Tuesday 28 August 2012

சுவாமி விவேகானந்தர்-(வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே


39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் விவேகானந்தர் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஓர் உதாரணமான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். சுவாமி கூறியதுபோல் உடல்வலிமை, மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றில் சில பண்புகளை நாம் கடைபிடித்தால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.


1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். 

இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.

அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.

1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற டார்டா குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை  கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார்.  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திர நாதர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி, லக்னோ, ஆக்ரா. பிருந்தாவனம், ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது , எங்கு உறங்குவது என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும், சொற்பொழிவையும் கேட்டு அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார், கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே! நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயது இளம்பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார். சுவாமி விவேகானந்தரின் அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். தன் கண் காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் சுவாமி விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் திரும்பினார் சுவாமி விவேகானந்தர்.

உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம்  “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு, ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர் சுவாமி விவேகானந்தர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் "இராமகிருஷ்ண மிஷன்" என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா ?உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா? தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் சில:-
  • உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்!ஆயிரம் முறை தோல்வி வந்தாலும் ,மீண்டும் ஒரு முறைமுயற்சி செய்! 
  • பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 
  • துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! 
  • கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. 
  • எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. 
  • எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று அஞ்சி கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உனக்கு முன்னால் உள்ள எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அர்த்தம்.

    No comments:

    Post a Comment

    THANK YOU