Friday 1 March 2013

சங்க கால தண்டனை முறைகள்-ஒன்று

சங்க காலத் தமிழகத்திலும்
அதற்குப் பின்னரும் விநோதமான
தண்டனைகள் வழக்கத்தில்
இருந்தன. அரசன், போரில்
வெற்றி பெற்றால் தோல்வியுற்ற
மன்னர்களின் ஊரைத்
தீக்கிரையாக்குவது, அவன்
மனைவியரின் கூந்தலை அறுத்துக்
கயிறு திரிப்பது, தோல்வியடைந்த
மன்னரின்
திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக்
காலடியில் பலகையாகப்
போடுவது, தோற்ற மன்னரின்
அரண்மனையை இடித்துத்
தரைமட்டமாக்கி அவ்விடத்தில்
கழுதை பூட்டிய ஏரால் உழுவது,
யவனர் போன்ற வெளிநாட்டினர்
பிடிபட்டால் அவர்கள்
தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது,
பெண்ணைத் திருமணம்
செய்யவில்லை என்று பொய்
சொன்னவனை மரத்தில் கட்டிச்
சாம்பல் பூசுவது,
மாற்று மன்னர்களின்
குழந்தைகளை யானையின் காலால்
இடறச் செய்து கொல்வது,
ஒற்றர்களுக்கு மரண
தண்டனை அளிப்பது, கொலைத்
தண்டனை கிடைத்தோருக்குச்
செம்மாலைகளை அணிவிப்பது -
இப்படி எத்தனையோ விசித்திரமான
வழக்கங்களைக் காண முடிகிறது.
1. சிறுமிக்கு மரண தண்டனை
சங்க இலக்கியத்தில் மிகவும்
கொடுமையான செய்தி,
ஒரு சிறுமிக்கு மரண
தண்டனை கொடுத்ததாகும்.
நன்னன் என்ற கொடுங்கோலன்
ஆட்சியில் இது நடந்தது. இதனால்
அவனைக் கண்டித்த பரணர் போன்ற
புலவர்கள் அவன் பரம்பரையில்
வந்த மன்னர்களைக் கூடப் பாட
மறுத்து விட்டனர். பெண்
கொலை புரிந்த நன்னன் மரபில்
வந்த இளம் விச்சிக்கோ என்ற
மன்னனைப் பாட மறுத்து விட்டார்
பெருந்தலைச் சாத்தனார் என்னும்
புலவர் (புறம் 151).
நன்னன் என்பவன்
பூழி நாட்டையாண்ட (கேரளாவின்
ஒரு பகுதி) ஒரு சிற்றரசன்.
நன்னனது தோட்டத்திலுள்ள
மரத்திலிருந்து விழுந்த மாங்காய்
ஒரு கால்வாயில் மிதந்து வந்தது.
அதனை அங்கு நீராடச் சென்ற
ஒரு பெண் எடுத்துத்
தின்று விட்டாள்.
உடனே அப்பெண்ணுக்கு மரண
தண்டனை விதித்தான் நன்னன்.
இதை எதிர்த்த நல்லோர்
அனைவரும் கொதித்து எழுந்தனர்.
அப்பெண்ணின்
நிறைக்கு நிறை (துலாபாரம்)
தங்கம் தருவதாகவும், 81
யானைகள் தருவதாகவும்
பெண்ணின் தந்தை கெஞ்சிப்
பார்த்தார். ஆனால் ஈவு இரக்கமற்ற
நன்னன் அப்பெண்ணின் மரண
தண்டனையை நிறைவேற்றினான்.
இதைப் பரணர் குறுந்தொகைப்
பாடலில் (292) விரிவாக
எடுத்துரைக்கிறார்.

No comments:

Post a Comment

THANK YOU