Monday 24 December 2012

களவையும் கற்று மறந்தேன் - 1


இது எப்ப நடந்தது என்று மிகச் சரியாக ஞாபகம் இல்லை. ஏழு வயதில் சின்னப் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்புப் படித்தேன். எனவே ஏழு வயதிற்குப் பின்தான். சின்னப் பெடியளுக்கு அப்ப 'வாச்சர் அப்பா' தான் ஹீரோ. வேறொன்றுமில்லை. பள்ளிக்கூடத்திற்குக் வெளியே ஒரு சின்ன இனிப்புக் கடை வைத்திருந்தார். ஒரு ஒலைக் கொட்டில், அதுக்கு ஒரு மரக்கதவு. மரக்கதவில் 'சோக்குக் கட்டி'யால் எதாவது எழுதியிருக்கும். அதில் எழுதியிருப்பது புரியும் வயசல்ல அது.

வாச்சர் அப்பா கடை என்று பெயர் இருந்தாலும் இது கடை என்ற வரையறக்குள் வருமோ தெரியவில்லை. ஓலைக் கொட்டிலின் முன்புறம் ஒரு சிறிய மரக்கதவு. அதைத் தாண்டி உள்ளுக்குப் போனால் இடப்பக்கத்தில் ஒரு மர மேசை. அதில் நீளமான கண்ணாடிப் போத்தல்கள். போத்தல்கள் எல்லாம் புகை பிடித்தமாதிரி மங்கலாக இருக்கும். தோடம்பழ இனிப்பு, ஐஸ் இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு, மலிபன் பிஸ்கற், என ஒவ்வொன்று ஒவ்வொரு போத்தலினுள். சுருட்டுற் ரொபி என்று இன்னொன்று அநேகமாக ஒரு பொலித்தீன் பைக்குள் இருக்கும். இவ்வளவுதான் 'கடையின்' உள்ளடக்கம்.

கடை அல்லது கொட்டிலின் இன்னொரு பக்கம் ஒரு மண் அடுப்பும் சில சமையல் பாத்திரங்களும் இருக்கும். வாச்சர் அப்பா ஒண்டிக்கட்டை. மனைவி நிறைய நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். பிள்ளைகள் இல்லை.

பள்ளிக்கூடத்தில் இன்டேர்வல் விட்டுவிட்டால் 'கெயார்' இலவச பிஸ்கற்றை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் கையில் ஐந்து சதமாவது இருந்தால் பெடி பெட்டைகள் ஓடிப்போவது வாச்சர் அப்பா கடைக்கு. அவரும் அந்நேரத்தில் செமை பிஸி. ஐந்து சதம், பத்துச் சதம், இருபத்தைந்து, ஐப்பது, ஒருரூபா என்று குற்றிக் காசுகளை எண்ணி கேட்பவற்றைக் கொடுத்து மிச்சக் காசும் கொடுக்கவேண்டும்.

"வாச்சர் அப்பா, வாச்சர் அப்பா, ரண்டு தோடம்பழ இனிப்பு, ரண்டு ஐஸ் இனிப்பு, மிச்சத்துக்குப் பல்லி முட்டை இனிப்பு" என்று ஒன்று ஒரு ஒரு இருபத்தந்து சதக் குற்றியை நீட்டும்.

"எனக்கு ரண்டு தட்டு தேங்காய்ப்பூ ரொபி" என்று இன்னொன்று கத்தும்.

"எனக்குக் கெரியா பருப்புச் சரையைத் தாணோய் பெல் அடிக்கப் போகுது" அன்று இன்னொன்று அவசரப் படுத்தும்.

கடையின் வாசலுக்குக் கிட்ட நின்றுகொண்டு, மேல்வகுப்பு அண்ணாமார் சட்டையின் மேல்ப் பொத்தானைத் திறந்திவிட்டு, மேலே பார்த்துக்கொண்டு "கடக் கடக்" என்று சத்தம் வர சோடாக் குடித்துக் கொண்டிருப்பார்கள். "ஏ/எல் வந்தால் பல்லிமுட்டை இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு என்று வகைவகையாகத் தின்னமுடியாது. சோடாவும் விசுக்கொத்தும்தான்" என்று யாரோ ஒரு முனிவர் சாபம் போட்டிருப்பாரோ?

நானும் ஒரு நாள் ஆசையாக அம்மாவைக் கேட்டேன் , "சோடா வாங்க வேணும், காசு தாங்கோ" என்று

"என்னது, பள்ளிக்கூடத்தில் சோடாவோ? இந்த வயதிலோ?" என்று அம்மா திடுக்கிட்டுக் கேட்டா. பின்னேரம் அப்பா வீட்டில் நிற்கும்போது அம்மா சொல்லிக் கேட்டது "பெரியவருக்குச் சோடா வாங்கக் காசு வேணுமாம்" என்று.

"ஏன் அவருக்கு மீசை முளைச்சுட்டுதாமே?" அப்பா சொட்டை விட்டார்.

ஆனாலும் அடுத்த சிலநாட்களில் அப்பா கடைக்குப் போய் வரும்போது இரண்டு ஒரேஞ் பார்லி + ஒரு நேக்ரோ சோடாவும் கால் றாத்தால் மாறி பிஸ்கட்டும் வாங்கிவந்தார்.

அப்பதான் ஒன்று புரிந்தது பள்ளிக்கூட இன்ரவலில் சோடாக் குடிக்க ஒரு மினிமம் அடிப்படைத் தகுதி இருக்குதென்று : மீசை முளைத்திருக்க வேண்டும். அதுக்குப் பிறகு அப்பாவின் ஷேவிங் செற் 'ரைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அக்காலங்களில் இன்ஸ்டன்ட் ஷேவிங் கிரீம் எல்லாம் இல்லை. ஒரு ஷேவிங் பிரஷ், ஷேவிங் சோப்பு, ஒரு ரேசர், என்று ஒரு செற்' ஆக இருக்கும். அப்பா ஷேவ் எடுப்பதைப் பார்ப்பது ஒரு குதூகலம். ஷேவிங் பிரஷ்'ஐத் தண்ணீரில் நனைத்து, ஷேவிங் சோப்பபில் தேய்த்து நுரை வரச்செய்து அதை முகத்தில் பூசுவார். பிறகு கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டு 'கறுக் கறுக்' என்று சத்தம் வர ரேசரால் வழிப்பார். முகத்தை இடைக்கிடை நெளித்து அஷ்ட கோணலாக்குவதை யாரும் பார்க்கவில்லை என்றுதான் எண்ணியிருப்பார்.

ஷேவிங் செற் கொஞ்சநாட்களில் அலுத்துப் போக அப்பாவின் 'பேர்ஸ்' ஐக் கவனிக்கத் தொடங்கினேன். நல்ல தோலினாற் செய்யப்பட்டது . புதிதாக வாங்கியபோது மண்ணிற நிறமாக இருந்திருக்கும். இப்ப கொஞ்சம் கறுப்பை அண்டிய நிறமாக இருந்தது. சில்லறைக் காசு வைக்க தனியாக ஒரு சின்ன compartment இருந்தது. இது எப்பவின் கொஞ்சம் உப்பிப் போய் இருக்கும்-ஐந்து சதம், பத்துத் சதம், இருபத்தைந்து , ஐம்பது, ஒரு ரூபா என்று

குற்றிக் காசுகளால். தாள்க் காசு இன்னொரு compartment இல் ; கனக்க அலுப்படிக்காமற் சொன்னால் அப்பா பாவித்த பேர்ஸ் , இப்போது நான் பாவிப்பதை விட அதிகம் வித்தியாசமானதல்ல. வித்தியாசம் அந்தச் சில்லறைக் காசுகள் வைக்கும் தனி 'அறைதான்'.

அப்பாவிற்கோ அல்லது அம்மாவிற்கோ அநேகமாக அவர்கள் தரும் இருபத்தைந்து அல்லது ஐம்பது சத்தத்தில் நிறைய இனிப்பு, ரொபி, கறுவாக்கட்டு என வாங்க முடியாது என்கின்ற பொருளாதார பாடம் விளங்கியமாதிரி இருக்கவில்லை. போதாக்குறைக்கு 'சோடா வாங்க' என்று காசு கேட்கவும் முடியாது. (முதலாம் இரண்டாம் வகுப்புப் பெடியங்களுக்கு மீசை முளைக்காது என்று அந்த வயதிலேயே என் சிற்றறிவுக்கு எட்டிவிட்டது !); எனவே அப்பாவின் பேர்ஸ்'சில் கை வைக்கத் தொடங்கினேன்.

இப்போது நான் திடீர் பணக்காரனாய் விட்டேன். ஒவ்வொருநாளும் பள்ளிக்கூடம் போகும்போது குறைந்தது ஒரு ரூபா ஆவது கொண்டுபோவேன். இண்டர்வல் மணியடிக்க பாய்ந்தடித்துக் கொண்டுபோய் வாச்சர் அப்பா கடையில் முன்னுக்கு நின்றுவிடுவேன். ஐஸ் இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு, பருப்புச்சரை, கறுவாக் கட்டு, (சுருள்) , விசுக்கொத்து, அப்பப்ப சோடா என்று நல்ல மிதப்பாகத்தான் கொஞ்சநாள் தின்று தள்ளினேன்.

ஒரு ரூபாவிற்குக் கிட்ட ஏறக்குறையத் தினமும் அபேஸ் பண்ணியும் அப்பா கண்டுபிடித்தமாதிரி இல்லை. எனவே இப்போது இரண்டு ரூபா , மூன்று ரூபா என்று முன்னேறிக் கொண்டிருந்தேன் . சிலநாட்களில் 'மாரித் தவளை' மாதிரி உப்பிப் போயிருக்கும் அப்பாவின் பேர்ஸ் என் கை வண்ணத்திற்குப் பிறகு தேரை மாதிரி ஒல்லியாக போய்விடும். நாள் முழுக்க எப்ப பிடிபடுவனோ என்று பயமாக இருந்தாலும் , தொழிலைக் கைவிடவில்லை. அப்பாவும் பேர்சில் காசு குறைவதைக் கவனித்த மாதிரி இல்லை.

ஒருநாள் மட்டும் அம்மாவிடம் "நீ என்னைக் கேக்காமல் காசு எடுத்தாயோ?" என்று கோவித்துக் கொண்டார். நான் "திடுக் திடுக் கடக் மடக்" என்று நெஞ்சு அடிக்க முழியைப் 'பிரட்டிக்' கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்து ஓரிரு நாட்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்தேன்; அம்மா தந்த இருபத்தந்து சதம், ஐம்பது சதத்தோடு வாச்சர் அப்பா கடை பட்ஜட் முடிந்துபோனது.

அடிக்கடி வாசிப்பீர்கள். விதி வலியது என்று. அதுமாதிரி எனக்கும் ஒரு "சோதனை" வந்தது. பெரிய தம்பிரான் கோவிலோ அல்லது சொத்தி வைரவர் கோவில் திருவிழாவோ- ஏதோ ஒரு திருவிழா. திருவிழா என்றால் இரவுத் திருவிழாதான். பின்னேரத்திற்குப் பின்தான் கோவில் களை கட்டத் தொடங்கும். மேளம், சின்ன மேளம், நாடகம் என்று இரவிரவாகத் திருவிழா நடக்கும். இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு. சிறுவர்களுக்கு கலர் அப்பளம், 'சோக்கட்டி' இனிப்பு, சோடா, பீடா (இதுக்கும் மீசை முளைக்கவேண்டும், களவாகச் சாப்பிடுவோம்), அது, இது என்று தின்பண்டங்கள் இருக்கும். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் விலைவாசி, பணவீக்கம் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள ஆர்வம் இல்லை.

"நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கேக்கை என்ரை ஐயா ஐந்து சதந்தான் தந்துவிடுறவர்" என்று அம்மா வியாக்கியானம் வேறு தருவா.

எனக்கு இப்போது இதைப்பற்றிக் கவலை இல்லை. கவலையெல்லாம் தம்பி பார்க்காமல் இருக்கும்போது இனிப்புக்களை வாங்கவேண்டும். இல்லாவிட்டால் நிறைய வாங்கும்போது ஆள் 'அலேர்ட்' ஆகி வீட்டில் வத்தி வைத்துவிடுவான். பிறகு விளக்கம், விசாரணை என்று.... கஷ்டம்.

No comments:

Post a Comment

THANK YOU