Saturday 15 September 2012

நீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்!



                      வெல்கம் டூ லயன் டேட்ஸ் சிரப்பின் நீயா நானா கோபிநாத்தின் அன்பு வணக்கங்கள் . அதாவது இந்த உலகம் நமக்கானதே என்ற ஒப்பீனியன் நமக்கு எப்பொழுதுமே இருந்தது உண்டு.நம்ம ஜெனரல்லா என்ன நினைக்கிறோம்ன்னா நம்ம மட்டும்தான் இங்க வாழ்றதுக்காக இருக்கிறோம் அப்டின்னு சொல்லி நம்ம தேவைக்கு என்ன என்ன வேண்டுமோ அதெல்லாத்தையுமே செய்யுறோம் , காட்டை அழிக்கிறோம்,பூமியை தோண்டுறோம்,ஆனா இந்த உலகத்தில் மனிதனைத்தவிர வாழ்றதுக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் உரிமை இருக்கிறது அதிகாரம் இருக்குன்றதை நாம மறக்கிறது இல்லை அப்படிப்பட்ட அந்த ஜீவராசிகள் மனிதனிடம் வளர்ப்பு பிராணிகளாக இருப்பதே சிறந்தது என்று வாதாட ஒரு சாரரும் ( வெடக்கோழி வெண்மதி, மீசைக்காரன் பூனை, கெடா கஜா,பசு பானு, நாய் நாதன் )இல்லையில்லை நாங்கள் நாங்களாவே வாழறதுதான் சிறந்தது என்று வாதாட ஒருதரப்பினரும்( சிங்கம் சீனி, புலி புல்லட்,கொசு கோவிந்தன்,நரி நம்பி, மங்கி பிங்கி) வந்திருக்கின்றனர்..




கோபிநாத் : வந்திருப்பவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

வெடக்கோழி வெண்மதி : நான் வெடக்கோழி வெண்மதிங்க கோழிபுரத்தில இருந்து வந்திருக்கேன்.

மீசைக்காரன் பூனை : நான் மீசைக்காரன் பூனைங்க உங்க வீட்டுல இருந்துதான் வந்திருக்கேன்.

கோபிநாத் : ஆஹா வாங்க சார் நான் கூட வழிதெரியாம வராம போய்டுவீங்களோன்னு நினைச்சேன்!

மீசைக்காரன் பூனை : உங்க அளவுக்கு இல்லைனாலும் கொஞ்சூண்டு மூளை எனக்கும் இருக்கே நீங்க புறப்படும்போதே உங்க கார் பேக் சீட்ல ஒளிஞ்சுகிட்டேனே!

கோபிநாத் : அது சரி!!!

கெடா கஜா : நான் கெடா கஜாங்க ஆட்டுக்கார அலமேலு வீட்ல இருந்து வந்திருக்கேன்.

பசு பானு : நான் பசு பானுங்க ராமராஜன் வீட்ல இருந்து வந்திருக்கேன்.!

நாய் நாதன் : நான் நாய் நாதன் நாதன் நாதன் கடிபுரத்திலிருந்து வந்திருக்கேன்.!

கோபி நாத் : நாய் நாதன் உங்க பெயர் வித்யாசமா இருக்கே ஏன் இந்த பெயர் ?

நாய் நாதன் : நாதனை திருப்பி போட்டீங்கன்னா தன்நா நாக்கு இல்லாம நானில்லை இதுதான் என் பெயருக்கு விளக்கம்.

கோபி நாத் : ரொம்ப அழகா சொன்னீங்க நாய் நாதன், எதிர் தரப்பும் தங்களை அறிமுகப்படுத்திக்கங்க.

எதிர்தரப்பு கோஷ்டியினரில் புலி புல்லட் "எங்களைப்பார்த்தாலே எல்லாருக்கும் தெரியும் அதனால அறிமுகம் தேவையில்லையென்று நினைக்கிறோம் இல்லையா சிங்கம்?" என்று தன் கோஷ்டியைப்பார்த்து கேட்க அனைவரும் கோரஷாக ஆமாம் என்றனர்

கோபி நாத் : ஆஹா என்ன ஒரு ஓற்றுமை எதிர் பார்ட்டிகள் கொஞ்சம் உஷாராவே இருங்கப்பா! சரி விஷயத்திற்க்கு வருவோம் நீங்க சொல்லுங்க வெடக்கோழி வெண்மதி வீட்டில் வளர்ப்பு பிராணியா வளர்வதில் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு சங்கடமான , வருத்தமான சூழலே வரவில்லையா?

வெ.வெண்மதி : 99% எங்களுக்கு வளர்ப்பு பிராணியாக வளர்வதில் எந்த ஒரு சங்கடமும் ஏற்படுவதில்லை பொதுவாக சொல்லப்போனால் காட்டில் தேடி தேடி உணவுகளை உண்ணுவது மிக கஷ்டம் அதையும் மீறி ஏதாவது ஒரு விளை நிலத்தில் நாங்கள் போய் இரை தேடப்போகையில் தோட்டத்துக்காரனிடம் பிடிபட்டால் அவன் எங்களை அடித்து குழம்பு வைத்துவிடுவான் அதுதான் கஷ்டப்பட்டு ஏன் உயிரை விட வேண்டும் இஷ்டப்பட்டு உயிரை விடுவோமே என்ற எண்ணம்தான் .அந்த ஒரு பர்சண்டேஜ் தொந்தரவு பக்கத்துவீட்டில் வளரும் சேவல் சேனாதிபதிகளால் ஏற்படுவது அது சகஜம்தானே!

கோபி நாத் : அப்போ உயிர் போனாலும் வளர்ப்பு பிராணியா வளர்ந்து உயிரை விடறதுல உங்களுக்கு இஷ்டம்ன்னு சொல்றீங்க சரி மிஸ்டர் புலி புல்லட் , வெடக்கோழி வெண்மதியோட கருத்துக்கு உங்க பதிலென்ன?

புலி புல்லட் : அந்த வெடக்கோழி வெண்மதிய நீங்க இல்லாட்டி இப்பவே இங்கயே கடிச்சு சாப்பிட்டுடுவேன் ஏதோ நீங்க இருக்கீங்கன்றதால விடறேன் அவங்க சொல்றாங்க கஷ்டப்பட்டு உயிரை விடறத விட இஷ்டப்பட்டு உயிரை விடறதுதான் சரின்னு, வீட்டுல வளர்றதால நிறைய தமிழ் படம் பார்க்குறாங்க போல அதான் சூர்யா கஜினி படத்துல சொல்ற டயலாக்கெல்லாம் வருது அவங்களோட கருத்து முற்றிலும் தவறுங்க கஷ்டப்பட்டு நமக்கு நாமே உணவு தேடி அதை உண்டு வாழ்றதுதாங்க மிகவும் மகிழ்ச்சியானது அது மட்டுமில்லாம யாருக்கும் அடிமையா வாழறதுல எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லீங்க.

கோபிநாத் : சபாஷ் புலி புல்லட் மிகவும் அழகான ஒரு கருத்தை சொன்னீங்க. ஆமா அவங்க வீட்டுல வளர்ந்ததால கஜினி படம் பார்த்தாங்க நீங்க கஜினி படம் பார்த்தீங்க?

புலி புல்லட் : உலகம் முழுவதும் வெற்றிகரமான நூறாவதுநாள்ன்னு தானே போஸ்டர் அடிக்கிறாங்க ஹிஹிஹி

கோபி நாத் : குசும்பு பிடிச்சவரா இருப்பீங்க போலயே புலி புல்லட் ?!! சரி மிஸ்டர் மீசைக்காரன் பூனை, புலி புல்லட் அருமையா அவரோட விவாதத்தை ஆரம்பிச்சு வச்சுருக்கார் அதுக்கு உங்களுடைய வாதம் என்ன?

மீ.கா.பூனை : அடடா நடிப்புல சிவாஜிகணேஷன் தோத்துடுவார் போங்க இந்த புலி புல்லட்டும் அவனோட சாதிக்கார பயலுகளும் பண்ற அட்டகாசம் தாங்க முடியாம மனிதர்கள்கிட்ட வளர்ப்பு பிராணியா இருக்குறதுன்னு முடிவு பண்ணுனேமே!

கோபிநாத் : இதென்ன புதுக்கதை புலிபுல்லட் என்ன பண்ணுனார்?

மீ.கா.பூனை : அதை எப்படி என் வாயால சொல்லுவேன் அதோ அங்க ஒழிஞ்சு நின்னு பாத்துகிட்டு இருக்குற கஸ்தூரி மான் கிட்ட கேளுங்க அவங்களே சொல்லுவாங்க!

கோபிநாத் : மைக்க கஸ்தூரி மான்கிட்ட கொடுங்க.

கஸ்தூரி மான் : ஆமாங்க காட்டுல இந்த புலி குரூப் பண்ற அட்டகாசத்துல என்னோட சொந்தபந்தம் நிறையபேரை நான் இழந்துட்டேன் இவன் இங்க வந்து நடிக்கிறான் இவனோட பொழுதுபோக்கே தன்னோட காட்டுல வாழுற தன்னைவிட வலிமை குறைந்த மிருகங்கள அடிச்சு சாப்பிடறதுதான் இவன் எல்லாம் வீரத்தப்பத்தி பேசவந்துட்டான் பெருசா தூ!

கோபிநாத் : அட டா ப்ச் என்ன புலி இவ்ளோ மோசமானவரா நீங்க? உங்ககிட்ட பேசறதே தப்பு போல அடுத்து மிஸ்டர் நரி நம்பி அவர்களே, கஸ்தூரிமான் இவ்ளோ கொடுமையா உங்க குரூப்னால பாதிக்கப்பட்டுருக்காங்களே சக இனத்தவர்களை நீங்களே கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

நரி நம்பி : அது வந்து சார் நான் என்ன சொல்ல வர்றேனா நீங்க முதல்ல யோக்கியமா உங்க சக மனிதர்களில் பணவசதி குறைந்தவனை பணக்காரர்கள் அடிமைப்படுத்துவது, சுகத்துக்காக கணவனையே விஷம் வச்சு கொல்றது ,  பணத்துக்காக குழந்தைன்னு கூட பார்க்காம கொல்றது இதைவிட நாங்கள் செய்வதொன்றும் பெரிய கொடுமையில்லையே?

கோபிநாத் : மிஸ்டர் நரி நீங்கள் டாபிக்கை திசை திருப்புறீங்க ! உங்க தந்திர புத்தியை காட்டிட்டீங்களே! ம்ம்ம்ம் மிஸ்டர் கெடா கஜா நரியுடைய வாதத்திற்க்கு உங்களுடைய கருத்து என்ன?

கெடா கஜா: அந்த நரிப்பய வடைக்காக காக்கவ ஏமாத்துனவன்தானே இதவிட இன்னும் தந்திரமாவே பேசுவான்!

கோபிநாத் : ஹ ஹ ஹா! சூப்பர் கஜா! மிஸ்டர் .கொசு கொவிந்தன் நீங்க என்னசொல்லப்போறீங்க?

கொசு கோவிந்தன் : எனக்கு இந்த வளர்ப்பு பிராணியா இருக்க விருப்பம்தான் ஆனா வளர்ப்பு பிராணியா வளர்க்க நீங்க ரெடியா?

கோபிநாத் : ஆவ்வ்வ்வ் நீங்க எவ்வளவு போராட்டம் பண்ணுனாலும் அதுமட்டும் முடியவே முடியாது தல நீங்க உங்க விருப்பப்படியே இருங்க வீணா உங்களை வளர்ப்பு பிராணியா வளர்க்கலாம்ன்னு அட்வைஸ் பண்ணி ஊர் மக்கள்கிட்ட அவமானப்பட நான் விரும்பல இவ்ளோ நேரம் பொறுமையா நீங்க உட்கார்ந்ததுக்கே பெரிய கும்புடுண்ணே!

கொசு கோவிந்தன் : பார்த்தீங்களா நான் அளவுல சிறியவன் தான் ஆனா உங்களையே பயமுறுத்தி வச்சுருக்கெனே இதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி !

கோபிநாத் : அது சரி ! யாருப்பா அங்க ஸ்டேஜ் உதவியாளர் அந்த டார்டாய்ஸ் எடுத்து கொளுத்துங்களேன்! அடுத்து மிஸ்டர் பசு பானு இவ்ளோ அமைதியா உட்கார்ந்திருக்கீங்களே உங்களுடைய கருத்துகளை பகிருங்களேன்!

பசு பானு :  எனக்கு இந்த சண்டை இரத்தம் இதெல்லாம் பிடிக்காதுங்க என்னை வளர்க்குறவங்களுக்கு எந்த துன்பமும் நான் கொடுக்குறது கிடையாது நானுண்டு புல்லுண்டுன்னு இருக்கேன் எனக்கும் அவங்க தொந்தரவு கொடுக்குறது இல்லை அதுமட்டுமில்லாம வருடம் முழுதும் அவங்களுக்கு பண்ற உதவிக்காக வருடத்தில் ஒருநாள் எங்களை கொண்டாடுறாங்க அந்த சந்தோஷம் போதும்ங்க எனக்கு வளர்ப்பு பிராணியா வளர்றதுலதான் இஷ்டம்!

கோபிநாத் மற்றும் பசுபானு குரூப் அனைவரும் கைதட்டுகின்றனர்.

கோபிநாத் :மிக சிறப்பான கருத்து பானு சபாஷ்! ம்ம்ம் அடுத்து இந்த எதிர் கோஷ்டிக்கு மட்டுமில்ல காட்டுக்கே ராஜாவான சிங்கம் சீனி உங்களுடைய கருத்தைத்தான் எல்லாரும் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம் ம்ம் சொல்லுங்க!

சிங்கம் சீனி : இந்த நிகழ்ச்சியோட ஸ்பான்ஸர் யாரு சார்?

கோபிநாத் : லயன் டேட்ஸ்

சிங்கம் சீனி : டேட்ஸ் மனிதர்கள் சாப்பிடறது மனிதர்கள் சாப்பிடற டேட்ஸ்க்கே என்னுடைய லோகோ தேவைப்படற அளவுக்கு என்னுடைய வலிமை இருக்கு . இந்த வலிமை எங்க இருந்து வந்தது? காட்டுல தனியா அலைஞ்சு ஓடியாடி திரிஞ்சதுனால வந்ததுதான் இதே நானும் வீட்டுல வளர்க்குற பிராணியா இருந்திருந்தா இந்த பசு பானு மாதிரி உணர்ச்சியில்லா ஜடமாத்தான் இருந்திருப்பென் எனக்கு வீட்டுல வளர்ற பிராணிகளைப்பார்த்து பரிதாபம்தான் வருது சார் அவங்க எல்லாருக்கும் ராஜா என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து என்னுடைய விவாதத்தை முடித்து கொள்கிறேன்.

கோபிநாத் : மிகவும் அழகாக ராஜாவிற்கே உரிய துடுக்குடன் பேசினீர்கள் சிங்கம் சீனி சபாஷ்! இறுதியாக நாய் நாதன் உங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்க..

நாய் நாதன் : என்ன சார் சொல்ல சொல்றீங்க இன்னைக்கு மதியம் என்னை விட்டுப்போட்டு ஊருக்கு போயிட்டார் என்னோட எஜமான். நீங்க கூப்பிட்டீங்கன்னு நான் வீட்டை விட்டுட்டு இங்க வந்துட்டேன் எனக்கு இப்போ ஒரே கவலை வீட்டுல யாரும் புகுந்து எதையும் திர்டிடுவாங்களோ இல்லையோன்னு என்னை விட்டுடுங்க சார் எனக்கு விசுவாசத்தை விட வேற ஒண்ணும் தெரியாது நான் ஒண்ணும் ஏமாத்தியோ அடுத்தவங்க வயித்துல அடிச்சோ வாழலை சாப்பாடு போடறாங்க அதுக்கேத்த மாதிரி நான் அவங்களோட உடைமைகளை பாதுகாப்பா பார்த்துகிடறேன் சுருக்கமா சொன்னா உழைச்சு சாப்பிடறேன் சார் எனக்கு இது பிடிச்சிருக்கு .ஒண்ணே ஒண்ணு சொல்றேன்எங்க வாழ்றோம்ன்றது முக்கியமில்ல சார் எப்படி வாழ்றோம்ன்றதுதான் முக்கியம்நன்றி சார்

கோபிநாத் மற்றும் சிங்கம் குரூப் நாய் குரூப் அனைவரும் பலமாக கைதட்டுகின்றனர் .

கோபிநாத் : அட்டகாசம் நாய் நாதன் பார்த்தீங்களா சிங்கம் சீனி உங்களையே ஆச்சரியப்படுத்திட்டார் இதுதானுங்க உண்மை.  வளர்ப்பு பிராணியா இருக்கீங்களோ இல்லையோ வாழ்றதுல ஒரு நேர்மை வேண்டும்.அதுமட்டுமின்றி எங்கு வாழுகிறோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை தெரிவித்துகொண்டு . மிகச்சிறப்பாக விவாதம் செய்த நாய் நாதனுக்கு வசந்த் & கோ வழங்கும் ஒரு மினி டாய்லெட் பரிசளிக்கப்படுகிறது வாழ்த்துகள் நாய் நாதன்.

No comments:

Post a Comment

THANK YOU