Thursday 27 December 2012

பீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்!



டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

சந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது! புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

கனவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாதபடிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

கனவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

அனேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

இப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

எவராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தனிவிக்கிரார்களா என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

என்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனைஎல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

இந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும்போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம்போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

அரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது! இப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

மற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா, யோசித்து மாற்றுவதா என்று பாதுஷாவுக்கு அடுத்த சந்தேகம்  வழக்கம் போல தயாராகி விட்டது!

oooOooo

வால் பையன்கள் காட்டும் பரிணாமம்!


எழுத வேறெதுவும் செமை மொக்கையாகக் கிடைக்காத தருணங்களில் எல்லாம், பரிணாமத்தைப் பிராண்டுவது என்ற நல்ல வழக்கத்தை நம்ம வால்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்! சேக்காளி ராஜன் வந்து அடக்கினால் தான் உண்டு போல!

பரிணாமத்துக்கு முதலில் கொஞ்சம் முன்னுரை, அப்புறம் அந்த
முன்னுரைக்கே விளக்கவுரை, அப்புறம் கொஞ்சம் படங்களோடு என்று பரிணாமப் பிராண்டல்கள் ஆரம்பித்துவிட்ட பிறகு நான் மட்டும் சும்மா இருந்துவிட முடியுமா என்ன?


அதனால் ஒரே ஒரு படம் மட்டும்! இந்தப் படத்துக்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டும் என்று கேட்காமல் இருக்கும் வரை சந்தோஷம்!

oooOooo


வங்கிகள், நிதித்துறை,பொருளாதாரம் பற்றிப் பதிவில் எழுதி நாட்களாகி விட்டதே என்று செய்திகளைக் கொஞ்சம் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். 

அப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது சென்ற வருடம், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, 'உலகப் பொருளாதார நெருக்கடியை நாம் நிறுத்த முடியும்-அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால்!"  என்ற வாசகத்தைப் பார்த்தேன்!  சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான பக்கம் இது! இந்த விவகாரமான படத்தை ஒரு டி ஷர்ட்டில் போட்டு இந்த வலைத் தளத்தில் சொல்லப்பட்ட காரணம்  இது!

"GFCSUCKS.COM aims to stop incessant talking about the Global Financial Crisis and believes it is only making matters worse."

சரிதானா என்று கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்!


No comments:

Post a Comment

THANK YOU