்து கொண்டு அதற்காக நீ கோபம் கொண்டாயானால் உடனே உலகில் வெட்கமின்றி நடப்பாரே இல்லாதிருக்க முடியுமா? என்று கேட்டுக் கொள். இல்லை எனில் ஏன் கவலைப்படுகிறாய்?
அறியாதவன் அறியாதவனைப் போலத் தானே நடப்பான். இதில் என்ன அதிசயம். அதனை எதிர்பாராதது உன் பிழையே.
வெள்ளரிக்காய் கசக்கிறதா தூர எறிந்து விடு. வழியில் முள்ளா விலகிப் போ. அதை விட்டு விட்டு வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது, முள் ஏன் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் இறங்குவது அறிவீனம்.
எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் மார்கஸ் அரேலியஸ்:
ஒரு துன்பம் நேரிடின் அதைப் பற்றி எண்ணுவதை விடு. எண்ணுவதை விட்டால் துன்பம் நேரிட்ட நினைவு போகும். அந்த நினைவு நீங்கிய பின் துன்பம் எங்கே?
இன்பமும் துன்பமும் உள்ளத்தின் ஆதினமே; உள்ளத்தின் எண்ணங்களே அவைகளுக்குக் காரணம் என்ற உண்மையை அறிந்து நடந்தாயானால் கடவுளைக் குறை கூறவோ, மனிதர்களை வெறுக்கவோ மாட்டாய்.
மொத்தத்தில் இயற்கையாகவும் எளிமையாகவும் வாழ முற்படுவது மனிதன் மன நிம்மதியாக இருக்க மிகவும் உதவும் என்கிறார். எனவே இயற்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார்:
மரத்தில் உண்டாகிக் கீழே விழுந்து போகும் பழத்தைப் பார். தன் வாழ்க்கையை எவ்வளவு சந்தோஷமாகவும் லகுவாகவும் நடத்தி மரத்திலிருந்து நழுவி தான் பிறந்த மண்ணில் மறுபடி அடங்கிப் போகிறது. அதைப் பின்பற்றுவாயாக!
இது போன்ற இதயத்தை அமைதிப்படுத்தும் எத்தனையோ எண்ணங்களையும், அதற்கான வழிமுறைகளையும் அவர் தன் தியானங்கள் நூலில் கூறியுள்ளார். மன அமைதி இழந்து தவிக்கும் மனிதர்கள் அவர் நூலை அடிக்கடி படிப்பதும், உணர்வதும், கடைபிடிப்பதும் இழந்த அமைதியை திரும்பப் பெற கண்டிப்பாக உதவும்.
-          என்.கணேசன்
-          நன்றி: ஈழநேசன்

Friday, September 9, 2011

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-10
மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்
அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தன் சக்திகளை வெளிக்காட்ட டெஹ்ரா பே சம்மதித்தவுடன் பால் ப்ரண்டன் சில மருத்துவர்களையும், சில அறிஞர்களையும் அழைத்துப் பேசி அவர்கள் கண்காணிப்பில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு டெஹ்ரா பே அரபு உடையில் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அறையில் ஒரு மேசையில் அவர் பயன்படுத்த இருக்கும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. கூர்மையான வாள்கள், கத்திகள், அரிவாள்கள், நீண்ட ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மேசையில் நீண்ட கூர்மையான ஆணிகள், சுத்தியல், ஒரு பெரிய கனமான பாறைக்கல், எடை பார்க்கும் கருவி ஆகியவை இருந்தன. ஒரு கூடையில் ஒரு வெள்ளைக் கோழியும், சாம்பல் நிற முயலும் இருந்தன. பெரிய சவப்பட்டி, அதை விடப் பெரிய இன்னொரு பெட்டி ஆகியவையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
முதலில் மருத்துவர்களும், கண்காணிக்க வந்த மற்ற அறிஞர்களும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்த்தனர். எல்லாம் உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின் அவர்கள் முன்னிலையில் தன் சாகசங்களைச் செய்து காட்ட டெஹ்ரா பே ஆரம்பித்தார்.
முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தினார். இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தியபடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் ஒருவித மயக்க நிலைக்குப் போய் விட்டார். அவர் கண்கள் மூடின. ஒரு அமானுஷ்யமான சத்தம் அவருள்ளில் இருந்து எழுந்தது. உடல் மரக்கட்டை போல ஆகியது. அப்படியே சாய்ந்த அவரை அவருடைய உதவியாளர்கள் மட்டும் பிடித்திருக்கவில்லை என்றால் கீழே விழுந்திருப்பார்.
ஒரு உதவியாளர் நீண்ட வாள்கள் இரண்டை எடுத்து ஒரு நீளமேசையில் கூர்மையான பகுதிகள் மேலிருக்கும்படி பதித்து வைத்தார். பின் டெஹ்ரா பே அவர்களின் இடுப்பு வரை உள்ள உடைகளைக் களைந்து அப்படியே அந்த வாள்கள் மீது உதவியாளர்கள் இருவரும் மல்லாக்க படுக்க வைத்தனர். ஒரு வாள் அவருடைய தோள்பட்டைகளுக்கு அடியிலும், இன்னொரு வாள் அவருடைய முட்டிகளுக்கு அடியிலும் இருக்கும்படி படுக்க வைத்திருந்தனர். மருத்துவர்கள் அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்தனர். நாடித்துடிப்பு அதிகமாய் (130) இருந்தது.
அங்கு வைத்திருந்த பாறையை எடுத்து அங்கிருந்த எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தனர். 90 கிலோகிராம் எடை இருந்தது. அதை இருவரும் தூக்கி டெஹ்ரா பேயின் வயிற்றின் மீது வைத்தனர். அவருடைய உதவியாளர்களில் ஒருவன் பெரிய சுத்தியலை எடுத்து அந்தப் பாறையை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். டெஹ்ரா பேயின் உடலோ இரும்பாய் இறுகி இருந்தது. அவர் உடலில் எந்தப் பெரிய பாதிப்பும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தப் பாறை இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்தது.
டெஹ்ரா பே அவர்களை அவர்கள் எழுப்பி உட்கார வைத்தனர். மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதித்த போது அவர் வயிற்றில் பாறை இருந்து அழுத்திய அறிகுறிகள் தெரிந்தாலும் அவர் முதுகுத் தோலில் எங்குமே வாள் அழுத்திய காயம் தென்படவில்லை. எந்த வலியாலும் அவர் அவஸ்தைப்பட்டது போலவும் தெரியவில்லை. ஏதோ மலர்ப்படுக்கையில் படுத்து எழுந்தது போல் இருந்த டெஹ்ரா பேயை மருத்துவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தக் காட்சி பால் ப்ரண்டனுக்கு இந்தியாவில் காசியில் கண்ட சில பரதேசிகளை நினைவுறுத்தியது. கூர்மையான ஆணிகளில் அமர்ந்தும் படுத்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்த அந்த பரதேசிகளை யோகிகளாய் அவரால் நினைக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த சமயத்தில் அவரை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.
அடுத்ததாக ஒரு மரப்பலகை முழுவதும் ஆணிகளின் கூரிய முனைகள் மேற்பக்கம் நீட்டிக் கொண்டிருக்க அந்த ஆணிகள் மேல் டெஹ்ரா பேயைப் படுக்க வைத்தார்கள். உதவியாளர்களில் ஒருவன் தாவிக் குதித்து ஆணிகள் மீது படுத்திருந்த அவர் மீது நின்றான். ஒரு கால் அவர் நெஞ்சிலும், ஒரு கால் அவர் வயிற்றிலும் இருந்தன. பார்வையாளர்கள் ஒரு கணம் காணக் கூசி கண்களை மூடினார்கள். ஆனால் அந்த உதவியாளன் கீழே இறங்கிய பின் அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் முதுகில் ஆணிகள் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வியப்புடன் கவனித்தனர்.
மயக்க நிலையிலிருந்து மீண்ட டெஹ்ரா பே சில நிமிட ஓய்வுக்குப் பின் தன் உடல், வலிக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்க வேறு சில சோதனைகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். மருத்துவர்களைப் பெரிய ஊசிகள் எடுத்து தன் கன்னங்களில் குத்தச் சொன்னார். இரு கன்னங்களில் குத்திய ஊசிகள் வாய் வழியே வந்த போதும் அவர் சிறிது கூட முகம் மாறவில்லை. முகத்தில் சில இடங்கள் இது போன்ற ஊடுருவலில் காயம் அடைவதில்லை என்பதை உணர்ந்திருந்த மருத்துவர்களை டெஹ்ரா பே எங்கு வேண்டுமானாலும் குத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தார்.
அவருடைய தாடையில் பெரிய ஊசிகளைக் குத்தினார்கள். முழு விழிப்பு நிலையில் இருந்த போதும் டெஹ்ரா பே எந்த வலியும் இல்லாமல் இருந்தார். மருத்துவர்களில் ஒருவர் ஒரு பெரிய கத்தியை அவர் கழுத்தின் முன் பகுதியில் ஒரு அங்குல தூரம் உள்ளே செலுத்திய போதும் அவர் சாதாரணமாக அமர்ந்திருந்தது அனைவரையும் திகைப்படைய வைத்தது. தொடர்ந்து முகத்திலும் மார்பிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் கீறிய போதும் அவர் காயமடையாதது மட்டுமல்ல ஒரு துளி இரத்தம் கூட அவர் உடலில் இருந்து சிந்தவில்லை. அவர் ஏதாவது மருந்து உட்கொண்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளிலும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை.
ஒரு மருத்துவர் இரத்தம் வருவதைக் காண வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த டெஹ்ரா பே அடுத்ததாக அவர் மார்பில் கத்தியால் குத்திய போது இரத்தம் வரவழைத்தார். இரத்தம் அவர் மார்பை நிறைத்த வரை பார்த்த அந்த மருத்துவர் போதும் என்று சொன்ன போது உடனடியாக இரத்தம் வெளி வருவதை தன் சக்தியால் டெஹ்ரா பே நிறுத்தினார். அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த மார்புக் காயம் இருந்த இடம் தெரியாமல் போகுமாறு குணப்படுத்தியும் காட்டிய போது அனைவரும் பிரமித்துப் போயினர். எரியும் கொள்ளியால் அவருடைய கால்களில் பாதம் முதல் தொடை வரை சூடுபோட்டனர். அதிலும் மனிதர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சுமார் 25 நிமிடங்கள் அப்படி தன் முழு கட்டுப்பாட்டில் உடலை வைத்திருந்த அவர் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் சொன்னார். “நான் முன்கூட்டியே தயார் நிலையில் இல்லாத நேரத்தில் எதிர்பாராதவிதமாய் என்னை கத்தியால் சிறிது கீறினாலும் வலி தாங்காமல் கத்தி விடுவேன்
அடுத்ததாக அவர் கோழி முயல் இரண்டையும் தனித்தனியாக முற்றிலும் நகர சக்தியற்றதாக்கிக் காட்டினார். உயிர் உள்ளது என்பதற்கு அறிகுறியாக அவற்றின் கண்கள் அசைந்தனவே தவிர மேசையின் மீது இருந்த அவற்றால் வேறெந்த விதத்திலும் நகர முடியவில்லை. பின் சிறிது நேரம் கழித்து அவர் லேசாகத் தட்டிக் கொடுத்த பின்னர் தான் அவை அங்குமிங்கும் ஆனந்தமாக ஓடின.
பின் டெஹ்ரா பே உயிருடன் சமாதி ஆகிக் காட்டும் பரிசோதனையில் தன்னை உட்படுத்திக் கொண்டார். சமாதியான பின் முன்கூட்டியே தெரிவித்த நேரத்தில் மீண்டும் உயிர்பெற்றுக் காட்டுவதாகச் சொன்னார். 28 நாட்கள் மண்ணில் புதைந்ததாக அவர் சொல்லி இருந்தாலும் நேரில் பார்த்தவர் பால் ப்ரண்டன் திரட்டிய குழுவில் யாரும் இல்லை என்பதால் அவர்கள் நேரில் காண ஆவலாக இருந்தனர். ஒன்றரை மணி நேரம் அந்த இடத்தில் சமாதியாகி விடுவதாகவும், பின் ஐந்து நிமிடத்தில் உயிருடன் திரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.
முன்பு மயக்க நிலைக்குச் சென்றது போல முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தி, இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தி, பின் நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் உயிரற்ற பிணம் போல சாய அவருடைய உதவியாளர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவர் மூச்சு நின்றது. இரத்த ஓட்டமும் நின்றது. இதை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின் அவர் மூக்கிலும், காதுகளிலும் பஞ்சை அடைத்து ஒரு சவப்பெட்டியில் கிடத்தினார்கள். சவப்பெட்டி உண்மையானது தானா இல்லை ஏதாவது ரகசியக் கதவு இருக்கிறதா என்பதையும் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்தனர். அவரை அதில் கிடத்திய பின் அந்த சவப்பெட்டியை சிவப்பு மணலால் நிரப்பி சவப்பெட்டியை ஆணி அடித்து மூடினார்கள். இன்னொரு பெரிய பெட்டியில் சவப்பெட்டியை வைத்து அதையும் மண்ணால் நிரப்பி மூடினார்கள். இது நடைபெற்ற இடம் கெய்ரோவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் மாடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் என்பதால் இரகசிய சுரங்கப்பாதை தரையில் இருக்க வழியில்லை என்றாலும் அதையும் ஒரு முறை பரிசோதித்து அங்குள்ள அறிஞர்கள் திருப்தி அடைந்தார்கள்.
ஒன்றரை மணி நேரம் அனைவர் பார்வையும் அந்த தற்காலிக சமாதிப் பெட்டியில் தான் இருந்தது. ஒன்றரை மணி நேரம் கழிந்த பின் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டது. உள்ளிருந்த சவப்பெட்டி எடுக்கப்பட்டு ஆணிகளைக் களைந்து அதையும் திறந்தனர். பின் அவரை எடுத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். அவர் முன்பே கூறியபடி சில நிமிடங்களில் அவர் கண்கள் அசைந்தன, மூச்சு விடவும் ஆரம்பித்தார்.
தனது ஆழ்ந்த சமாதி உறக்கம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருந்தது என்றும், உடல் முன்பே தன்னால் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில் மறுபடி இயங்க ஆரம்பித்தது என்றும் கூறினார். பால் ப்ரண்டனும், அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களும், பார்வையாளர்களும் மனிதன் நினைத்தால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஓருசில உதாரணங்களிலேயே உணர்ந்த சிலிர்ப்பில் இருந்தனர்.
பின்னர் ஒரு நாள் அவரை பால் ப்ரண்டன் சந்தித்த போது மனித சக்தி எல்லையற்றது என்பதை இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல காலமாக அறிந்திருந்ததுடன் அதில் கற்பனைக்கும் எட்டாத அளவு முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் கூறினார். இதையெல்லாம் வைத்துப் பணமாக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை என்றும் தான் விரும்பா விட்டாலும் இதை ஒரு வியாபாரம் போல செய்வதற்கு தான் வருத்தப்படுவதாகவும் டெஹ்ரா பே தெரிவித்தார். உண்மையில் இது ஒரு விஞ்ஞானம். இதில் நான் பெரிய விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன். ஆனால் உலகம் என்னை வியாபாரியாக்கி விட்டது.
ஆனாலும் பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே அவர்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. இது போன்ற சித்திகள் பெற்ற ஒருசிலர் தங்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கையில் இது எல்லாம் மனிதனால் முடிந்தவையே, தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் ஒருவர் பெற்று விட முடியும் என்று சொல்ல முடிந்த அடக்கம் எத்தனை பேருக்கு வரும் என்ற வியப்பு அவர் மனதில் ஏற்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அவரைக் கேட்டார். “இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?
(தொடரும்)

என் புதிய நூல் - பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்



பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் என்ற தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்தத் தொடர் “பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்என்ற பெயரில் புத்தகமாக ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டு உள்ளது.

இது வரை சுவாரசியமாக சொல்லப்பட்ட விஷயங்களான நள்ளிரவில் பிரமிடுக்குள் பால் ப்ரண்டனின் அனுபவங்கள்,  உடலைப் பிரிந்து சென்ற பயணம், மந்திரவாதங்கள், ஹிப்னாடிச சக்தியாளர்கள், நாள் கணக்கில் மண்ணில் புதையுண்டு கிடந்தவர், அது பற்றிய அறிவியல் விளக்கங்கள், ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை முறைகள் ஆகியவற்றை மிகுந்த வரவேற்புடன் படித்து இருக்கிறீர்கள்.  புத்தகம் வெளியானதால் இந்தத் தொடர் இந்த வலைப்பூவில் இத்துடன் நிறுத்தப்படுகிறது

மேலும் அனேக சுவையான, சுவாரசியமான தகவல்களை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். ஆவி, பூதங்களை ஆட்கொண்ட மனிதன், இறந்தவர்களின் புத்தகம், கர்னாக் கோயில்களில் இருந்த ரகசியக் குறிப்புகள், ரகசிய அறைகள்,  பிரமிடுக்குள் செய்தது போலவே கர்னாக் கோயிலில் நள்ளிரவில் செய்த தியானத்தின் சுவாரசிய அனுபவம், பாம்பு தேள்களை வசியம் செய்யும் கலை, அதன் சூட்சுமங்கள், அந்தக் கலையை பால் ப்ரண்டன் கற்றுத் தேர்ந்து செய்த ஆராய்ச்சிகள், எகிப்திய மலைப்பகுதியில் கண்ட அதிசய மனிதர், உடலை ரகசிய சமாதியில் ஒளித்து வைத்து விட்டு ஆவியுலகில் வசிக்கும் அபூர்வ மனிதர்கள் பற்றியெல்லாம் சுவையான தகவல்களைக் கூடுதலாக இந்த நூலில் படிக்கலாம்.

நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in ,   blackholemedia@gmail.com  மின்னஞ்சல்கள் மூலமாகவோ,  செல்பேசி:   9600123146,  மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம். 

பதிப்பக இணைப்பையும் இங்கு தந்துள்ளேன்.

இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே தங்கள் மேலான ஆதரவை இந்த நூலுக்கு அளிக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

Monday, May 7, 2012

ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 15
ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு
சிரிஸ் கோயில்கள் எப்போதும் இரண்டு பகுதிகளாக இருந்தன. முதல் பகுதி பொது ஜனங்கள் வந்து வணங்கிச் செல்வதற்காக இருந்தது. இரண்டாம் பகுதி ரகசிய தீட்சை தரும் இடமாகவும், அதைத் தரத்தக்க குருமார்களின் பயிற்சி, தியானம் மற்றும் பிரார்த்தனை இடமாகவும் இருந்தது. இந்த இரண்டாம் பகுதிக்கு சாதாரண பொது ஜனங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.
ரகசிய தீட்சை பெற சுயகட்டுப்பாடு அதி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அங்கு ரகசிய தீட்சை பெற்று ஆன்மிகப் பேருண்மைகளை அறிய விரும்புபவர்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களைக் கடுமையாகச் சோதித்துப் பார்த்த பின்னரே ரகசிய தீட்சை பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படி ரகசிய தீட்சை தருவது கூட எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவரவர் தன்மைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப தருவதற்கு பல தரப்பட்ட தீட்சைகள் இருந்தன.
பால் ப்ரண்டன் அபிடோஸ் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை தரும் இரண்டாம் பகுதியின் சிதிலமடைந்த பகுதியில் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஆராய்வதற்கு முன்பு அங்கு தியானத்தில் அமர்ந்து அங்கிருந்த ஆன்மிக அலைகளில் இருந்து அந்த ரகசிய தீட்சைகளின் சூட்சுமத்தை அறிய முற்பட்டார்.
(எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு. அதனால் திறந்த மனத்துடன் நம் சொந்த அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு உண்மையான தகவலையும், ஞானத்தையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பழமையான நாகரிகத்தின் தகவலை கலப்படமில்லாத தூய்மையுடன் அறிய வேண்டுமானால் அது மிகவும் கஷ்டமான விஷயமே. எனவே தான் உண்மையான ஞானத்தைப் பெற விரும்பிய பால் ப்ரண்டன் அந்தக் கோயிலில் இரண்டாம் பகுதியில் இருந்த சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்து தனக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது, அதன் உண்மையான தன்மையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அப்படி தியானம் செய்து அந்த பழங்கால மகாத்மாக்கள் தந்த ஞானத்தின் தன்மையை அறிய முற்பட்டார்).
சுமார் இரண்டு மணி நேரங்கள் அங்கு அமர்ந்து தியானித்த அவர் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அது மிக அருமையான அனுபவமாக இருந்தது என்று பின்னர் கூறுகிறார். ஓசிரிஸின் துண்டான உடல்கூறுகளும் அவை ஒன்று சேர்ந்து உயிர் பெற்றமையும் காட்சிகளாகத் திரும்பத் திரும்ப அவருடைய தியானத்தின் போது மனத்திரையில் வந்து நின்றன. ரகசிய தீட்சையில் அந்தக் காட்சி மிக முக்கியமான இடம் வகிப்பதாக அவர் நினைத்தார். அது ஏதோ உணர்த்த வருகிறது என்று அவர் உணர்ந்தார்.  
பிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த போது அவருடைய ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வந்தது. தன் உணர்ச்சியற்ற உடலைக் கண்களின் துணையின்றித் தெளிவாகப் பார்த்ததும் பின்னர் தன் உடலுக்குள் திரும்ப வந்ததும் ஒரு விதத்தில் மரணமும், பின் ஜனனமும் போலவே அல்லவா என்று நினைத்தார். தியானம் முடிந்தபின் உள்ளே ரகசிய தீட்சை நடந்த பகுதிகளில் கண்ட சித்திரங்களும் சிற்பங்களும் அவர் தியானத்தில் உணர்ந்த உண்மைகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.
கோயில்களில் முதல் பகுதியில் கூட பூஜை நேரங்களில் கூட சத்தம் ஆரவாரம் எதுவுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்று முன்பே சொல்லியிருந்தோம். உள்ளே இருந்த இரண்டாம் பகுதியில்  வெளிப்புற அமைதி மட்டுமல்லாமல் மன அமைதியும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அபிடோஸில் இருந்த ஓசிரிஸின் அந்தப் பிரதான கோயிலில் உட்பக்கம் இருந்த இரண்டாம் பகுதியில் ரகசிய தீட்சை நடக்கும் இடத்தில் இருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த மனிதர்களின் முகத்தில் பேரமைதியைக் கண்டார் பால் ப்ரண்டன்.
அங்கு ஓசிரிஸின் மரணமும், உயிர்த்தெழுதலும் தத்ரூபமாக வரையப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. ஓசிரிஸின் உடற்கூறுகள் சிதறிக் கிடந்த காட்சிகளில் கூட அங்கு மரணத்தின் போது இருக்கும் ஒரு துக்ககரமான சூழ்நிலை தெரியவில்லை. மாறாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிற, வாழ்கிற ஒரு சூழ்நிலையே அங்கிருந்த குருமார்களின் முகத்திலும், ரகசிய தீட்சை பெற வந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது. ரகசிய தீட்சையின் சடங்குகள் கிட்டத்தட்ட ஓசிரிஸின் மரணம், உயிர்த்தெழுதல் போலவே தெரிந்தன. அங்கு ரகசிய தீட்சைக்கு வந்த அவர்கள் ஒரு விதத்தில் மரணித்து பின் புதிய பிறப்பு எடுப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.
ரகசிய தீட்சை பெறத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவன் அஸ்தமன காலத்திற்குப் பின்னரே கோயிலுக்குள் இருக்கும் இரண்டாம் பகுதிக்கு அனுமதிக்கப் படுகிறான்.  மந்திர தந்திரங்களிலும், ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் போன்ற கலைகளிலும் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த அந்தக் கால எகிப்திய குருமார்கள் தங்கள் சக்தியால் அவனை மிக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். கிட்டத்தட்ட மரணிப்பது போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் ‘எகிப்திய மம்மிபோலவே கிடக்கும் அவனை ஒரு சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக மூடி வைக்கிறார்கள். அவனுக்கு அந்த ஆழ்ந்த மரண நிலை மயக்கத்திலேயே குருமார்கள் பல வித அனுபங்களை ஏற்படுத்தி உண்மை ஞான நிலையை உணர வைக்கிறார்கள். அவனுடைய ஆன்மா வேறொரு மேலான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலான உண்மைகளை உணர்த்தப்படுவது போல காண்பிக்கப்படுகிறது.
அந்தக் காட்சிகளின் விளக்கச் சித்திரங்களில் அந்த ஆன்மாவின் பயணங்கள் மிக சக்தியும், நுண்ணிய உணரும் தன்மையும் வாய்ந்த குருமார்களுக்கெ முழுமையாகக் காண முடிவது போல் சித்தரிக்கப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட மாணவனின் தன்மைக்கும் தரத்துக்கும் ஏற்ற நிலைப்படி தான் அவனுக்கு அறிவிக்கப்படுகின்றது. அந்த தீட்சையின் கால அளவும் அதற்கு ஏற்றபடி கூடவோ, குறையவோ செய்கின்றது. அந்த உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகிலேயே குருமார்கள் நிற்கின்றனர். அந்த நேரத்தில் இரவுப் பிரார்த்தனைகளும் மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகின்றன.
அந்த தீட்சைக்கு உட்படுத்தப்படும் மாணவனின் ஆன்மா ஓசிரிஸின் ஆன்மசக்தியுடன் இணைந்து அறிய வேண்டியவற்றை அறிந்து திரும்புவது போல ஐதிகம். ஓசிரிஸ் மரணித்தது போல அவனும் மரணிக்கிறான். ஆனாலும் உடல் உணர்ச்சியற்று இருப்பினும் ஆன்மாவின் நுண்ணிய பிணைப்பில் இன்னும் உடல் இருக்கின்றது. ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போன்றதே, மரணம் என்பது என்றும் ஆன்மாவிற்கு இல்லை, என்பதை தன் நிஜ அனுபவம் மூலமே அவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிகிறான். இன்னும் பல்வேறு அனுபவங்களை அடைகிறான், தன் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வேண்டிய உண்மைகளை அறிகிறான். உடலோடு ஆன்மா இணைந்திருக்கும் போது அவன் உணர முடியாத எத்தனையோ ரகசியங்களை அந்த தீட்சையின் போது அவன் உணர்கிறான். தன் இயல்பான எத்தனையோ நன்மைகளையும், சக்தியையும் மறுபடி உணர்கிறான். ஓசிரிஸ் போல பலமடங்கு சக்தியுடன் அவன் மீண்டும் உயிர் பெறுகிறான். 
சடங்குகள் முடிந்து மதகுருமார்களின் அற்புத சக்திகளால் அவன் உணர்வுநிலை திரும்பவும் உடலுக்கு தருவிக்கப்படுகிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து அதிகாலையின் சூரிய கிரணங்கள் அவன் மீது விழும் படி வைக்கிறார்கள். அவன் புதிய மனிதனாய் புத்துணர்வுடன் திரும்புகிறான். இந்த ரகசிய தீட்சை பெற்றவர்களை ‘இருமுறை பிறந்தவர்கள்அல்லது ‘வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டவர்கள் என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.
மதகுருமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்குவதற்கும், அவனை அந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு தடியை உபயோகப்படுத்துகிறார்கள்.  மதகுருமார்களின் ஹிப்னாடிச சக்திகள் இன்றைய ஹிப்னாடிச சக்திகள் போலவே வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவர்கள் சக்திக்கும், இன்றைய ஹிப்னாடிச சக்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. இன்றைய ஹிப்னாடிச சக்தியில் அந்த நிலைக்குக் கொண்டு போகப்பட்டவன் விழிக்கும் போது அந்த நிலையில் நடந்த, உணர்ந்த எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த மதகுருமார்கள் ஏற்படுத்தும் ஹிப்னாடிச சக்தியில் அந்த உணர்வற்ற நிலையில் பெற்ற அனைத்து அனுபவங்களும் அவன் உணர்வுநிலைக்குத் திரும்பும் போது நினைவில் தெளிவாக இருக்கின்றன. அவன் இனி வாழப்போகும் நிலைக்கு வழிகாட்டும் உன்னத அனுபவப்பாடங்களாக அமைகின்றன.
ஆரம்பத்தில் எகிப்தியர்களுக்கு மட்டுமே இந்த தீட்சை தரப்பட்டது. பின்னர் காலப் போக்கில் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கும் அந்த தீட்சைத் தரப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டவர்களில் உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் அடங்குவர். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் அனுபவங்களையும் பார்ப்போமா?
(தொடரும்)
- என்.கணேசன்

Monday, April 23, 2012

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை!



பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 14
முகமது நபி தோன்றுவதற்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர் உருவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். மிகப் புராதன காலத்திலேயே அவர்கள் ஓசிரிஸ் (Osiris) என்ற கடவுளை வணங்கி வந்தனர். ப்ரண்டனின் ஆன்மீகத் தேடலின் போதும் எகிப்தில் சில இடங்களில் மசூதிகளுக்கு அருகிலேயே ஓசிரிஸின் பழங்காலக் கோயில்கள் இருந்திருக்கின்றன. பால் ப்ரண்டன் அந்தப் பழங்காலக் கோயில்களுக்குச் சென்று அவை சொல்லும் செய்தியை அறிய முற்பட்டார்.
ஒரே இறைவனை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மனிதர்கள் வழிபட்டார்கள், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்று பால் ப்ரண்டன் ஆழமாக நம்பினார். மிகப் புராதனமான அந்தக் கோயில்களில் பல, பால் ப்ரண்டனின் காலத்திலேயே சிதிலமாக ஆரம்பித்திருந்த போதிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்ட அந்த தலங்களில் ஆன்மிக அலைகள் பரவியிருந்ததை அவரால் அங்கு சென்ற போது உணர முடிந்தது.    
அப்படி அவர் உணர்ந்த ஒரு சக்தி வாய்ந்த இடம் அபிடோஸ் (Abydos) என்ற இடத்தில் இருந்த புராதனக் கோயில். கோயிலின் புறத்தோற்றம் கால ஓட்டத்தின் சிதைவுகளைக் கண்டிருந்தாலும் அங்கிருந்த பெரிய தூண்களின் சிற்பங்களிலும், மங்கிய சித்திரங்களிலும் விவரிக்கப்பட்டு இருந்த கதைகளில் எத்தனையோ ரகசியங்கள் மறைந்திருந்ததாக பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது.
எகிப்தின் பழங்காலக் கதைகளின் படி பூமிக்கடவுளுக்கும், ஆகாயத் தேவதைக்கும் பிறந்த முதல் மகன் ஓசிரிஸ். அவன் மனைவி ஐசிஸ். பூமியை ஆண்டு வந்த ஓசிரிஸ் மீது பொறாமைப் பட்டு அவன் தம்பி செட் சூழ்ச்சி செய்து அவனைத் துண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுகிறான். மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஐசிஸ் நீண்ட நாள் பிரார்த்தனைகளும், சடங்குகளும் செய்து துண்டமான உடலை ஒன்று சேர்த்து உயிர் பெறச் செய்து விடுகிறாள். மாண்டவர் உலகிற்குச் சென்று வந்ததால் அனைத்தையும் உணர்ந்து பல மடங்கு சக்தி வாய்ந்தவனாக சில நாட்கள் வாழ்ந்து மனைவி ஐசிஸை கருத்தரிக்க வைத்து விட்டு மறுபடி மாண்டவர் உலகிற்குத் திரும்பி விடுகிறான். ஐசிஸ் பிரசவித்த ஹோரஸ் என்ற அவனுடைய குழந்தை பெரும் சக்தி வாய்ந்தவனாக வளர்ந்து தந்தையைக் கொன்ற சித்தப்பா செட்டை அழிக்கிறான்.
எகிப்தியக் கடவுள்களில் பிரதானமான கடவுளாய் ஓசிரிஸ் இறப்பின் கடவுளாகவும், நியாயத் தீர்ப்பு கடவுளாகவும் எகிப்திய பழங்கதைகளில் சித்தரிக்கப்படுகிறது. ஹோரஸ் தீயவைகளை அழிக்கும் தெய்வமாகவும், எல்லா புதிய நல்ல மாற்றங்களுக்கான தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அந்தக் கதைகளே அந்த கோயிலில் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் விவரிக்கப் பட்டு இருந்தன.
வழக்கமான கோயில்களில் வழிபாட்டின் போது ஒலிக்கும் இசைக்கருவிகளின் இசையோ, பாடல்களோ பிரதான கடவுளான ஓசிரிஸின் அந்தக் கோயிலில் ஒலிக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரேபோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்கிருந்த பழமையான எழுத்துக்களில் இருந்த தகவல்களை வைத்துக் கூறுகிறார். மயான அமைதி என்பார்களே அது போன்ற மயான அமைதியே வழிபாட்டு நேரத்தில் கடைப்பிடிக்கப் படுவதாகச் சொல்கிறார்.
அந்தக் கோயிலில் ஆன்மீக ரசியங்களை மிக அபூர்வமான, தகுந்த வெகுசிலருக்கு மட்டும் கற்றுத் தரப்பட்டன என்றும் அதற்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன என்றும் சில நாட்கள் ரகசிய சடங்குகள் கழிந்த பின்னர் அவர்களுக்கு குருமார்களால் உணர்த்தப்பட்டது என்றும் எகிப்திய பழமையான ஏடுகள் சொல்கின்றன. அந்த சடங்குகள் குறித்த சில சித்திரங்களும் அங்கிருந்தன. மிகப் பெரிய உண்மைகள் ஆரவாரத்திலும், கூட்டங்களிலும் உணரப்படுவதில்லை, பேரமைதியில் ஒருவன் தனக்குள்ளே ஆழ்ந்திருக்கும் போதே உணரப்படுகின்றன என்பதற்காகவே அமைதி அங்கு வலியுறுத்தப்படுகின்றது என்று பால் ப்ரண்டன் நினைத்தார்.
(கற்பனைக் கதைகளாக சித்தரிக்கப்படும் எத்தனையோ கதைகளைக் கற்பனைக் கதைகளாகவே எடுத்துக் கொண்டு பிற்கால உலகத்தினரில் பெரும்பாலானோர் பார்த்தாலும், விஷயமறிந்த சிலர் அதன் பின்னால் உள்ள செய்தியைப் படித்து பலன் அடைகிறார்கள். அந்தப் பலனையும், ஞானத்தையும் கதைகளாய் படித்து விட்டுப் போகிறவர்கள் பெறத்தவறி விடுகிறர்கள்.)
அங்கிருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த சில சங்கேதக் குறிகள் ரகசியக் கலைகள் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்படி இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிதிலமடைந்து பாழ்பட்டுப் போன அந்தக் கோயிலை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மன்னன் ஒருவன் புனரமைத்தததோடு எகிப்தில் இருந்த ஹீலியோபோலிஸ் என்ற மிகப்பழங்கால நூலகத்தில் இருந்த ஓசிரிஸ் கோயில் பற்றிய தகவல்களைக் கொண்ட நூல்களை எல்லாம் தக்க அறிஞர்களைக்  கொண்டு ஒன்று திரட்டி அந்தப் பழைய தீட்சைக்கான சடங்குகளை தன் பிற்கால சந்ததிகளுக்கு விட்டுப் போனதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னனால் தான் இன்று அந்த தீட்சைகள் பற்றியும் சடங்குகள் பற்றியும் விரிவாக அறிய முடிகிறது. அந்த நூல்களில் இருந்த தகவல்களின் படியே அதே கட்டமைப்புடன் பல கோயில்களை அந்த மன்னன் புதிதாகக் கட்டினான் என்றும் வரலாறு கூறுகிறது.
ஆனால் பால் ப்ரண்டன் எகிப்திற்குச் சென்ற காலத்தில் அதுவும் பழமையாகிப் போன போதும் முழுவதுமாக அழிந்து விடாமல் தப்பிய ரகசியத் தகவல்கள் பல, அன்றைக்கும் ஆன்மிக வல்லுனர்களை ஈர்த்த வண்ணம் இருந்தன. எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் ஆன்மிகத் தேடலுடன் அந்த ரகசிய தீட்சை பெற முயன்றாலும் தக்க குருமார்கள் பல சோதனைகளுக்குப் பிறகு வெகுசிலரையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த ரகசிய தீட்சை தந்தனர் என்று சொல்லப் படுகிறது. அப்படி ரகசிய தீட்சை பெற்றதாக சொல்லப்படுபவர்களுள் ஒரு சிலர் மிகப்பிரபலமானவர்கள். அவர்கள் யார் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்திய சில ரகசியத் தகவல்களையும் பார்ப்போமா?
(தேடல் தொடரும்)
- என்.கணேசன்
    

Monday, March 12, 2012

வெற்றிக்கு முன் வரும் தடைகள்!



ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.  இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் ஜேக் கேன்ஃபீல்டு (Jack Canfield) மற்றும் மார்க் விக்டர் ஹான்சென் (Mark Victor Hansen) இருவரும் சந்தித்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அவர்கள் இருவரும் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்த முகாம்களை நடத்தி வந்த போது அதற்குத் தேவையான நிஜக்கதைகள் நிறைய சேகரித்து வைத்திருந்தார்கள். அந்த முகாம்களில் கலந்து கொண்ட பலர் அந்த நிஜக் கதைகளைப் புத்தகமாகப் போட்டால் பலருக்கு உதவியாக இருக்கும் என்று சொல்ல, அதைப் புத்தகமாகப் போடும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. 1991ஆம் ஆண்டு இறுதியில் ஒரு புத்தகமாகத் தொகுத்து நியூயார்க் சென்று பதிப்பகங்களை ஒரு ஏஜெண்டின் துணையுடன் அணுகினார்கள். சிலர் அது போன்ற தொகுப்பு நூல் விலை போகாது என்றார்கள், சிலர் அந்தப் பெயரே சரியில்லை, படிக்கவும் ஆளிருக்காது என்றார்கள், சிலர் பரபரப்பு இல்லாத கதைகள் விற்பனையாகாது என்றார்கள். நேரடியாக சந்திக்க முடியாத பதிப்பகங்களுக்கு அந்த பத்தகங்களை தபால் மூலமாக அனுப்பிப் பார்த்தார்கள். அந்தப் பதிப்பகங்களும் அவற்றைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அவர்கள் ஏஜெண்டும் கைவிரித்து விட்டார்.
விற்பனை ஆகாது, விலை போகாது என்று திரும்பத் திரும்பக் கேட்க நேர்ந்த ஜேக் கேன்ஃபீல்டும், மார்க் விக்டர் ஹான்செனும் அந்த அபிப்பிராயங்கள் உண்மையல்ல என்று புரிய வைக்க வேறு வழி கண்டு பிடித்தனர். அந்த நூல் வெளியானால் கண்டிப்பாக ____ பிரதி/கள் வாங்குவேன் என்ற உறுதி மொழிக்கடிதம் ஒன்றை அச்சிட்டு அதில் பெயர், விலாசம் எல்லாம் எழுத இடம் விட்டு தங்கள் முகாம்களுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தந்தனர். 20000 புத்தகங்கள் வாங்க உறுதிமொழிக் கடிதங்கள் சேகரித்த பின் கலிபோர்னியாவில் நடந்த புத்தக விற்பனையாளர்கள் பேரவைக் கூட்டம் ஒன்றிற்குச் சென்று ஒவ்வொரு பதிப்பகத்திடமும் அந்த உறுதிமொழிக் கடிதங்களைக் காட்டிக் கூடப் பேசிப் பார்த்தார்கள். அங்கேயும் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.
130 மறுப்புகளுக்குப் பிறகு ஒரு சின்ன பிரசுரம் அவர்கள் புத்தகத்தைப் பிரசுரிக்க முன் வந்தது. புத்தகங்கள் வெளி வந்தவுடன் முதலில் அந்த உறுதிமொழிக்கடிதம் கொடுத்தவர்களுக்கு நூல்களை அனுப்பி அவர்கள் காசோலைக்காகக் காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே உறுதியளித்த எண்ணிக்கை புத்தகங்களை வாங்கினார்கள். படித்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. முதல் புத்தகம் எண்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகி பெரும் சாதனை படைக்க அவர்களது மற்ற தொகுப்பு நூல்களும் பிரசுரமாகி பெரும் வெற்றியைக் கண்டன.  
எந்த ஒரு வெற்றியும் தடைகள் இல்லாமல் சந்திக்கப்படுவதில்லை. அதிலும் வெற்றி மகத்தானதாக இருக்கும் பட்சத்தில் அது சந்திக்கும் தடைகளும் பெரிய அளவிலேயே தான் இருக்கின்றன. தடைகள் ஒன்றிரண்டிலேயே மனம் உடைந்து நிறுத்தப்பட்ட முயற்சிகள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும். அவற்றில் எத்தனையோ இன்று வெற்றி கண்டவற்றை விட எத்தனையோ விதங்களில் மேன்மையாக இருந்திருக்கவும் கூடும். அதனால் எத்தனையோ பெரும் திறமைகள் உலகத்தின் பார்வைக்கே வராமல் போய் இருந்திருக்கின்றன என்பது தான் மிகவும் வருந்தத் தக்க உண்மை.
உண்மையான வெற்றி பிரபலத்திலும், எண்ணிக்கையிலும் இல்லை தான். ஆனால் திறமை வெளியே தெரியாமலேயே அமுங்கி விடும் போது உண்மையான தோல்வி ஏற்பட்டு விடுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதனால் உண்மையான திறமை கொண்டிருப்பவர்கள் திறமைக்கு இணையாக தங்களிடம் விடாமுயற்சியையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வது மிக முக்கியம். ஆரம்பத்தடைகளை எதிர்பார்க்காமல் இருந்து விடக் கூடாது. அவற்றை வெற்றியின் பாதையில் கடக்க வேண்டிய மைல்கற்களாகவே கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
புத்தக வெற்றி மட்டுமல்ல எல்லா மகத்தான வெற்றிகளும் இந்த நிஜத்தை அனுசரித்தே நிகழ்கின்றன. ஒரு ரஜனிகாந்த் ஆகட்டும், மைக்கேல் ஜேக்சன் ஆகட்டும், ஐன்ஸ்டீன் ஆகட்டும், ராமானுஜம் ஆகட்டும், இது போல ஒவ்வொரு துறையிலும் சிகரம் எட்டிய எவரே ஆகட்டும் இது போல பல தடைகள் கடந்து மட்டுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். வெற்றி கிடைத்த பின் கூடும் கூட்டம், புகழ், செல்வம் எல்லாம் பிற்காலத்தையவையே. ஆரம்பத்தில் தனியர்களாகவே அந்த சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள்.
சிக்கன் சூப் கதைகள் வெளியிட அவர்கள் இருவரும் பட்ட ஆரம்ப சிரமங்களைப் பாருங்கள். சில நேரங்களில் அவர்கள் சந்தித்த சில மறுப்புகள் நமக்கு அவமானமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் தாங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தின் மேல் இருந்த நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து முயல வைத்திருக்கிறது. தடைகள் வரும் போது அவர்கள் தயங்கி தங்கள் முயற்சிகளை நிறுத்திக் கொண்டிருந்தால் இன்று அந்த வெற்றி சரித்திரம் விடுபட்டுப் போயிருக்கும். 
எனவே திறமை உள்ளவர்களே ஆரம்பத் தடைகளுக்குத் தயாராகவே இருங்கள். அவற்றை சந்திக்கும் போது மனம் தளர்ந்து விடாதீர்கள். இது உங்களுக்கு மட்டும் நிகழும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. சொல்லப் போனால் இதுவே நியதி. இதுவே பாதை. இந்த உண்மையை மனதில் அழுத்தமாகப் பதித்து எல்லாவற்றையும் தாக்குப் பிடித்து தொடர்ந்து முயலுங்கள். பல தடைகளைக் கடந்து கடைசியில் கிடைக்கும் வெற்றிக் கனியைப் போல் சுவையானது வேறொன்றும் இல்லை. உங்கள் திறமைகள் வெளிவருவதும், புதைந்து போவதும் வெளிப்புற நிகழ்ச்சிகளாலோ, மற்றவர்களாலோ அல்ல, அதை எதிர்கொள்ளும் உங்கள் மனநிலையால் மட்டுமே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.
- என்.கணேசன்

Monday, March 5, 2012

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13
ப்ரண்டன் வியந்த இஸ்லாம்
ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்தில் தங்கிய நாட்களில் இஸ்லாமியர்களின் தொழுகை முறையால் மிகவும் கவரப்பட்டார். கிறிஸ்துவராக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஞானத்தைத் தேடிய அவருக்கு எல்லா இடங்களில் இருந்தும் கிடைத்த மேன்மையான விஷயங்களை அறியவும், மதிக்கவும் முடிந்தது.
மசூதிகளில் தொழுகை நேரத்தில் ஒரு பரம தரித்திரனுக்கு அருகில் ஒரு பெரும் செல்வந்தன் உட்கார்ந்து தொழுவதை அவர் பல இடங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. புனிதக் குரானின் வாசகங்களை உச்சரித்தபடி அவர்கள் செய்த தொழுகை முறையில் பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரே மாதிரியான ஒழுங்கு அவரைக் கவர்ந்தது. தொழுகை என்பது தினசரி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த விஷயமாக இருப்பது அவரை வியக்க வைத்தது.
ரயிலில் பயணம் செய்கையில் ப்ளாட்ஃபாரங்களில் கூட குறிப்பிட்ட நேரமானால் சிறிய பாய்களை விரித்து இறைவனுக்காக ஆறேழு நிமிடங்கள் ஒதுக்க முடிந்த இஸ்லாமியர்களின் சிரத்தையை அவரால் சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. ஒரு மதிய வேளையில் ஓட்டலுக்குச் சாப்பிடப் போன போதும் பரிமாறிக் கொண்டிருந்த சர்வர் தொழுகை நேரமானவுடன் தொழுகையை ஓட்டலிலேயே ஒரு ஓரத்தில் செய்ய ஆரம்பித்ததையும், இன்னொரு சமயம் ஒரு உயர் போலீஸ் அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது அனுமதி வாங்கிக் கொண்டு அந்த உயர் அதிகாரி தொழுகையை நடத்தியதையும் தன் நூலில் பால் ப்ரண்டன் குறிப்பிடுகிறார்.
தொழுகை என்பது வழிபாட்டுத்தலங்களில் என்று ஒதுக்கப்பட்டு விடாமல் அந்தந்த நேரங்களில் எந்த இடமானாலும் சரி அந்த இடத்தில் நடத்தப்படும் உறுதியான விஷயமாய் இருப்பது இஸ்லாத்தின் தனித்தன்மையாக பால் ப்ரண்டன் கண்டார். கெய்ரோவில் கண்டது போல் லண்டன், நியூயார்க் போன்ற மேலை நாடுகளில் காணமுடியாதென்பதை ஒப்புக் கொண்டார். இந்த வழிபாட்டு ஒழுங்குமுறையும், உறுதிப்பாடும் இஸ்லாத்திடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை என்று அவர் நினைத்தார்.
எகிப்தில் இருந்த நாட்களில் இஸ்லாத்தையும் ஆழ்ந்து படித்த பால் ப்ரண்டன் அவர்களது தொழுகை முறையையும் கற்றுக் கொண்டு கெய்ரோ நகர பழமையான மசூதிகளில் தானும் தொழுதார். இறை சக்தி ஒன்றே என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதிருந்த பால் ப்ரண்டனுக்கு அப்படித் தொழுவதில் எந்தத் தயக்கமும் வரவில்லை.
தன்னைப் பின்பற்றுவோர் மனதில் பெருமையான ஒரு இடத்தைப் பெற முகமது நபி தேவையற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டவும் முனையவில்லை என்பதனை இஸ்லாத்தைப் பற்றி விரிவாகப் படிக்கையில் அவர் அறிந்தார். அரேபியாவில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரிக்கையில் சிலர் அவரிடம் சென்று “நீங்கள் ஏதாவது அற்புதம் நிகழ்த்தி நீங்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று நிரூபியுங்கள்என்று வற்புறுத்திய போது முகமது நபி வானை நோக்கி பார்வையைச் செலுத்தியவராய் இறைவன் என்னை அற்புதங்கள் நிகழ்த்த அனுப்பவில்லை. நான் அல்லாவின் செய்தியை மனிதகுலத்திற்குக் கொண்டு வந்திருக்கும் தூதன் மாத்திரமேஎன்ற செய்தி அவரை வெகுவாகக் கவர்ந்தது.
இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், மேலும் அறிந்து கொள்ளவும் எகிப்து இஸ்லாமியர்களின் தலைவரும், இஸ்லாமிய கல்விக்கூடங்களின் தலைமைப் பேரறிஞருமான ஷேக் முஸ்தபா எல் மராகியை சந்தித்துப் பேசினார். இறைவன் ஒருவனே என்ற இஸ்லாத்தின் மிக உறுதியான, முக்கியக் கொள்கையில் ஆரம்பித்து எல்லா முக்கிய அம்சங்களையும் ஷேக் முஸ்தபா விளக்கினார். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே வேறொரு நபர் தேவையில்லை என்பதை இஸ்லாம் நம்புகிறது என்றார் ஷேக் முஸ்தபா.
இஸ்லாம் இறைவனை அறிந்து கொள்ளவும், பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளவும் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. திறந்த மனத்துடன் தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளும், புரிந்து கொள்ளலுமே மூட நம்பிக்கைகளையும், புனிதக் கோட்பாடுகளுக்குத் தங்களுக்குத் தேவைப்படும்படி பொருள் கொள்ளும் போக்கையும், அவ்வப்போது விலக்கி ஒரு மதத்தை கலப்படமற்ற புனிதத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகத் தெரிவித்தார் ஷேக் முஸ்தபா.
அவரிடம் நீண்ட நேரம் உரையாடிய போது பால் ப்ரண்டன் இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களைத் தயக்கமில்லாமல் கேட்டார். அவர் கேட்ட முக்கிய  கேள்விகளும் ஷேக் முஸ்தபா சொன்ன பதில்களும் இதோ-
ஆத்மாவைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
“குரான் ஆத்மா பற்றி எதையும் குறிப்பிடவில்லை. பிற்காலத்திய சில இஸ்லாமிய மகான்களும், அறிஞர்களும் சில அறிவுபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் என்றாலும் அதை குரானில் சொன்னதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில், செய்த நன்மைகளுக்கு வெகுமதியும், செய்த தீமைகளுக்குத் தண்டனையும் கிடைப்பது உறுதி என்பதை குரான் தெரிவிக்கிறது. அல்லா கூறுகிறார். “எவனொருவன் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குத் தகுந்த வெகுமதியைப் பெறுவான். அதே போல அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கேற்ற தண்டனையை அடைவான்.
“இஸ்லாத்தில் மசூதிகள் முக்கியமா?
“இல்லை. மக்கள் பிரார்த்திக்கும் இடங்கள் அவை, வெள்ளிக்கிழமை அன்று பிரசங்கங்கள் கேட்கச் செல்லும் இடங்கள் அவை என்றாலும் இஸ்லாத்தை பின்பற்ற மசூதிகள் அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது. இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய முடியும். சுத்தமான தரை இருந்தால் போதும்..... மசூதிகளைக் கட்டுவது பிரார்த்திப்பதில்  சகோதரத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வளர்த்தவே. அந்த வகையில் தான் மசூதியில் பிரார்த்திப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.”
“தினமும் ஐந்து முறைத் தொழுகை என்பது அதிகமில்லையா?என்று பால் ப்ரண்டன் கேட்ட போது ஷேக் முஸ்தபா பொறுமையாக பதில் சொன்னார்.
“இல்லை. தொழுகைகள் இறைவனைப் பிரார்த்திக்கும் கடமை மட்டுமல்ல, அவன் ஆன்மிக முறைப்படி தன்னை நெறிப்படுத்திக் கொள்ள உதவும் அவசியமும் கூட. திரும்பத் திரும்ப இறைவனையும், இறைவனது செய்தியையும் சொல்லும் மனிதன் மனதில் இறை குணங்கள் தானாக ஆழப்படுகின்றன. உதாரணத்திற்கு இறைவனிடம் தொடர்ந்து கருணையை வேண்டும் மனிதன் அதன் அவசியத்தை உணர்ந்தவனாக இருப்பதால் தானும் கருணையுள்ளவனாக சிறிது சிறிதாக மாற ஆரம்பிக்கிறான். எனவே தொழுகைக்காகக் குறித்து வைத்திருக்கும் நேரங்களில் தொழுகை செய்வது வற்புறுத்தப்படுகிறது. ஏதாவது அவசர சூழ்நிலை அந்த நேரத்தில் தொழுகை செய்வதைத் தடுக்குமானால் அந்த சூழ்நிலை முடிந்தவுடனேயே தொழுகை செய்ய வேண்டும்.
“நோய்வாய்ப்பட்டால் என்ன செய்வது?
“நிற்கவோ, மண்டியிடவோ முடியாத நிலையில் ஒருவன் இருந்தால் பிரார்த்தனையைப் படுத்த நிலையிலேயே கூட செய்யலாம். அவனால் கைகளை நெற்றிப் பொட்டு வரை மடக்க முடிந்தால் கூட போதும்....
“மெக்காவிற்கு செல்வதன் நோக்கம் என்ன?
“மசூதிக்கு செல்வது எப்படி உள்ளூர் சமூக சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கோ அப்படித்தான் மெக்கா செல்வது உலகளாவிய மனிதகுல சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கு. எல்லோரும் இஸ்லாத்தில் சரிசமமானவர்களே. அல்லாவை நம்பி மசூதியில் கூடினாலும் சரி, ஹஜ் யாத்திரையில் கூடினாலும் சரி அங்கு அவர்கள் சமமாகவே கருதப்படுகிறார்கள். மசூதியிலும் சரி யாத்திரையிலும் சரி ஒரு அரசனுக்கருகில் ஒரு பிச்சைக்காரன்  பிரார்த்தனை செய்யலாம். எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒருமித்துப் போகும் இடமாகவும் சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை அவரவர் நற்செயல்களால் மட்டுமே ஒவ்வொருவரும் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்
உண்மையான இஸ்லாம் உண்மையை அறிய ஊக்குவிப்பதாகவும், கண்மூடித்தனமான பின்பற்றுதலை கண்டிப்பதாகவும் ஷேக் முஸ்தபா கூறி புனித நூலில் வரும் ஒரு வாசகத்தையும் கூறினார். “இறைவன் சொன்னதைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படும் போது அவர்கள் நாங்கள் எங்கள் தந்தையர் செய்ததைப் பின்பற்றுகிறோம் என்கிறார்கள்.... உங்கள் தந்தையரே அறியாதவர்களாக இருந்தால், வழிநடத்தப்படாதவர்களாய் இருந்தால் என்ன செய்வீர்கள்?” 


உண்மை தானே!
நீண்ட நேரம் தொடர்ந்த அவருடைய விளக்கங்களில் பால் ப்ரண்டனுக்கு இஸ்லாத்தை வித்தியாசமான புதுமையான கோணங்களில் அறியவும், முன்பு கொண்டிருந்த சில தவறான அபிப்பிராயங்களைக் களைந்து கொள்ளவும் முடிந்தது.
(தொடரும்)

Monday, November 21, 2011

வயதில்லா உடலும், காலமறியா மனமும்


உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலைகள்என்றும், “மனம் அனைத்து துன்பங்களிற்கும் உற்பத்திக்கூடம்என்றும் சொல்வார்கள். அதிலும் வாழ்க்கை இளமையிலிருந்து விலகி முதுமையை நோக்கிச் செல்லச் செல்ல உடலும் மனமும் ஏற்படுத்துகின்ற பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலோருடைய கருத்தும், அனுபவமும் இப்படி இருக்கையில் அதற்கு எதிர்மாறான ஒரு கருத்தை Ageless Body and Timeless Mind (வயதில்லா உடலும் காலமில்லா மனமும்) என்ற தன் நூலில் ஆதாரபூர்வமாய், அழுத்தம் திருத்தமாய் சொல்கிறார் தீபக் சோப்ரா.
இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் குடியேறிய தீபக் சோப்ரா மருத்துவப் படிப்பில் M.D பட்டம் பெற்றவர். உடல்-உள்ளம் சம்பந்தப்பட்ட பல ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டியவர். அவர் எழுதிய சுமார் 65 புத்தகங்களில் 19 புத்தகங்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அதிக விற்பனையான மற்றும் பிரபலமான புத்தகங்கள் பட்டியலில் இடம் பிடித்தவை. அதிலும் வயதில்லா உடலும், காலமில்லா மனமும் என்ற இந்தப் புத்தகம் அந்தப் பட்டியலில் தொடர்ந்து பல வாரங்கள் தங்கிய புத்தகம். இதில் அவர் அலசி இருக்கும் விஷயங்களும், சொல்லியிருக்கும் உண்மைகளும் மிக மிக சுவாரசியமானவை மட்டுமல்ல மிகவும் உபயோகமானதும் கூட. அவற்றைப் பார்ப்போம்...
உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே உள்ள தொடர்பு நெருக்கமானது என்பதை விட இரண்டும் பின்னிப் பிணைந்தவை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நம் உடலில் உள்ள செல்கள் நம் எண்ணங்களால் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பவை என்கிறார் சோப்ரா. செல்களின் செயல்பாடுகள் துரிதப்படுவதும், வேகம் குறைவதும், அப்படியே நின்று போவதும், ஏன் தலைகீழாய் பின்னுக்குச் செல்வதும் கூட மனதின் எண்ணங்களைப் பொறுத்து சாத்தியமாகின்றன என்கிறார் அவர்.
செல்களின் சுமார் 90% சக்தி உடலை ரிப்பேர் செய்வதிலும், உடலுக்குத் தேவையான பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்துவதிலும், சீரமைப்பதிலும் செலவாகிறது. ஆனால் மனம் எதைப் பற்றியாவது கவலை கொண்டாலோ, பயம் கொண்டாலோ, ஏதோ ஆபத்தை உணர்ந்தாலோ செல்கள் அந்த வேலை செய்வதை விட்டு விட்டு மனம் சொல்லும் விஷயங்களில் தங்கள் சக்தியை செலவழிக்கின்றன. இது எப்போதாவது ஒரு முறை நடந்தால் பெரிய பாதகம் இல்லை. ஆனால் இது எப்போதுமே நடந்து கொண்டிருந்தால் உடல் பாதுகாப்பும் சீரமைப்பும் கைவிடப்பட்டு மனதின் கற்பனை அவசரங்களில் செல்களின் சக்தி வீணாகிறது. அதனால் அப்படிப்பட்டவர்களின் உடல்கள் சீக்கிரமாகவே முதுமையடைகின்றன, சீக்கிரமாகவே நோய்வாய்ப்படுகின்றன என்கிறார் சோப்ரா. கான்சர், பக்கவாதம் போன்ற நோய்கள் அதிகமாக துக்க காலத்தில் தான் உடலைத் தாக்குவதில் வெற்றியடைகின்றன என்று ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி அவர் கூறுகிறார்.
நமது உடற்கூறின் அடிப்படையான DNA மாறுவதில்லை என்ற போதிலும் அதன் நகலானதும், வேலையாளுமான  RNA நமது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளிற்கும் ஏற்ப தூண்டப்பட்டு அடிக்கடி தன் வேலையை மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் உடல் கட்டமைப்பையும் அதன் சக்தியையும் நிர்ணயிக்கும் சக்தியையும் பெற்றுள்ள  RNA நமது தவறான எண்ணப்போக்கால் ஒழுங்காக வேலை செய்வதில்லை. சீக்கிரமே சக்தி இழக்கும் உடல் நோயால் விரைவாகவே பாதிக்கப்படுகிறது என்கிறார் அவர்.
இதற்கு பல ஆதாரங்களுடன் கூடிய விரிவான விளக்கத்தையும் தருகிறார் தீபக் சோப்ரா.
முதுமை தவிர்க்க முடியாதது என்ற கூற்றை அவர் முழுமையாக ஒத்துக் கொள்ள மறுக்கிறார். உலகில் ஒரு செல் அமீபா, அல்கே, ப்ரோடோசோவா போன்ற சில உயிரினங்கள் முதுமை அடைவதில்லை என்கிறார். நம் அறிவுத் திறன், உணர்வுகள், தனித்தன்மைகள் முதுமையடைவதில்லை என்கிற அவர் நமது DNAவின் பெரும்பகுதி கூட வயதிற்கேற்ப மாறுவதில்லை என்கிறார்.
தேனீக்களின் வாழ்க்கையை விஞ்ஞானிகள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து கண்ட அதிசயங்களை விவரித்து தன் வாதத்திற்கு வலுவூட்டுகிறார் அவர். தேன்கூட்டிற்குள் தங்கி முட்டைகளைப் பாதுகாப்பதும், அப்போது தான் பிறந்த புதிய தேனீக்களின் உணவுத் தேவைகளைக் கவனிப்பதும் இளம் தேனீக்களின் வேலை. மூன்று வாரங்கள் வளர்ந்த பிறகு தேன் சேகரிக்க வெளியே சென்று விடும் மூத்த தேனீக்களாக அவை மாறி விடும். இது தான் அவற்றின் இயற்கையான செயல்பாடு. ஆனால் அவசர காலங்களில் அவற்றின் வயதும் வேலையும் ஹார்மோன்களின் உதவியுடன் விரைவுபடுத்தப்படுவதையும், தலைகீழாய் திரும்புவதையும் கண்டு விஞ்ஞானிகள் அசந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கூட்டுக்குள் தேவைக்கும் அதிகமான தேனீக்கள் இருந்து வெளியே சென்று தேன் சேகரிக்கும் தேனீக்கள் குறைந்தால் கூட்டில் உள்ள இளம் தேனீக்களின் வயது தானாக ஹார்மோன்கள் இயக்கத்தால் மூன்று வாரமாகக் கூடி தேன் சேகரிக்கக் கிளம்பி விடுகின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதே போல் கூட்டிற்குள் வேலை செய்யும் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வெளியே செல்லும் முதிய தேனீக்கள் எண்ணைக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு முதிய தேனீக்கள் தங்கள் ஹார்மோன்கள் வேலைப்பாட்டால் இளமையாகி கூட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றனவாம்.
தேனீக்கள் மாறும் அளவிற்கு மனிதன் மாற முடியா விட்டாலும் மனித உடலிலும் மூளை தேவைக்குத் தகுந்தபடி பல அற்புதங்களைச் செய்வதை உதாரணமாக தீபக் சோப்ரா சுட்டிக் காட்டுகிறார். மூளையின் வழித்தடங்கள் முதிய வயதிலும் நீள்வதையும், சில நியூரான்கள் சுருங்கும் போது குறுக்குத் தடங்கள் உருவாகி செயல்பாடுகளில் குறைவில்லாமல் மூளை இயல்பாகவே பார்த்துக் கொள்ள முயல்வதையும் விவரிக்கிறார்.
ஆனால் உடல் தன் வேலையை இயல்பாகச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கு இடையூறுகளையும் தடைகளையும் நாமாக நம் தவறான வாழ்க்கை முறையாலும், பழக்க வழக்கங்களாலும் ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார். அதற்கு பொருள் பொதிந்த அறிவுரைகள் சிலவற்றை மிக விரிவாக இந்த புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவை சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
நாம் உடலைப் பொருத்த வரை எந்திரமாக இயங்கப் பழகி விட்டோம். இயற்கையாக நடக்கும் உடலின் செயல்களுக்கு நாம் கவனம் தருவதில்லை. அது ஏதாவது வேலையைச் சரிவர செய்யாமல் போனால் அது மட்டும் தான் கவனத்திற்கு வருகிறது. அந்த சமயத்தில் அது பெரும்பாலும் மருந்தில்லாமல் குணமாகாத நிலைக்கு சென்று விட்டிருக்கும். உடலின் ஒவ்வொரு பகுதியையும், அது செய்யும் வேலையையும் விழிப்புணர்வோடு நம்மை அவ்வப்போது கவனிக்கச் சொல்கிறார். அனிச்சையாக நடக்கும் செயலுக்கு நம் கவனத்தையும் தருவது அப்பகுதியையும், அதன் செயலையும் சீராக்கும் என்று அவர் சொல்கிறார்.
பயன்படுத்தாத எதுவும் பலமிழந்து போகும் என்பது உடலியலிலும், மனவியலிலும் நிரூபிக்கப்பட்ட உண்மை. உடலுறுப்பும் சரி, நம் திறமைகளும் சரி பயன்படுத்தத் தவறும் போது பலமிழந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் பயன்படுத்த முடியாததாகவே மாறி விடுகிறது. ஒவ்வொரு தகவலையும் உடல் அவ்வப்போது நமக்கு நுணுக்கமாகத் தெரிவிக்கிறது. ஆனால் எந்திரத்தனமாக செயல்படும் நாம் மற்ற எத்தனையோ விஷயங்களில் மும்முரமாக இருந்து அது சொல்லும் செய்திகளைக் கேட்கத் தவறி விடுவதால் தான் நோய்வாய்ப்படுகிறோம் என்கிறார் அவர்.
வாழும் விதத்திலும் சிந்திக்கும் விதத்திலும் நாம் செய்யும் சின்ன திருத்தமும் நம்மை மிகப் பெரிய விதத்தில் மாற்றும் வலிமை கொண்டது என்கிறார். ஒரு சிஷ்யன் குருவிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான். நாம் இருவரும் ஒரே மாதிரி தானே இந்த உலகில் வாழ்கிறோம். பின் எது நம் இருவரையும் வித்தியாசப்படுத்துகிறது?
குரு சொன்னார். “நீ இந்த உலகில் உன்னைப் பார்க்கிறாய். நான் என்னில் இந்த உலகத்தைப் பார்க்கிறேன்
சின்னதாய் பார்க்கும் விதம் மாறினாலும் உலகமும், வாழ்க்கையும் மிகப்பெரிய அளவில் மாறி விடுகிறது. வெளியுலகில் நடக்கும் சம்பவங்களுக்கு உண்மையில் நம்மை மாற்றும் சக்தி இல்லை என்கிறார் அவர். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்தே நம் வாழ்க்கை அமைகிறது என்று சொல்கிறார்.

உடல் மீது இவ்வளவு ஆதிக்கம் செய்ய முடிந்த மனதைக் கட்டுப்படுத்துவதில் இக்கால மனிதர்கள் வெற்றி பெறாததே அவர்களது மன உளைச்சலுக்கும், துன்பங்களுக்கும் காரணம் என்று அவர் கூறுகிறார். வாழ்க்கை முறையில் எளிமை இல்லாததும், பொய்யான தேவைகளை உருவாக்கிக் கொண்டு அதை நிறைவேற்ற போராட்ட வாழ்க்கையை நடத்துவதும், இயற்கையிலிருந்து விலகிக் கொண்டே செல்வதும், அவசர ஓட்டமும் இக்கால மனிதர்களின் நிம்மதியின்மைக்கு முக்கிய காரணங்களாக அவர் சொல்கிறார்.
ஒரு செயலில் முழுமையாக ஈடுபடும் போது நம்மைப் பொறுத்த வரை காலம் நின்று போகிறது, அல்லது மறக்கப்படுகிறது. அதில் நாம் களைப்படைவதும் இல்லை. ஆனால் இன்று பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்திலும் களைத்தல்லவா போகிறார்கள். இதையும் மிக அழகாகத் தன் நூலில் கையாண்டிருக்கும் தீபக் சோப்ரா எல்லாவற்றையும் மாற்றி உடலிலும், உள்ளத்திலும் புத்துணர்ச்சியையும், சிறந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இந்தப் புத்தகத்தில் சில தியான முறைகளையும், புரட்சிகரமான சிந்தனைகளையும், பயிற்சிகளையும் விளக்கி இருக்கிறார். எல்லாமே அறிவுபூர்வமாகவும், எளிமையாகவும் இருப்பது தான் இந்த நூலின் தனிச்சிறப்பு. 
342 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதிலும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் விரிவாகவே அலசப்படுகிறது. இரண்டையும் அழகாக இணைத்து தெளிவான முடிவுகளைத் தந்திருப்பதிலும், மாற்றத்திற்கான வழிமுறைகளைக் காட்டி இருப்பதிலும் தீபக் சோப்ரா வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இழந்து விட்ட தனிச்சிறப்புகளை மீண்டும் மீட்டெடுக்க இன்றைய மனிதனுக்கு இந்த நூல் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
- என்.கணேசன்

Friday, November 4, 2011

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-11
அற்புதங்களின் அறிவியல் விளக்கம்
“இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?
இந்தக் கேள்விக்கு உண்மையான விளக்கத்தைச் சொல்ல முன் வருபவர்கள் வெகு சிலரே. விளக்கி விட்டால் தங்களைக் குறித்து அடுத்தவர்கள் வைத்திருக்கும் அதீத மதிப்பு குறைந்து விடும் என்று நினைப்பது இயல்பே. ஆனால் டெஹ்ரா பே அப்படி நினைக்காமல் பால் ப்ரண்டனிடம் விளக்க முன் வந்தார்.
எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நமக்குள்ளே இருக்கும் பிரம்மாண்டமான சக்தியை நாம் கண்டு கொள்வதே. அதைக் கண்டு கொள்ளும் வரை அறியாமை என்ற சங்கிலியால் கட்டுண்டே இருக்க நேரிடும். கண்டு கொண்டால் மட்டுமே ஆழ்மன சக்திகளையும், மற்ற பெரிய சக்திகளையும் பயன்படுத்த முடியும். நான் செய்து காட்டியவற்றை சிலர் கண்கட்டு வித்தை என்று நினைக்கலாம், அல்லது அமானுஷ்ய சக்தியைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளும் சரியல்ல. நான் செய்த அனைத்துமே இயற்கை விதிகளுக்கு உட்பட்டதே. அறிவியல் உண்மையைச் சார்ந்ததே.
மற்றவர்களுக்கு அற்புதமாகத் தோன்றும் இந்தச் செயல்களை நான் செய்ய இரண்டு விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று, உடலின் சில நாடி நரம்பு மையங்களைப் பற்றி அறிந்து அவற்றில் அழுத்தம் தருவது. இரண்டாவது நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு உணர்வற்று ஆழ்மயக்க நிலைக்கு என்னால் போக முடிவது. இந்த இரண்டையும் செய்யத் தவறினால் என்னாலும் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் ஆன்மிகம் எதுவும் கிடையாது. ஆன்மிகம் என்று நான் ஏதாவது சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் செய்யும் போது பற்றுதல் இல்லாத நிலையில் நான் இருப்பதை வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி இதில் ஆன்மிகமோ, மந்திரவாதமோ கிடையாது.
பால் ப்ரண்டனுக்கு அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டு விளக்கிய விதம் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. அவர் கேட்டார். “அந்த இரண்டு அம்சங்களையும் விளக்கிச் சொல்ல முடியுமா?
டெஹ்ரா பே சொன்னார். “நரம்புகள் மூலமாகவே வலி மூளைக்கு உணர்த்தப்படுகிறது. அவற்றின் சில சூட்சும மையங்களை அறிந்து விரல் அழுத்தத்தினால் அந்த மூளைக்கு இரத்த ஓட்டம் செல்ல தடை செய்தால் அந்த நரம்பு மையங்கள் அனஸ்தீஷியா (மயக்க மருந்து) கொடுத்தது போல உணர்விழந்து போகும். வலி தெரியாது. ஆனால் இதைக் கடும் பயிற்சி மூலம் தான் கற்றுத் தேற முடியும். அப்படியில்லாமல் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இதை யாராவது முயற்சித்தால் உயிருக்கு ஆபத்தாகவே முடியும். இதைச் செய்யும் போது மன ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் இறுக்கமற்ற முறையில் தசைகளையும் நரம்புகளையும் வைத்திருக்க வேண்டும். நாக்கை உள்ளிழுத்து ஆழ்மயக்க நிலைக்குப் போவதற்கும் முறையான பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். இதில் இந்திய யோகிகள் கைதேர்ந்தவர்கள்.
பால் ப்ரண்டன் சுவரசியத்துடன் கேட்டார். “ஆழ்மயக்க நிலைக்குச் சென்ற பிறகு என்ன ஆகிறது?
ஆழ்மயக்க நிலைக்குச் செல்லும் முன்பே எந்த நேரத்தில் திரும்ப சுயநினைவுக்கு வரவேண்டும் என்பதனை ஆழ்மனதில் முன்பே குறித்துக் கொண்டு விட வேண்டும். குறித்த காலத்தில் ஆழ்மனம் தானாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடும். மேல்மனம் உறங்கி விட்டாலும் ஆழ்மனம் எப்போதும் உறங்குவதில்லை. இது பெரிய விஷயமல்ல. மறு நாள் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து அப்படியே அலாரம் இல்லாமல் விழித்தெழுவது பலருக்கும் முடிகிறது. அதே போல் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவர்கள் அந்த உறக்க நிலையிலும் எத்தனையோ வேலைகளைத் தங்களை அறியாமலேயே செய்வதையும் நாம் சர்வசகஜமாகப் பார்க்கிறோம். நரம்பு மையங்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்மயக்க நிலைக்குச் சென்றவுடன் உடலில் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது. சுருக்கமாக உடலின் எல்லா இயக்கமும் ஸ்தம்பித்து நின்று விடுகிறது.
“பல முறை குத்திய பிறகும் உங்கள் உடலில் காயமோ, காயத்தின் தழும்போ இல்லாமல் இருந்தது எப்படி?
அதை நான் இரு விதங்களில் சாதிக்கிறேன். முதலில் என் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக அதிகரிக்க வைக்கிறேன். அதனால் இதயத்துடிப்பு அதிகமாகிறது என்றாலும் அது தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். இரத்த ஓட்டம் அத்தனை வேகமாகச் செல்வதால் காயங்கள் என் மன உறுதியின் தன்மையிலேயே குணமாகி விடுகின்றன. அடுத்ததாக இரத்தத்தின் சூட்டை நான் அதிகமாக்குகிறேன். அந்த சூட்டில் ஏதாவது கிருமிகள் காயங்களில் நுழைந்திருந்தாலும் அவை உடனடியாக அழிந்தும் போகின்றன. இந்த இரண்டையும் செய்வதால் சாதாரண காயங்கள் உடனடியாகவும், ஆழமான காயங்கள் சில மணிகளுக்குள்ளும் ஆறி விடுகின்றன
டெஹ்ரா பே எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக விளக்கிய விதம் பால் ப்ரண்டனை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அடுத்தபடியாக அவரை மிகவும் பிரமிக்க வைத்த முக்கிய நிகழ்ச்சி பற்றி கேட்டார். “உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி?
(தொடரும்)
- என்.கணேசன்

Friday, October 28, 2011

மன அமைதிக்கு மார்கஸ் அரேலியஸ்


 
அரசாள்பவர்கள் தத்துவஞானிகளாக இருப்பது மிக மிக அபூர்வம். அப்படி வரலாறு பதிவு செய்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் சக்கரவர்த்தியாக ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஆண்டவர் என்றால் இரண்டாம் நூற்றாண்டில் (26-4-121 முதல் 17-3-180) வாழ்ந்த ரோமானிய சக்கரவர்த்தியான மார்கஸ் அரேலியஸைத் தவிர வேறு யாரும் பெரிய அரச பதவியுடன் தத்துவ ஞானியாகவும் பிரகாசித்ததில்லை.
ஹெராடியன் (Herodian) என்ற வரலாற்றாசிரியன் கூறுகிறான். “தான் ஒரு ஞானி என்பதை வார்த்தைகளாலும், அறிவுரையாலும் தெரிவித்தது மட்டுமல்லாமல் பண்புகளாலும், வாழ்ந்த முறையாலும் உணர்த்திய மார்கஸ் அரேலியஸ் வரலாறு கண்ட சக்கரவர்த்திகளில் தனித் தன்மை வாய்ந்தவரே 
அகண்ட சாம்ராஜ்ஜியத்தை ஆள்வது எந்தக் காலத்திலும் சுலபமாகவோ, மன நிம்மதிக்குத் தகுந்ததாகவோ இருந்ததில்லை. ரோமானிய சாம்ராஜ்ஜியமும் அதற்கு விதிவிலக்கல்ல. மார்கஸ் அரேலியஸ் நிர்வாகத்தை நடத்த அடுத்தவர்களை விட்டு விடவில்லை. போர் புரிய தளபதிகளை அனுப்பி விட்டு தத்துவ ஞானத்தில் ஆழ்ந்து விடவில்லை. ஆட்சி புரிவதிலும், போர் புரிவதிலும் அவர் நேரடியாகப் பங்கு வகித்தவர். அவருடைய ஒரே மகன் பண்புகளில் அவருக்கு ஏற்ற மகனாக இருக்கவில்லை. ஆட்சி, நிர்வாகம், போர், குடும்பப் பிரச்னைகள் இத்தனைக்கும் நடுவில் அவர் தனக்கு அறிவுரையாக தானே சொல்லிக் கொண்டவை இன்றும் தத்துவஞானத்தில் தலைசிறந்த நூலாக கருதப்படுகிறது.
மன அமைதிக்கான அறிவுரையாகவும், ஆட்சி நலன், ஆன்மீகம் குறித்த உயர் கருத்துகளைக் கொண்டதாகவும் “எனக்கு (To Myself) என்ற தலைப்பில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூறிக்கொண்ட அந்த அறிவுரைகள் அவர் காலத்திற்குப் பின் “தியானங்கள் (Meditations)” என்ற பெயர் மாற்றத்துடன் பிரபலமாக ஆரம்பித்தது. மகா ப்ரெடெரிக் (Frederick the Great) போன்ற மாமன்னர்கள், கதே (Goethe) போன்ற தத்துவ ஞானிகள், மற்றும் பல்வேறு அறிஞர்கள் முதல் பாமரர்கள் வரை பலருக்கும் அறிவு விளக்காக விளங்கிய அந்த நூலில் மன அமைதிக்கு மகத்தான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான அறிவுரைகளை இனி பார்ப்போம்.
வாழ்க்கை முறையில் ஒழுங்கும் அமைதியும் இருந்தால் தானாக மன அமைதி கிடைத்து விடும் என்பது மார்கஸ் அரேலியஸின் முக்கியமான சிந்தனையாக இருந்தது. அவர் கூறுகிறார்:
எல்லா காரியங்களும், எண்ணங்களும் ஒரு தர்மத்திற்குள் அடங்கி நிற்கும்படி செய்து கொள்வாயாக! அதுவே அமைதிக்கு வழி.
மனமொவ்வாத செயலைச் செய்யாதே. சமூக நன்மைக்கு மாறுபாடாகவாவது விவேகக் குறைவாகவாவது மனப் புகைச்சலுடன் நடந்து கொள்ள வேண்டாம். பேச்சுத் திறமையால் உண்மையை மறைக்க வேண்டாம். வீண் பேச்சு பேச வேண்டாம். பிறர் காரியத்தில் பயனின்றி தலையிட வேண்டாம். உனக்குள் உள்ள பரம்பொருளைக் கௌரவிப்பாயாக. எந்த நிமிடமும் உலகத்தை விட்டுப் பிரிய தயாராக இரு. சாட்சியாவது உத்தரவாவது வேண்டப்படாத சத்தியவானாக இரு. உள்ளத்தில் சாந்தத்தை வளர்த்துக் கொள்.
நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்தும் நம்மால் மாற்ற முடியாத விஷயங்கள் குறித்தும் கவலை கொள்வது சிறிதும் அறிவுடைமை அல்ல என்பதையும் அவற்றை ஏற்றுக் கொள்வது மிக அவசியம் என்றும் அவர் சில இடங்களில் அழகாகக் கூறுகிறார்:
விதியால் வந்த சுகமும் விலக்க முடியாத துக்கமும் உலகத்தை நடத்தும் தெய்வம் கொடுத்த வரப்பிரசாதமென்று வணக்கத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எது நேர்ந்தாலும் “இது ஆண்டவன் செயல். இது நெய்யும் வஸ்திரத்தில் ஊடும் பாவு போல உலக வாழ்வின் இயல்பில் நெய்யப்பட்ட ஒரு சம்பவம். இதை நான் ஏன் துக்கமாக பாவிக்க வேண்டும்?என்று கேட்டுக் கொள்.
நமக்கு முன்பும் பின்பும் கணக்கிட முடியாத காலம் இருக்கையில் நீர்க்குமிழி போன்ற இந்த நிலையில்லாத குறுகிய வாழ்க்கைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து கவலை கொள்வது அர்த்தமில்லை என்கிறார் மார்கஸ் அரேலியஸ்.
உலகில் எவ்வளவு விரைவில் எல்லாம் அழிந்து விடும் பார். கழிந்து போன யுகங்கள் கணக்கற்றவை. வருங்காலமும் அளவற்றது. இதற்கிடையில் புகழ் என்றால் என்ன? உன் புகழ் ஒரு சிறு குமிழி போன்ற பொருளில்லாத ஆரவாரமே அல்லவா?
முந்தியும் பிந்தியும் ஆதியந்தமற்ற அகண்ட கால அளவுகள் இருக்க மத்தியில் வரும் இந்த அற்பங்களைப் பொருட்படுத்துவது என்ன அறியாமை!
எதைப் பற்றியாவது மிகக் கவலை கொண்டவர்களையும் பெரிய புகழ் பெற்றவர்களையும் நினைத்துப் பார். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே? அவர்களது பெருமையும் பகைமையும் இப்போது எங்கே? புகையும் சாம்பலுமாகிப் போன கதை தான். அக்கதையைக் கூட ஒரு சிலர் தான் சொல்கிறார்கள். அது கூட விரைவில் மறக்கப்பட்டு விடும்.
அடுத்தவர்களால் மன நிம்மதியை இழப்பது நம் வாழ்வில் அதிகம் நடக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நம் மன நிம்மதியின்மைக்குக் காரணமே அடுத்தவர்கள் தான் என்று நம்பும் அளவில் பெரும்பாலோர் இருக்கிறோம். அப்படிப்பட்டோருக்கு அருமையாக மார்கஸ் அரேலியஸ் சொல்கிறார்.
எவனாவது ஒருவன் வெட்கமின்றி நடந்து கொண்டு அதற்காக நீ கோபம் கொண்டாயானால் உடனே உலகில் வெட்கமின்றி நடப்பாரே இல்லாதிருக்க முடியுமா? என்று கேட்டுக் கொள். இல்லை எனில் ஏன் கவலைப்படுகிறாய்?
அறியாதவன் அறியாதவனைப் போலத் தானே நடப்பான். இதில் என்ன அதிசயம். அதனை எதிர்பாராதது உன் பிழையே.
வெள்ளரிக்காய் கசக்கிறதா தூர எறிந்து விடு. வழியில் முள்ளா விலகிப் போ. அதை விட்டு விட்டு வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது, முள் ஏன் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் இறங்குவது அறிவீனம்.
எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் மார்கஸ் அரேலியஸ்:
ஒரு துன்பம் நேரிடின் அதைப் பற்றி எண்ணுவதை விடு. எண்ணுவதை விட்டால் துன்பம் நேரிட்ட நினைவு போகும். அந்த நினைவு நீங்கிய பின் துன்பம் எங்கே?
இன்பமும் துன்பமும் உள்ளத்தின் ஆதினமே; உள்ளத்தின் எண்ணங்களே அவைகளுக்குக் காரணம் என்ற உண்மையை அறிந்து நடந்தாயானால் கடவுளைக் குறை கூறவோ, மனிதர்களை வெறுக்கவோ மாட்டாய்.
மொத்தத்தில் இயற்கையாகவும் எளிமையாகவும் வாழ முற்படுவது மனிதன் மன நிம்மதியாக இருக்க மிகவும் உதவும் என்கிறார். எனவே இயற்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார்:
மரத்தில் உண்டாகிக் கீழே விழுந்து போகும் பழத்தைப் பார். தன் வாழ்க்கையை எவ்வளவு சந்தோஷமாகவும் லகுவாகவும் நடத்தி மரத்திலிருந்து நழுவி தான் பிறந்த மண்ணில் மறுபடி அடங்கிப் போகிறது. அதைப் பின்பற்றுவாயாக!
இது போன்ற இதயத்தை அமைதிப்படுத்தும் எத்தனையோ எண்ணங்களையும், அதற்கான வழிமுறைகளையும் அவர் தன் தியானங்கள் நூலில் கூறியுள்ளார். மன அமைதி இழந்து தவிக்கும் மனிதர்கள் அவர் நூலை அடிக்கடி படிப்பதும், உணர்வதும், கடைபிடிப்பதும் இழந்த அமைதியை திரும்பப் பெற கண்டிப்பாக உதவும்.
-          என்.கணேசன்
-          நன்றி: ஈழநேசன்

Friday, September 9, 2011

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-10
மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்
அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தன் சக்திகளை வெளிக்காட்ட டெஹ்ரா பே சம்மதித்தவுடன் பால் ப்ரண்டன் சில மருத்துவர்களையும், சில அறிஞர்களையும் அழைத்துப் பேசி அவர்கள் கண்காணிப்பில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு டெஹ்ரா பே அரபு உடையில் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அறையில் ஒரு மேசையில் அவர் பயன்படுத்த இருக்கும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. கூர்மையான வாள்கள், கத்திகள், அரிவாள்கள், நீண்ட ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மேசையில் நீண்ட கூர்மையான ஆணிகள், சுத்தியல், ஒரு பெரிய கனமான பாறைக்கல், எடை பார்க்கும் கருவி ஆகியவை இருந்தன. ஒரு கூடையில் ஒரு வெள்ளைக் கோழியும், சாம்பல் நிற முயலும் இருந்தன. பெரிய சவப்பட்டி, அதை விடப் பெரிய இன்னொரு பெட்டி ஆகியவையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
முதலில் மருத்துவர்களும், கண்காணிக்க வந்த மற்ற அறிஞர்களும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்த்தனர். எல்லாம் உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின் அவர்கள் முன்னிலையில் தன் சாகசங்களைச் செய்து காட்ட டெஹ்ரா பே ஆரம்பித்தார்.
முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தினார். இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தியபடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் ஒருவித மயக்க நிலைக்குப் போய் விட்டார். அவர் கண்கள் மூடின. ஒரு அமானுஷ்யமான சத்தம் அவருள்ளில் இருந்து எழுந்தது. உடல் மரக்கட்டை போல ஆகியது. அப்படியே சாய்ந்த அவரை அவருடைய உதவியாளர்கள் மட்டும் பிடித்திருக்கவில்லை என்றால் கீழே விழுந்திருப்பார்.
ஒரு உதவியாளர் நீண்ட வாள்கள் இரண்டை எடுத்து ஒரு நீளமேசையில் கூர்மையான பகுதிகள் மேலிருக்கும்படி பதித்து வைத்தார். பின் டெஹ்ரா பே அவர்களின் இடுப்பு வரை உள்ள உடைகளைக் களைந்து அப்படியே அந்த வாள்கள் மீது உதவியாளர்கள் இருவரும் மல்லாக்க படுக்க வைத்தனர். ஒரு வாள் அவருடைய தோள்பட்டைகளுக்கு அடியிலும், இன்னொரு வாள் அவருடைய முட்டிகளுக்கு அடியிலும் இருக்கும்படி படுக்க வைத்திருந்தனர். மருத்துவர்கள் அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்தனர். நாடித்துடிப்பு அதிகமாய் (130) இருந்தது.
அங்கு வைத்திருந்த பாறையை எடுத்து அங்கிருந்த எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தனர். 90 கிலோகிராம் எடை இருந்தது. அதை இருவரும் தூக்கி டெஹ்ரா பேயின் வயிற்றின் மீது வைத்தனர். அவருடைய உதவியாளர்களில் ஒருவன் பெரிய சுத்தியலை எடுத்து அந்தப் பாறையை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். டெஹ்ரா பேயின் உடலோ இரும்பாய் இறுகி இருந்தது. அவர் உடலில் எந்தப் பெரிய பாதிப்பும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தப் பாறை இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்தது.
டெஹ்ரா பே அவர்களை அவர்கள் எழுப்பி உட்கார வைத்தனர். மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதித்த போது அவர் வயிற்றில் பாறை இருந்து அழுத்திய அறிகுறிகள் தெரிந்தாலும் அவர் முதுகுத் தோலில் எங்குமே வாள் அழுத்திய காயம் தென்படவில்லை. எந்த வலியாலும் அவர் அவஸ்தைப்பட்டது போலவும் தெரியவில்லை. ஏதோ மலர்ப்படுக்கையில் படுத்து எழுந்தது போல் இருந்த டெஹ்ரா பேயை மருத்துவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தக் காட்சி பால் ப்ரண்டனுக்கு இந்தியாவில் காசியில் கண்ட சில பரதேசிகளை நினைவுறுத்தியது. கூர்மையான ஆணிகளில் அமர்ந்தும் படுத்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்த அந்த பரதேசிகளை யோகிகளாய் அவரால் நினைக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த சமயத்தில் அவரை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.
அடுத்ததாக ஒரு மரப்பலகை முழுவதும் ஆணிகளின் கூரிய முனைகள் மேற்பக்கம் நீட்டிக் கொண்டிருக்க அந்த ஆணிகள் மேல் டெஹ்ரா பேயைப் படுக்க வைத்தார்கள். உதவியாளர்களில் ஒருவன் தாவிக் குதித்து ஆணிகள் மீது படுத்திருந்த அவர் மீது நின்றான். ஒரு கால் அவர் நெஞ்சிலும், ஒரு கால் அவர் வயிற்றிலும் இருந்தன. பார்வையாளர்கள் ஒரு கணம் காணக் கூசி கண்களை மூடினார்கள். ஆனால் அந்த உதவியாளன் கீழே இறங்கிய பின் அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் முதுகில் ஆணிகள் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வியப்புடன் கவனித்தனர்.
மயக்க நிலையிலிருந்து மீண்ட டெஹ்ரா பே சில நிமிட ஓய்வுக்குப் பின் தன் உடல், வலிக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்க வேறு சில சோதனைகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். மருத்துவர்களைப் பெரிய ஊசிகள் எடுத்து தன் கன்னங்களில் குத்தச் சொன்னார். இரு கன்னங்களில் குத்திய ஊசிகள் வாய் வழியே வந்த போதும் அவர் சிறிது கூட முகம் மாறவில்லை. முகத்தில் சில இடங்கள் இது போன்ற ஊடுருவலில் காயம் அடைவதில்லை என்பதை உணர்ந்திருந்த மருத்துவர்களை டெஹ்ரா பே எங்கு வேண்டுமானாலும் குத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தார்.
அவருடைய தாடையில் பெரிய ஊசிகளைக் குத்தினார்கள். முழு விழிப்பு நிலையில் இருந்த போதும் டெஹ்ரா பே எந்த வலியும் இல்லாமல் இருந்தார். மருத்துவர்களில் ஒருவர் ஒரு பெரிய கத்தியை அவர் கழுத்தின் முன் பகுதியில் ஒரு அங்குல தூரம் உள்ளே செலுத்திய போதும் அவர் சாதாரணமாக அமர்ந்திருந்தது அனைவரையும் திகைப்படைய வைத்தது. தொடர்ந்து முகத்திலும் மார்பிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் கீறிய போதும் அவர் காயமடையாதது மட்டுமல்ல ஒரு துளி இரத்தம் கூட அவர் உடலில் இருந்து சிந்தவில்லை. அவர் ஏதாவது மருந்து உட்கொண்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளிலும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை.
ஒரு மருத்துவர் இரத்தம் வருவதைக் காண வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த டெஹ்ரா பே அடுத்ததாக அவர் மார்பில் கத்தியால் குத்திய போது இரத்தம் வரவழைத்தார். இரத்தம் அவர் மார்பை நிறைத்த வரை பார்த்த அந்த மருத்துவர் போதும் என்று சொன்ன போது உடனடியாக இரத்தம் வெளி வருவதை தன் சக்தியால் டெஹ்ரா பே நிறுத்தினார். அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த மார்புக் காயம் இருந்த இடம் தெரியாமல் போகுமாறு குணப்படுத்தியும் காட்டிய போது அனைவரும் பிரமித்துப் போயினர். எரியும் கொள்ளியால் அவருடைய கால்களில் பாதம் முதல் தொடை வரை சூடுபோட்டனர். அதிலும் மனிதர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சுமார் 25 நிமிடங்கள் அப்படி தன் முழு கட்டுப்பாட்டில் உடலை வைத்திருந்த அவர் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் சொன்னார். “நான் முன்கூட்டியே தயார் நிலையில் இல்லாத நேரத்தில் எதிர்பாராதவிதமாய் என்னை கத்தியால் சிறிது கீறினாலும் வலி தாங்காமல் கத்தி விடுவேன்
அடுத்ததாக அவர் கோழி முயல் இரண்டையும் தனித்தனியாக முற்றிலும் நகர சக்தியற்றதாக்கிக் காட்டினார். உயிர் உள்ளது என்பதற்கு அறிகுறியாக அவற்றின் கண்கள் அசைந்தனவே தவிர மேசையின் மீது இருந்த அவற்றால் வேறெந்த விதத்திலும் நகர முடியவில்லை. பின் சிறிது நேரம் கழித்து அவர் லேசாகத் தட்டிக் கொடுத்த பின்னர் தான் அவை அங்குமிங்கும் ஆனந்தமாக ஓடின.
பின் டெஹ்ரா பே உயிருடன் சமாதி ஆகிக் காட்டும் பரிசோதனையில் தன்னை உட்படுத்திக் கொண்டார். சமாதியான பின் முன்கூட்டியே தெரிவித்த நேரத்தில் மீண்டும் உயிர்பெற்றுக் காட்டுவதாகச் சொன்னார். 28 நாட்கள் மண்ணில் புதைந்ததாக அவர் சொல்லி இருந்தாலும் நேரில் பார்த்தவர் பால் ப்ரண்டன் திரட்டிய குழுவில் யாரும் இல்லை என்பதால் அவர்கள் நேரில் காண ஆவலாக இருந்தனர். ஒன்றரை மணி நேரம் அந்த இடத்தில் சமாதியாகி விடுவதாகவும், பின் ஐந்து நிமிடத்தில் உயிருடன் திரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.
முன்பு மயக்க நிலைக்குச் சென்றது போல முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தி, இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தி, பின் நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் உயிரற்ற பிணம் போல சாய அவருடைய உதவியாளர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவர் மூச்சு நின்றது. இரத்த ஓட்டமும் நின்றது. இதை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின் அவர் மூக்கிலும், காதுகளிலும் பஞ்சை அடைத்து ஒரு சவப்பெட்டியில் கிடத்தினார்கள். சவப்பெட்டி உண்மையானது தானா இல்லை ஏதாவது ரகசியக் கதவு இருக்கிறதா என்பதையும் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்தனர். அவரை அதில் கிடத்திய பின் அந்த சவப்பெட்டியை சிவப்பு மணலால் நிரப்பி சவப்பெட்டியை ஆணி அடித்து மூடினார்கள். இன்னொரு பெரிய பெட்டியில் சவப்பெட்டியை வைத்து அதையும் மண்ணால் நிரப்பி மூடினார்கள். இது நடைபெற்ற இடம் கெய்ரோவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் மாடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் என்பதால் இரகசிய சுரங்கப்பாதை தரையில் இருக்க வழியில்லை என்றாலும் அதையும் ஒரு முறை பரிசோதித்து அங்குள்ள அறிஞர்கள் திருப்தி அடைந்தார்கள்.
ஒன்றரை மணி நேரம் அனைவர் பார்வையும் அந்த தற்காலிக சமாதிப் பெட்டியில் தான் இருந்தது. ஒன்றரை மணி நேரம் கழிந்த பின் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டது. உள்ளிருந்த சவப்பெட்டி எடுக்கப்பட்டு ஆணிகளைக் களைந்து அதையும் திறந்தனர். பின் அவரை எடுத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். அவர் முன்பே கூறியபடி சில நிமிடங்களில் அவர் கண்கள் அசைந்தன, மூச்சு விடவும் ஆரம்பித்தார்.
தனது ஆழ்ந்த சமாதி உறக்கம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருந்தது என்றும், உடல் முன்பே தன்னால் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில் மறுபடி இயங்க ஆரம்பித்தது என்றும் கூறினார். பால் ப்ரண்டனும், அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களும், பார்வையாளர்களும் மனிதன் நினைத்தால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஓருசில உதாரணங்களிலேயே உணர்ந்த சிலிர்ப்பில் இருந்தனர்.
பின்னர் ஒரு நாள் அவரை பால் ப்ரண்டன் சந்தித்த போது மனித சக்தி எல்லையற்றது என்பதை இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல காலமாக அறிந்திருந்ததுடன் அதில் கற்பனைக்கும் எட்டாத அளவு முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் கூறினார். இதையெல்லாம் வைத்துப் பணமாக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை என்றும் தான் விரும்பா விட்டாலும் இதை ஒரு வியாபாரம் போல செய்வதற்கு தான் வருத்தப்படுவதாகவும் டெஹ்ரா பே தெரிவித்தார். உண்மையில் இது ஒரு விஞ்ஞானம். இதில் நான் பெரிய விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன். ஆனால் உலகம் என்னை வியாபாரியாக்கி விட்டது.
ஆனாலும் பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே அவர்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. இது போன்ற சித்திகள் பெற்ற ஒருசிலர் தங்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கையில் இது எல்லாம் மனிதனால் முடிந்தவையே, தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் ஒருவர் பெற்று விட முடியும் என்று சொல்ல முடிந்த அடக்கம் எத்தனை பேருக்கு வரும் என்ற வியப்பு அவர் மனதில் ஏற்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அவரைக் கேட்டார். “இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?
(தொடரும்)

No comments:

Post a Comment

THANK YOU