Saturday 20 July 2013

குரு காத்திருப்பதின் காரணம்




என்தரையெங்கும் சிதறி வழியும்
எழுத்துக்களைப் பொறுக்கிப் பொருத்தி
எதுகை மோனையில் சிக்கிடாத‌
புதுக்கவி புனையும் ஆசையில்
பொருளேது மற்றதாய்ச் சிலவரிகள் ...
கவிதையென‌ எழுதிவிட நினைக்கிறேன்

எதையெதை எழுதினும் ஏதேதோ
கவிதையின் கருவாய் உருவெடுத்து
முன்வந்து நின்று தொலைத்தது!

என்னிலையைச் சொல்ல‌ நினைத்தால்
உலகெங்கும் உவமைக்கா பஞ்சம்?
இங்கெங்கும் இல்லாத உவமையைத்
தேடித் திரிகின்றேன் கொஞ்சம்!

ஒன்றுமற்றதா யொன்றைத் தேடுகையில்
மௌனமும் கூடப் பொருள்கொண்டு
அப்படியொன்று மில்லையெனக் காட்டியது!
விடவில்லை நானும்!

ஒன்றைத் தெரிந்து கொண்டேன்!
அறியாமை யிலிருந்து அறிவுக்கு
இருப்பது ஒருவழிப் பாதையென!
இருப்பதும் ஒரேவழி தானென்று
அப்புறம் தெளிந்தேன்!

வந்த காரியம் மறந்துபோய்
அறிவுப் பாதையின் முடிவு
எதுவென்று காண முயன்றேன்...

முடிவிலா அப்பாதையில்
அறிவின் தொடர்ச்சி அறியாமை
அறியாமையின் தொடர்ச்சி அறிவென‌
மாறிமாறி வந்து கொண்டேயிருக்க...
அடுத்த அறியாமை வரட்டும் என்றே
காத்திருக்கின்றேன்....

காத்திருக்கின்றேன்

No comments:

Post a Comment

THANK YOU