Saturday 20 July 2013

எம்பெருமான் சிவனாரின் உண்மை

சிவன்

எச்சில் உமிழ்ந்தா னொருவன்! அதனால்
உச்சியி லெங்கோ வைத்தாய் அவனை!

அலைய விட்டான் ஒருவன்! அதனால்
குலையா நட்பென‌க் கொண்டாய் அவனை!

கட்டி ய‌ணைத்தா னொருவன்! அதனால்
எட்டி யுதைத்தா யொருவனைச் சினந்து!

ஆறாய்ப் புகழ்ந்தா னொருவன்! அதனால்
மாறாய்ச் சிறையிட் டேய்த்தாய் அவனை!

சிவனே!
ஓதியோரைச் சோதிக்கும் சோதியே!
போதித்துப் போதமளிக்கும் பேறே!
பேதலிக்கும் பேதையைப் பாராயோ?

எந்தை எந்தாய்
என்னுறவு என்மகவு
என்பகை என்னுலகு
யாவும்நீ யானாய்!

பாகமொரு பாதியன்னை பெற்றாள்!
வேகமிகு நதியுஞ்சிரம் பெற்றாள்
நாகனவன் கண்டந்தான் பெற்றான்!
சோகமிகு எனக்கேது மீதமுண்டோ?

நஞ்சுப்பசிக்கு யென்னிடம்
மிஞ்சியதைத் தருவேன்!
கள்ளமனம் கபடகுணம் 
ஆணவத்துட ன‌கம்பாவம்
இத்தனையும் சொத்தாய்ச் 
சேகரித்து யாந்தரும்
பரிசாய்க் கொண்டு
வெள்ளைமனம் சாந்தகுணம்
அடக்கத்துட னன்பருளும்
மாற்றாய்க் கொடுத்து
நற்கதியுந் தருவாயோ?

No comments:

Post a Comment

THANK YOU