Saturday 30 March 2013

அறிவினால் வென்ற ஆர்க்கிமிடிஸ்


மந்திரத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். எனவே, மந்திரவாதிகளைக் கண்டு பயந்து அவர்கள் சொல்லும் அனைத்தையும் நம்பி ஏமாறுகின்றனர். மேலும், மந்திரவாதிகளைப் பகைத்துக்கொண்டால் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தி விடுவாரோ என்றும் அஞ்சுகின்றனர். விளைவு, பணத்தையும் பொருளையும் இழப்பதோடு மன நிம்மதியையும் இழந்து புலம்பும் நிலைக்கு ஆளாகின்றனர்.

நமது மன பயமே பல பிரச்சினைகளுக்கு அடிகோலுகிறது. மக்களின் மன பயத்தினைப் புரிந்து கொண்ட மந்திரவாதிகளும் பேய், பிசாசு, ஏவல், பில்லிசூனியம் என்றெல்லாம் சொல்லி மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கின்றனர்.

எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள் - பிரச்சினைகள் வந்தாலும் மதி நுட்பத்தால்- அறிவாற்றலால் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். தமது மதிநுட்பத்தால் சிராக்கஸ் நாட்டினைக் காப்பாற்றிய பெருமைக்குரியவரே ஆர்க்கிமிடிஸ். சிராக்கஸ் நாட்டினை எந்தவித முன்னறிவிப்புமின்றி எதிரிநாட்டுக் கப்பல்கள் முற்றுகையிடுகின்றன. இது, கிறிஸ்து பிறப்பதற்கு முன், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி. அப்போது புழக்கத்தில் இருந்தவை பாய்மரக் கப்பல்கள். எதிரி நாட்டுக் கப்பல்களின் முற்றுகையினால் மக்கள் பட்டினியால் வாடினர்.

மன்னனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மந்திரி, தளபதிகளை அழைத்து ஆலோசனை கேட்டார். அவர்களோ, மன்னா! நம் படைகள் தயாராக இல்லாத நேரத்தில் எதிரி நாட்டுக் கப்பல்கள் நம்மைச் சூழ்ந்துவிட்டன. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையே என்று பதற்றத்தில் இருந்த மன்னனை மேலும் பயப்பட வைத்தனர். இறுதியாக மன்னர், ஆர்க்கிமிடிசை அழைத்து ஆலோசனை கேட்டார். ஆர்க்கிமிடிஸ் மன்னனுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசி, முதலில் மன்னனின் பதற்றத்தைத் தணித்தார்.

பின்பு, ஆழ்ந்து சிந்தித்தார். கடற்கரையில் கட்டப்பட்டிருந்த மதிற்சுவரின்மீது பெரிய லென்சுகளை எடுத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார். காலையில் கிழக்கே தோன்றும் சூரியனின் ஒளிக்கதிர்களை லென்ஸ் வழியாக மேற்குப் பக்கத்திலுள்ள கப்பல்களின் பாய்மரங்களின் மீது குவியச் செய்தார். கப்பலின் பாய்மரங்கள் தீடிரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. (இப்போதுகூட சூரியனின் ஒளிக்கற்றைகளை லென்ஸ் வழியாக ஒரு காகிதத்தின் மீது குவியச் செய்தால் குவிந்த இடம் சற்று நேரத்தில் தீப்பிடிக்கும்). எதிரிப் படைகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தீப்பிடித்து எரிவதற்கான காரணத்தினைப் பகுத்தறிந்து சிந்திக்கக் கூடியவர்கள் யாரும் எதிரிப்படையில் இல்லை. ஏதோ மந்திர சக்தியினால்தான் தீப்பிடித்து எரிவதாக நினைத்து சிறிது பின்வாங்கினர்.

எதிரிகளின் பய உணர்வைப் புரிந்துகொண்ட ஆர்க்கிமிடிஸ், மதில்சுவர்களில் மிகவும் நீளமான நெம்புகோல்களைப் பொருத்தி வெளியே கடற்பக்கம் உள்ள முனையில் சங்கிலியில் கொக்கிகளைப் பொருத்தினார். நெம்புகோல் இயங்கும் புள்ளியிலிருந்து எந்தப் பக்கம் அதிக நீளமாக இருக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கத்தில் குறைவான அழுத்தத்தைக் கொடுத்தாலும் மறுபக்கத்தில் பலமான கனத்தைத் தூக்கிவிட முடியும். இது நெம்புகோலின் தத்துவம்.
இதனைக் கையாண்டு எதிரிகளின் கப்பல்களைக் கொக்கியில் மாட்டித் தூக்க ஆரம்பித்தார். (நிற்பதற்கு ஓர் இடமும், போதிய அளவு நீண்ட ஒரு நெம்புகோலும் கொடுங்கள். இந்தப் பூமியையே அசைத்துக் காட்டுகிறேன் என்று சொன்னவரல்லவா) எதிரிகள் ஏதோ குட்டிச் சாத்தானின் வேலையாக அல்லவா இருக்கிறது. எதிரிகள் எதிர்கொண்டு வந்தால் போரிடலாம். குட்டிச் சாத்தான்களை ஏவிவிடும்போது நம்மால் எதிர்த்து நிற்க முடியுமா என நினைத்து, பயந்து புறமுதுகிட்டு ஓடினர். ஆர்க்கிமிடிஸ் எதிரிகளை ஓடச் செய்தது அறிவாற்றலால்தானே! நாமும் நம் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தால் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு எதிரிகளையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விரட்டியடித்து வெற்றிக் கனிகளைச் சுவைத்து, பாராட்டும் புகழும் பெறலாமே!

No comments:

Post a Comment

THANK YOU